Advaitha

அத்வைதம்:
அத்வைதம் (அ + துவைதம், அத்துவிதம்) இரண்டற்ற நிலை என்று பொருள் தருகிறது. இது இந்து தத்துவத்தில் இறைவனின் தன்மை பற்றிய ஒரு கொள்கை ஆகும். சீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பிரம்மம்|பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மாவாக விளங்குகின்றது என்றும் இத்தத்துவம் கூறுகிறது.

கி.பி. 788-820ம் காலத்தே வாழ்ந்த ஆதிசங்கரர் (இவரது காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு எனவும் ஒரு வாதம் இருக்கின்றது) முதன்முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை.

இவர் கேரளத்திலுள்ள (அன்றைய சேர நாடு) காலடி எனுமிடத்தில் சிவகுரு – ஆரியாம்பாள் தம்பதிகளுக்கு மகனாக அவதரித்தார்.

சங்கரரின் குருவின் பரமகுருவாகிய கௌடபாதர் எழுதிய மாண்டூக்ய காரிகை பிரம்மசூத்திரத்தினை விளக்க எழுந்தது. இதில் கூறப்பட்ட விளக்கங்கள் போதிய தெளிவுடன் காணப்படாமையால் அதனை மேலும் இலகுபடுத்தி விளக்கும் பொருட்டு எழுந்ததுவே சங்கரரின் அத்வைத சிந்தனையாகும்.

அத்துவிதத்தின் நான்கு அடிப்படைக்கொள்கைகள்:

1. என்றும் நிலைத்திருக்கும் பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுதான் ‘ஸத்’ என்றும், (பரப்-)பிரும்மம் அல்லது பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறது. அதைத்தவிர வேறு எதுவும் மெய்ப்பொருளல்ல.

2. பிரும்மம் என்பது பெயர் உருவம் ஆகிய எந்த குணங்களும் அற்றது. அதனால் அதை நிர்க்குணப்பிரும்மம் என்று சொல்லி, நாம் மனதால் நினைக்கக்கூடிய குணங்களுடன் சேர்ந்த கடவுள் என்ற பரம்பொருளை ஸகுணப்-பிரும்மம் என்றும் வேறுபடுத்தவேண்டும்.
பிரம்மம் என்ற சொல் இந்து சமயத்தில் முக்காலும் உண்மையான ஒரே மெய்ப்பொருளைக் குறிக்கும். அனைத்து உபநிடதங்களும் இதைப்பற்றியே பேசுகின்றன. வடமொழியிலிருந்து உருவான இச்சொல்லின் சரியான உருப்பெயர்ப்பு: ‘ப்ரஹ்மம்’.

பிரம்மா, விஷ்ணு, சிவன் எனப்படும் முத்தெய்வங்களில் படைத்தல் செயலுக்குரியவராகக் கூறப்படும் ‘பிரம்மா’ அல்லது ‘பிரமன்’ என்ற ஆண்மைச் சொல்லுடன் அஃறிணைச் சொல்லான ‘பிரம்ம’த்தை குழப்பிக்கொள்ளக்கூடாது. ‘பிரம்மா’ வேறு, பிரம்மம் வேறு.
அடிப்படை மெய்ப்பொருள் அல்லது பரம்பொருள்
எது எது உள்ளதோ அவை யாவற்றிற்கும் பெயரோ, உருவமோ அல்லது இரண்டுமோ இருந்தே தீரும். தங்க ஆபரணங்களெல்லாம் தங்கத்தை ஆதார உண்மையாக உள்ளன. மண்ணால் செய்யப்பட்ட அவ்வளவும் மண்ணை அடிப்படை நிலையுண்மையைக் கொண்டன. திரைக்காட்சியில் தோன்றும் காட்சி அனைத்திற்கும் திரையே கடையுண்மை. அப்படியே உலகில் பெயருடனோ உருவமுடனோ காணப்படும் எல்லாவற்றிற்கும் ஆதார அடிப்படை மெய்ப்பொருள் ஒன்று உளது என்பது எல்லா உபநிடதங்களின் கூற்று. அது ‘பெயர்’ ‘உருவம்’ என்ற வரையறுப்புகளை மீறியது. அதனால் அதை ‘அது’ (வடமொழியில் ‘தத்’) என்று மட்டுமோ அல்லது ‘பிரம்மம்’ என்றோ உபநிடதங்கள் குறிக்கின்றன. ‘பிரம்மம்’ என்ற சொல் ‘வளர்தல்’ அல்லது ‘அதிகரித்தல்’ என்று பொருள்படும் ‘பிருஹ்’ என்ற வடமொழி வினைச்சொல்லிலிருந்து உருவானது.

‘ஸத்’ என்ற ஒரு சொல் போதும்
மாறுதலே இல்லாத கடையுண்மை என்பதை அடிக்கோடிடுவதற்காக அதை ‘பரப்பிரம்மம்’ என்றும் கூறுவதுண்டு. அங்கிங்கெனாதபடி எங்கும் விளங்கியதாய் இருக்கும் இப்பரம்பொருளைப் பற்றி ‘இருக்கிறது’ என்பதைத்தவிர வேறு ஒன்றும் பேசிவிடமுடியாது. வெறுமனே இருக்கும், அவ்வளவுதான். அது பேசாது, பேசவொண்ணாதது; பார்க்காது, பார்க்கவொண்ணாதது; காரணிக்காதது, காரணத்தில் அடங்காதது; காரியம் செய்யாதது; காரியத்தினால் ஏற்படாதது – இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். முக்காலத்திலும் இருப்பதனால் அதை ‘இருப்பு’ என்று பொருளுடைத்த ‘ஸத்’ என்ற ஒரே சொல்லால் வேதங்கள் சொல்லிவிடுகின்றன. ‘ஸத்’ என்றால் நிலை பெயராத உண்மை.

மெய்யுணர்வே நேர்முக அறிவு
பிரம்மத்தைப்பற்றி நாம் அறிவதாகக் கொள்வதெல்லாம் வேதங்கள் சொல்வதன் மூலமே. இவ்வறிவு ‘மறைமுக’ அறிவாகும். பிரம்மத்தைப் பற்றிய ‘நேர்முக’ அறிவை மெய்ஞ்ஞான உள்ளுணர்வு ஒன்றினாலேயே அடையமுடியும். வேறுவழியால் அடைவதல்ல அவ்வறிவு. அறிவதையெல்லாம் அறியச்செய்வதே அந்த மெய்யுணர்வுதான். அதை ஆங்கிலத்தில் ‘Consciousness’ என்றும் வடமொழியில் ‘ஜீவசைதன்யம்’ என்றும் ‘சித்’ என்றும் சொல்வர்.

மெய்யுணர்வு அறியப்படுவதில்லை
மெய்யுணர்வைத்தாண்டி வேறு ஒரு உணர்வோ அறிவோ இருக்கமுடியாது. மெய்யுணர்வுதான் அத்தனை அறிவையும் அறிகிறது. ‘மெய்யுணர்வின்மை’ என்ற அறிவை அறியவும் மெய்யுணர்வு வேண்டும். இருட்டறையில் விளக்கைப் போட்டவுடன் தெரியும் பொருட்களை மட்டுமல்லாது, ஒரு பொருளும் இல்லாதபோது ஒன்றுமில்லை என்ற வெறுமையையும் காட்டிக்கொடுப்பது ஒரே வெளிச்சம் தான். இருட்டாக இருந்தபோது இருட்டைக் காண்பித்துக் கொடுத்ததும் ஒரு வெளிச்சம் தான். அந்த வெளிச்சம் தான் நம்முள்ளிருக்கும் மெய்யுணர்வு. இதுதான் வெளிச்சம் இருக்கும்போதும் வெளிச்சத்தையே நமக்கு விளக்கிவைக்கிறது. அறியப்படும் பொருள் எதையும் நம் அறிவுக்கு விளங்கச்செய்வது நம் மெய்யுணர்வே. ஆனால் மெய்யுணர்வை நமக்கு விளங்கச் செய்வதற்கு வேறு அறியும் திறனோ கருவியோ வேண்டியதில்லை. மெய்யுணர்வு என்பது அறியப்படும் பொருள் அல்ல. எரியும் விளக்கை விளங்கச் செய்வதற்கு வேறு விளக்கு தேவையில்லை. மேலும் தனக்கு அயலான பொருளை அறியும் அறிவானது மெய்யறிவுமல்ல.

எல்லாவற்றையும் கடந்தது

இவ்வுலகனைத்தும் பிரம்மத்தின் வெளிப்பாடு தான். எல்லாவற்றிற்கும் முழு முதற்காரணம் அதுவே. விளங்கிடும் பிரம்மத்தைச் சார்ந்துதான் இவ்வவனி யாவும் விளங்குகிறது. ஆனாலும் பிரம்மத்திற்கு காரண-காரியங்கள் சொல்லப்பட வில்லை. அதனாலேயே அது உலகத்தின் இன்ப-துன்பங்களையும், நல்லது-கெட்டதுகளையும் தொடக்க-முடிவுகளையும் தாண்டிய ஒன்று எனப்படுகிறது. அது எண்ணத்திற்கும் சொல்லுக்கும் புத்திக்கும் அப்பாற்பட்டது. இப்படிச் சொல்வதால் பிரம்மம் [[புத்தம் சொல்லுவதுபோல் சூன்யம் என்றோ அறவே இல்லாத பொருளென்றோ கொள்ளலும் சரியல்ல. பிரம்மத்தை சம்பந்தப்படுத்திப் பேசப்படும் வினைதான் மறுக்கப்பட்டதே யொழிய பிரம்மத்தின் இருப்பு மறுக்கப்படவில்லை.

அத்வைத-விசிஷ்டாத்வைத வேறுபாடு
எல்லா உயிர்களுக்குள்ளும் உயிருக்குயிராக இருக்கும் (ஆன்மா என்று சொல்லப்படும்) மெய்யுணர்வும், எங்கும் நிறைந்து முடிந்த முடிவான உண்மைப்பொருளாக உள்ள பிரம்மமும், ஒன்றே தான் என்பது ஆதி சங்கரர் போற்றிய அத்வைத வேதாந்தத்தின் முடிவு. குடத்துள்ளிருக்கும் வெட்டவெளிக்கும், குடமே இல்லாமலிருக்கும் பரந்த வெட்டவெளிக்கும் வித்தியாசமே இல்லை. வித்தியாசம் இருப்பதாகச் சொல்லப்பட்டால் அது குடம் என்ற ஒரு செயற்கை வரம்பு, ஒன்றை சிறியது போலவும் மற்றொன்றை பெரியது போலவும் பிரித்துக்காட்டுகிறது என்பதுதான். இது அத்வைதம் சொல்கிற சித்தாந்தம்.

இராமானுஜர் போற்றிய விசிஷ்டாத்வைத வேதாந்தத்தின் முடிவு இதிலிருந்து சிறிது வேறுபடுகிறது. ஒரு வெட்டவெளியை சிறியதாகவும் மற்றொன்றை பெரியதாகவும் பிரித்துக்காட்டும் குடத்தை இல்லை என்று மறுக்கமுடியாது. ஆதலால் ஆன்மாவை பரம்பொருளின் (அ-து பிரம்மத்தின்) ஒர் அம்சம் என்றுதான் சொல்லவேண்டும் என்கிறது அந்த சித்தாந்தம்.

பிரம்மத்திற்கு ஒரு செய்கையோ மாறுதலோ கிடையாது. அது ஏதோ செய்வதுபோல் தோன்றினால் அப்பொழுது அதை ‘பரமாத்மா’ என்கிறோம். குருக்ஷேத்திரத்தில் கீதையைப்பேசும் பரமாத்மாவை கிருஷ்ணபரமாத்மா வென்றும், கைலாயத்தில் செயல்படும்போது அதை பரமேசுவரன் என்றும், வைகுண்டத்தில் செயல்படும்போது அதை ஸ்ரீமந்நாராயணன் என்றும் ஸத்யலோகத்தில் படைத்தல் தொழிலில் ஈடுபடும்போது பிரமன் என்றும் சொல்கிறோம். இவர்களெல்லாம் ஒரே பரம்பொருளின் வெளிப்பாடுகள். இவ்விதம் பரமாத்ம தத்துவத்தை (பரம்பொருளை) முதலில் சொல்லி அதனுடைய வெளிப்பாடுதான் பரமாத்மாவென்று பின்னால் சொல்வது அத்வைத வேதாந்தக் கொள்கை. மாறாக, பரமாத்மாவை அடிப்படையாக வைத்து அவருடைய தத்துவம் தான் பரமாத்ம தத்துவம் என்று சொல்வது விசிஷ்டாத்வைத வேதாந்தக் கொள்கை.

பிரம்மம் குணங்களற்றது (‘நிர்க்குணம்’) என்று அத்வைதம் சொல்கிறது. விசிஷ்டாத்வைதம் இதை மறுக்கிறது.

‘ஸத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம’
இது தைத்திரீய உபநிடத்திலிலுள்ள (தைத்திரீய உபநிஷத்) ஒர் முக்கியமான வாக்கியம். ‘பிரம்மம் என்பது உண்மை. பிரம்மம் என்பது மெய்யறிவு. பிரம்மம் என்பது வரையற்றது’. இது அத்வைத மரபில் இவ்வாக்கியத்திற்குச் சொல்லப்படும் பொருள். விசிஷ்டாத்வைத மரபில் உண்மை, அறிவு, வரையற்ற தன்மை இம்மூன்றும் பிரம்மமாகிற பரமாத்மாவின் குணங்கள் என்று கொள்ளப்படுகிறது.

இதனாலேயே பிரம்மத்தை ‘ஸச்சிதானந்தம்’ என்று சொல்வதும் பொருந்தும். அதாவது, ‘ஸத்’ (ஸத்யம் என்ற உண்மை, இருப்பைக் குறிப்பதால்), ‘சித்’ (ஞானம் என்ற மெய்யறிவைக் குறிப்பதால்), மற்றும் ‘ஆனந்தம்’ (வரையற்றது என்றவுடனே குறையற்ற ஆனந்தமும் நிறைபெறுவதால்).

சில மாதிரி மேற்கோள்கள்
“யேனேதம் ஸர்வம் விஜானாதி தம் கேன விஜாநீயாத்” பிருஹதாரண்யக உபநிஷத் 2 – 4 – 14 ‘எதைக்கொண்டு எல்லாம் அறியப்படுகிறதோ அதை எதைக்கொண்டு அறிவது?’

“அணோரணீயாந் மஹதோ மஹீயாந்” மஹாநாராயணோபநிஷத், அனுவாகம் 12 ‘அணுவுக்கணுவானது, பெரிதுக்கும் பெரிதானது’

“யோ புத்தே: பரதஸ்து ஸ:” பகவத்கீதை: 3 – 43. ‘எது புத்திக்கும் அப்பாற்பட்டதோ’.

“ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர-தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோ’யமக்னி: / தமேவ பாந்தம் அனுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி”// முண்டக உபநிஷத் 2 – 2 -10. ‘அங்கு ஆதவனோ சந்திரனோ தாரகைகளோ பிரகாசிப்பதில்லை. மின்னல் கொடிகள் விளங்குவதில்லை. விளங்கிடும் அவனைச்சார்ந்து எல்லாம் விளங்குகின்றன. அவனுடைய் பிரகாசத்தால் இந்த எல்லாமே பிரகாசிக்கின்றன’.

“யதோ வாசோ நிவர்த்தந்தே, அப்ராப்ய மனஸா ஸஹ” தைத்திரீயோபநிஷத்: 2 – 1 – 9 ‘(பிரம்மத்தினிடமிருந்து) அதை அடையமுடியாமல் மனதுடன் கூட சொற்கள் பின்வாங்குகின்றன’.

மகாவாக்கியங்கள்
வேதாந்த நூல்களில் நான்கு வேதங்களிலுள்ள உபநிஷத்துகளிலிருந்து பிரும்மத்தைப் பற்றிய நான்கு வாக்கியங்கள் கடைந்தெடுத்த ஸாரமாகக் கருதப்படுகின்றன. அவையாவன :

“பிரஞ்ஞானம் பிரம்ம” (ஐதரேய உபநிடதம் – ரிக் வேதம்) ‘மெய்யுணர்வே பிரம்மம்’

“அஹம் பிரம்ம அஸ்மி” (பிருஹதாரண்யக உபநிடதம் – யஜுர் வேதம்) ‘நான் பிரம்மமாக இருக்கிறேன்’

“தத் த்வம் அஸி” (சாந்தோக்ய உபநிடதம் – ஸாம வேதம்) ‘அதுவாகவே நீ இருக்கிறாய்’.

“அயமாத்மா பிரம்ம” (மாண்டூக்ய உபநிடதம் – அதர்வ வேதம்) ‘இந்த ஆன்மா பிரம்மமே’

‘பிரம்ம’- சொற்றொடர்கள்

பிரம்மம் என்ற சொல்லிலிருந்து வடமொழியில் பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் சில தமிழிலும் அப்படியே நூல்களில் வழக்கில் உள்ளன. அவைகளில் முக்கியமானவை:

‘பிரம்மஞ்ஞானி’: பிரம்மத்தை நேர்முகமாகவே அறிந்தவர். இவர் பிரம்மமாகவே ஆகிறார் என்பது உபநிடத-வாக்கியம்.

‘பிரம்மஞ்ஞானம்’: பிரம்மத்தைப்பற்றிய நேர்முக அறிவு.

‘பிரம்ம-நிர்வாணம்’: பிரம்மமாகவே ஆகிவிடல்.

‘பிரம்மச்சாரி’: பிரம்மமாகிற வேதங்களை கற்பதொன்றே குறியாயிருப்பவன்.

‘பிரம்மார்ப்பண்ம்’: பிரம்மத்திற்கு அர்ப்பணம்.

‘பிரம்மானுபவம்’: பிரம்மத்தை நேர்முகமாகக்கண்ட அனுபவம்.

‘பிரம்மபாவம்’: பிரம்மமாகவே பார்க்கும் நிலை.

‘பிரம்மோபதேசம்’: பிரம்மமாகிற வேதத்தின் உயிர் மூச்சாகிய காயத்ரீ மந்திரத்தை முறையாக உபதேசித்தல்.

‘பிரம்ம சூத்திரம்’ : பிரம்மத்தைப்பற்றிய பொருளனைத்தும் 555 சூத்திரங்களில் உள்ளடக்கிய பிரமாண நூல்.

ஜீவாத்மா:
3. அனைத்துயிர்களுக்கும் உயிருக்குயிராகவும் அறிவுக்கறிவாகவும் இருக்கும் ஜீவாத்மா, வெறும் தோற்றமான அகில உலகிற்கும் அடிப்படை மெய்ப்பொருளாக இருக்கும் பிரம்மம், ஆகிய இரண்டும் இரண்டல்ல, ஒன்றே.

ஜீவாத்மா அல்லது ஜீவன் சத்துவ குணம் குறைந்த மாயையில், பிரம்மத்தின் பிரதிபலிப்பதால் ஜீவாத்மா தோன்றுகிறான். இதற்கு அடிப்படையான அவித்தையான அந்தக்கரணம் சத்வகுணத்தின் குறைவால் ஞானமும், சக்தியும் சிறிதாக இருப்பவனாக ஜீவன் தோன்றுகிறான்[1]. இதனாலேயே கட்டுப்படாத பிரம்மம், கட்டுப்பட்ட ஜீவனாகத் தோன்றுகிறான்.
ஜீவாத்மாவின் குணங்கள்
அந்தகரணங்களின் மாறுபாடுகளே மாயையின் பரிமாண மாறுதல்கள்தான் ஜீவாத்மா. அவை இச்சை, முயற்சி, வெறுப்பு, சுகம்-துக்கம் முதலியவைகள். இவை தோன்றுவதால் ஜீவன், நான் அனுபவிப்பவன் , நான் செய்பவன், பாக்கியவான் , துர்ப்பாக்கியவான் என்றெல்லாம் சொல்லும்படி மாற்றங்கள் நிகழுகின்றன.

நீரில் தோன்றும் நிலவு, நீர் அசைகையில் அசைவது போலத் தோன்றும். பார்ப்பவரும் நிலா அசைகிறது என்று சொல்லக்கூடும். அதே போல, மனதில் உண்டாகும் பிரதிபிம்பம் சலனப்படுவதாகவு, மாறுவதாகவும் சொல்லும்படி இருக்கிறது. இதனாலேயே சீவன் உலகில் சஞ்சாரம் செய்வதாகவும் சொல்கின்றனர். சீவாத்மா தான் செய்த புண்ணிய-பாவங்களுக்கு ஏற்ப, உலகிலிருந்து இறப்பதாகவும், பிறப்பதாகவும், சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் அலைவதாகவும், தேவயானம், பித்ருயானம் என்ற ஒளி மிகுந்த வழியிலும், இருளடைந்த வழியிலும் போவதாகவும், வருவதாகவும் சொல்கிறார்கள்.

ஜீவாத்மாவின் இலக்குகள்
ஜீவன் இந்த உலகத்திலும், மற்றைய உலகங்களிலும் திரியும் செயல்கள் நடக்கின்றன. சீவனுக்கு அறிவும், திறமையும் குறைவாகக் காணப்படுகிறது. அதனால் விருப்பு, வெறுப்புக்கள் ஏற்படும்பொழுது விரும்பியதை அடையமுடியாமலும், வெறுப்பதை ஒதுக்க முடியாமலும் துக்கப்படுகிறான். அப்போது தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள இறைவனை துதிக்கிறான்.

இறைவனின் கருணையால் தொழில், செல்வம், புகழ், மனைவி, மக்கள் இன்னபிற உலக வாழ்க்கை நலன்களையும் அடைந்து சுகமாக வாழ்கிறான். மற்றும் இம்மைப் பயனுடன் மறுமை நலமான சொர்க்க வாழ்வையும் கூட அடைகிறான்.

ஜீவாத்மாவின் முடிவான இலக்கு
ஆத்ம ஞானம் அடைந்த ஜீவன் எந்த பயனையும் எதிர்பாராமல் ஆசையற்றவனாய் இறைவனை தியானிப்பதன் மூலம் அவருடைய கருணைக் கொடையால் மனத்தூய்மைப் பெற்று குருவிடம் வேத வேதாந்தக் கல்வி கேள்விகளுக்கு தகுதியுடையவனாகி, ஆத்ம ஞானம் பெற்று சீவமுக்தி நிலை அடைந்து, இறப்பிற்குப்பின், பிறவியில்லாப் பெருவாழ்வு எனும் விதேக முக்தி அடைதலே ஜீவாத்மாவின் முடிவான இலக்காகும்.

4. உபநிடதங்கள் மெய்ப்பொருளை குணங்களுள்ளதாக விவரிக்கும்போது அதை (சகுனப் பிரம்மம்) ( உருவத்துடன் கூடிய இறைவன்) இடைநிலை விள்க்கங்களாகவும், குணங்களற்றதாக விவரிக்கும்போது அதை (நிர்குணப் பிரம்மம்) [உருவம் அற்ற இறைவன்) கடைநிலை விளக்கமாகவும் கொள்ளவேண்டும்.

இதனையே சுருக்கமாகச் சொல்வதாயின்…

1. பிரம்மத்தின் இரண்டற்ற நிலை.
2. பிரம்மத்திலிருந்து ஆன்மா வேறுபடாத நிலை.
3. உலகத்தின் உண்மையற்ற நிலை.
எனக் கூறலாம்.
ஆன்மா குறித்த ஏனைய தத்துவங்கள்
சமணம், பௌத்தம், துவைதம், விசிஷ்டாத்வைதம் முதலியன ஆன்மா குறித்த ஏனைய தத்துவங்களாகும்.

Related Articles

  • About Sankaracharya & Some Saints
    About Sankaracharya & Some Saints
    Adi Shankara: Adi Shankaracharya was born in the early 9th century AD at Kaladi in Kerala.…
  • Samanam
    Samanam
    சமணம்: இந்தியாவில் தோன்றிய பழைய இறைமறுப்புக் கொள்கைகளை சமணம் என்ற பொதுப்பெயரில் அடையாளப்படுத்துவர். சமணர் என்பதற்கு எளிய வாழ்க்கையையும் துறவு நிலையையும்…
  • Dvaitham
    Dvaitham
    Dvaita Vedanta is a sub-school in the Vedanta tradition of Hindu philosophy. Alternatively known as Bhedavāda,…
  • Visistadvaitha
    Visistadvaitha
    விசிட்டாத்துவைதம்: விசிட்டாத்துவைதம் (விசிஷ்டாத்வைதம்) என்பது காலத்தால் பழமைவாய்ந்து, பின்னர் வந்த வைணவ மகாச்சாரியராகிய இராமானுசரால் புகழ்ப்பெற்ற தத்துவம் ஆகும். பிரம்ம சூத்திரம்,…