Bhavisya Purana-1

முன்னுரை: பதினெண் புராணங்கள் வரிசையில் ஒன்பதாவது பவிஷ்ய புராணம். இதனை பவிஷ்யத் புராணம், பவிஷ்ய புராணம், பவிஷ்யோத்தர புராணம் என்று பலவாறாகக் கூறுவர். இது 15,500 ஸ்லோகங்கள் கொண்ட சிறிய ராஜச புராணம் ஆகும். பவிஷ்யம் என்றால் வருங்காலம் என்று பொருள். இதில் எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை ஞானதிருஷ்டியாலோ (அ) வேறு வகையிலோ அறிந்து கூறப்பட்டிருக்கிறது எனக் கருதப்படும் புராணம். வேத வியாசருக்கு ஆறு சீடர்கள் இருந்தனர். அவர்கள் சுமந்து ஜைமினி, பைலா, வைசம்பாயனர், சுகதேவர், லோமஹர்ஷனர் ஆவர். இவர்களில் சுமந்து பிஷதனிகர்க்குக் கூறிய வரலாறே பவிஷ்ய புராணம்.
புராணம்: பிரம்மா இவ்வுலகை ஆக்கி, காத்து அழிக்கிறார். அவர் அளித்ததே வேதங்கள். அவருக்கு இணையான ஆசானோ, இறைவனோ இல்லை. அவர் அறிவுக்களஞ்சியம். சரஸ்வதி அறிவுக் கடவுள் அதாவது கலைமகள். பிரம்மனுக்கு ஆலயம் கட்டுபவர்க்கு முக்தி கிடைக்கும். பிரம்மன் சுயம்பு. அவர் தனது சக்தியால் இந்த உலகைத் தோற்றுவித்தார். அவர் மானசீகமாக மரீசி, அத்திரி, அங்கிசர், புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர், பிருகு, தக்ஷன், நாரதன் ஆகியோரைத் தோற்றுவித்தார். அவர் மானசீகமாக மரீசி, அத்திரி, அங்கிசர், புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர், பிருகு, தக்ஷன், நாரதன் ஆகியோரைத் தோற்றுவித்தார்.
கணேசர்: மனிதன் ஆணவத்தை அடக்கியாள கணேசரைத் தோற்றுவித்தார். அவரை வழிபட்டே மனிதன் வெற்றி பெற முடியும். அவரை வழிபடுவோர்க்கு எடுத்த காரியங்கள் தடையின்றி வெற்றி பெறும். அவர் சித்திநாதர் என்றும் பெயர் பெற்றார். எனவே, கணேசனை முன்வைத்து மன்னர் ஆட்சி செய்தார். ஆசிரியர் கற்பித்தார். உழவுத்தொழிலும், வாணிகமும் வளர்ந்தன.

2.சூரியன் சரிதம்: இப்புராணத்தில் முக்கிய கடவுள் சூரியன். பிரம்மனின் மானச புத்திரர்களில் தக்ஷப்பிரஜாபதியும் ஒருவர். தக்ஷன் தன் மகள் அதிதியைக் காசியப முனிவருக்கு மணம் செய்து வைத்தார். அவர்கள் சேர்க்கையால் ஓர் அண்டம் உண்டாகியிருந்தது. அது மாறாமல் இருந்திட அது செத்துவிட்டதாகக் கருதினர். அப்போது காசியபர் அண்டம் மடியவில்லை என்றார். அதாவது மார்த்தாண்டம் எனப்பட்டது. அதுவே சூரியன் ஆகும். சூரியன் விசுவகர்மாவின் மகள் ஸம்ஜ்ஞாவை மணந்தார். அவர்களுக்கு யமன் என்ற புத்திரனும், யமுனா என்ற பெண்ணும் பிறந்தனர். ஸம்ஜ்ஞாவால் சூரியனின் ஒளியைத் தாங்க முடியாமல் சாயா (நிழல்) என்றொரு பெண்ணைத் தோற்றுவித்து சூரியனுக்குத் தெரியாமல் தனக்குப் பதிலாக இருக்கச் செய்து அவள் தாய்வீடு சென்றுவிட்டாள். இதனை யாருக்கும் சொல்லக்கூடாது என்று சாயாவிடம் கூற அவள் தனக்குச் சாபம் எதுவும் ஏற்படாத வரை வெளிப்படுத்துவதில்லை என்று வாக்களித்தாள்.
சில நாட்கள் கழிந்தன. விசுவகர்மாவுக்கு தன் மகள் செயலில் ஐயப்பாடு எழ அவள் தந்தை வீட்டை விட்டு வெளியேறி உத்தரகுரு நாட்டில் ஒரு பெண் குதிரையாகித் திரிந்து வந்தாள். நிழலை நிஜம் என்று கொண்டு சூரியன் சாயாவுடன் வாழ்ந்து வருமையில் அவர்களுக்கு ச்ருதஷர்வ, ச்ருதசர்மா, தபதி என மூன்று குழந்தைகள் பிறந்தன. பிற்காலத்தில் ச்ருதஷர்வ சவர்ணி மனு ஆனான். ச்ரதசர்ம சனி கிரகமானது. ஒரு நாள் தபதி, யமுனை இருவர்க்கும் ஏற்பட்ட சண்டையில் உண்மை வெளிப்பட்டது. அப்போது தபதி, யமுனையையும், யமுனை தபதியையும் நதியாகச் சபிக்க இருவரும் நதி ஆயினர். இதனால் கோபமுற்ற சாயாவை யமன் காலால் உதைக்கப் போக யமனின் பாதத்தைப் பூச்சிகள் அரிக்கும் என சபித்தாள். அவ்வமயம் அங்கு வந்த சூரியன் சாபத்தை தான் மாற்ற முடியாது என்றும், அதனால் பாதத்திற்கு ஒன்றும் ஏற்படாது என்றும் கூறியதுடன், தபதி, யமுனை புண்ணிய நதிகளாயின.
அப்போது வேறு வழியின்றி சாயா நிகழ்ந்ததனைத்தும் சூரியனுக்குக் கூறினாள். சம்ஜ்னாவைத் தேடிச் சென்ற சூரியனிடம் விசுவகர்மா அவனிடமுள்ள அதிக தேஜஸை அவளால் தாங்க முடியவில்லை என்று கூறி, சூரியனிடமுள்ள அதிக தேஜஸ்ஸை அகற்றிவிட அவன் மிக்க அழகனானான். இந்நிகழ்ச்சி ஷகத்வீபத்தில் நடந்தது. உத்தரகுரு நாட்டில் சஞ்சனா பெண் குதிரையாக இருப்பதை அறிந்த சூரியன் அங்கு ஆண் குதிரையாக மாறி இருவரும் இணைந்திட அவர்களுக்கு அச்வினி குமாரர்கள் என்ற இரட்டையர் பிறந்தனர். அவர்கள் பின்னர் தேவலோக மருத்துவர் ஆயினர். குதிரைகள் முன் உருவைப் பெற்று வாழும்போது ரேவந்தா, அரஜ்வநிதா என்ற மகன் பிறந்தான். அவன் குஷ்யகர்களின் அரசன் ஆனான்.
சூரியக் கடவுள்
யாஜ்ஞவல்கியரிடம் பிரம்மா கூறினார் :
மூவுலகுக்கும் ஒளி தருபவன் சூரியன். எல்லாவற்றிலும் நிறைந்து ஒளியாக விளங்குகிறான். அவன் கடவுளர்க்கெல்லாம் கடவுளாகி முத்தொழில் புரியும் மூல புருஷனாகிறான். அவனுக்கு இணை யாருமில்லை. என்னை வணங்கி வழிபடுவோர் இறுதியில் என்னை வந்து அடைவர் என்று சூரியன் சொன்னான்.
1. மா என்றால் சூரியன். எனவே சூரியனை வழிபடுவோர் மாதர்கள், ஒரு சமயம் கிருஷ்ணன், ஜாம்பவதி மகனான சாம்பன் தொழுநோயால் அவதிப்பட, அவன், சந்திரபாகா நதிக்கரையில் சூரியனுக்குக் கோயில் கட்டி வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான். ரிஜிஹ்வா என்பவர் ஒரு முனிவர். அவர் அக்கினி தேவனின் பக்தர். அவருடைய பத்தினி நிக்ஷுபா சூரியனை மணந்தாள். தனக்குத் தெரியாமல் நடந்த திருமணம் என்று கோபம் கொண்ட ரிஷி அவர்களுடைய மகன் உபயோகமற்றவனாகச் சபித்தார். இதனால் வருத்தமுற்ற நிக்ஷுபா சூரியனிடம் கூற அவர் ரிஷி சாபத்தை மாற்ற வழியில்லை என்றும், ஆனால் அவருடைய மகனின் புத்திரர்கள் அவர்கள் வம்சத்தில் சிறந்தவர்களாக வாழ்வர் என்றும் கூறி மகிழ்வித்தான்.
மாகப் பிராம்மணர்
அவர்கள் மாகப் பிராமணர்கள் எனப்பட்டனர். அவர்கள் அவயங்கம் (பூணூல்) தரித்து சிறந்த அக்கினி பகவானை வழிபடுவோர் ஆயினர். அவர்கள் வாயைத் துணியால் மூடி தூய்மைபடுத்தினர். அவர்கள் சூரியன் ஆலயத்தில் பூஜை செய்ய நியமிக்கப்பட்டனர். சூரியனை வழிபடும் மற்றவர்கள் போஜகர்கள் எனப்பட்டனர்.
போஜகர்கள்
அவ்யங்கா (பூணூல்) மாகப் பிராமணர்களால் அணியப்படும். அவர்கள் தாடி வளர்ப்பர். வாயைத் துணியால் மூடி இருப்பர். அவ்யங்காவின் அடிப்பகுதியில் விஷ்ணுவும், நடுவில் பிரம்மனும் முனையில் சிவனும் உள்ளனர். மாகர்களை விடப் போஜகர்கள் சிறப்பித்துப் பேசப்பட்டனர். வேதங்களுக்குச் சமமான நதி, அசுவமேத யாகத்திற்கு இணையான யாகம். புத்திர சந்தானத்துக்குச் சமமான மகிழ்ச்சி, சூரியனுக்கு இணையான கடவுள், போஜகர்களுக்கு இணையானவர் யாரும் இல்லை. சூரியனது வம்சமே போஜகர் என்றும், போஜகன் மட்டுமே முக்தி பெறுவான் என்றும் கூறப்படுகிறது.
போஜகர்களைப் பற்றிய மற்றொரு வரலாறும் உண்டு
சுவயம்புவ மனுவின் மகன் பிரியவிரதன் ஷகத்வீபத்தில் சூரியனுக்கு ஒரு கோயில் கட்டினான். அங்கு ஒரு சூரிய விக்கிரகத்தைப் பொன்னால் செய்து வைத்தான். ஆனால், கோயிலில் பூசை செய்யத் தகுதியானவர் எவரும் கிடைக்கவில்லை. எனவே, அவன் சூரியனைப் பிரார்த்தித்து சூரியன் தன் நெற்றியிலிருந்து இருவர், புயங்களிலிருந்து இருவர், கால்களிலிருந்து இருவர், கிரணங்களிலிருந்து இருவர் ஆக எட்டு பேரைத் தோற்றுவித்து கோயிலில் பூஜைக்கு நியமித்தார். இவர்கள்தான் போஜகர்கள். யமுனையின் தென்கரையில் கலாப்ரியா என்ற இடத்தில் சூரியனுக்கு ஒரு கோயிலும் அமைக்கப்பட்டது.
யமன் : யமன் பயங்கர உருவம் உடையவன். அவனுடைய தூதர்கள் யமதூதர்கள் எனப்படுவோர். உயிர்களின் பாவ, புண்ணியங்களைக் குறிப்பிட்டு அவர்களை நரகம் (அ) சொர்க்கத்திற்கு அனுப்பும் பணி, யமனின் உதவியாளர் சித்திரகுப்தனைச் சாரும். பயங்கர பாதை வழியாக இந்த உயிர்கள் யமபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்கள் பாவ கர்மாக்களைப் பற்றி அறிவிக்கப்பட்டு, அதற்கேற்ப நரகத்திற்கு அனுப்பி, அங்கு உயிர்கள் தண்டனை பெறும்.

3.ஆலயங்கள் அமைத்தல்
ஆலய நிர்மாணம் செய்வோர் யாகங்கள் செய்தல், மக்கள் நலனுக்காக நீர் நிலைகள் அமைத்தல் போன்றவற்றால் ஏற்படும், புண்ணியமும் பெறுவதோடு மோக்ஷமும் அடைவர். அழகிய ஆலயமே ஆண்டவன் குடியிருக்கும் கோயில். அதனைச் சுற்றி குளம், நந்தவனம், அன்னப்பறவைகளில் குரல் ஒலித்தல் போன்றவற்றுடன் அமைதி, மகிழ்ச்சி, தருவனவாக அமைய வேண்டும். நன்கு பயிர் விளையும் இடம், தோண்டும் போது மேகம் (அ) பேரிசை ஒலி தரும் நிலம் ஏற்றது. வெண்மை நிற நிலம் அந்தணர்களுக்கும், செந்நிற பூமி க்ஷத்திரியர்களுக்கும், மஞ்சள் நி நிலம் வைசியர்களுக்கும், கருப்பு நிலம் மற்றவர்களுக்கும் உகந்தது என்பர்.
நிலத்தைச் சோதித்து ஏற்க வேண்டும். அதற்காக ஒரு பள்ளம் தோண்டி அந்த மண்ணைத் திரும்பவும் அதிலேயே நிரப்ப மண்மிகுதியானால் அது உயர்ந்த, சிறந்த நிலம் எனக்கருதப்படும். எடுத்த மண்ணும், நிரப்பிய மண்ணும் சமமானால் அது மத்திமம். இத்தகைய நிலம் பரிந்துரைக்கப் படாவினும் அதில் ஆலயம் எழுப்பலாம். ஆனால், பள்ளம் எடுத்த பின் அப்பள்ளத்தை அதே மண்ணால் நிரப்ப முடியாவிட்டால் அந்த இடம் அதமமாகும். அதில் ஆலய நிர்மாணம் கூடாது. சூரியனுக்கு அதற்கேற்ற வழிமுறையில் இடம் நிர்ணயிக்கப்பட வேண்டும். சூரியனுக்கு அதற்கேற்ற வழிமுறையில் இடம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
கோயில் கிழக்கில் வாசல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மேற்கில் அமையலாம். கோயிலுக்கு மேற்கில் குளம், வடக்கில் அக்கினி வழிபாட்டுக்கான இடம் இருக்க வேண்டும். சூரியனுடைய ஆலயத்துக்கு வடக்கு, கிழக்கு, மேற்கில் அரன், அயன், அரி ஆகிய கடவுளர்களுக்கான ஆலயம் அமைக்க வேண்டும். சுற்றிலும் சிறு தேவதைக்கான ஆலயங்கள் கட்டலாம். கோயில் வளாகத்தில் புராண மண்டபம் ஒன்று புராணம் சொல்பவர்களுக்கென இருக்கையுடன் இருக்க வேண்டும். பூசை, அர்க்கியம் ஆகியவற்றிற்கு உதயகால பூஜைக்கு வலப்புறத்திலும், மாலை அர்க்கியத்திற்கு இடப்புறமும் இருக்க வேண்டும். ஆலயங்களுக்கென அமைப்புகள் பற்றி விசுவகர்மா சுமார் 3000 வகைகளைச் சொல்லியிருப்பினும் சில முக்கியமானவற்றைப் பற்றி மட்டும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
1. பல முனைகளுடன் கூடிய பலமாடிவகை மேரு எனப்படும்.
2. ஒரே முனையுடன் கூடியதனால் அது மந்தரம் ஆகும்.
3. அத்தகைய மற்றொரு வகை கைலாயம் எனப்படும்.
4. பல மாடிகள், பல உச்சிகள் கொண்டது விமானச்சந்தம் எனப்படும்.
5. சிகரம், கோபுரம் இன்றி பல மாடிகள் உடையது நந்தனம் ஆகும்.
6. வட்டமாக ஒரே மாடி உடையது சமுத்ரம் எனப்படும். அத்தகைய அமைப்பே விருத்தம் விருஷம் மிருகசிம்மம் என்றும் பெயர் பெறும்.
7. தாமரை மலர் போல், ஒரேமச்சு கொண்டது பத்மம் எனப்படும்.
8. கருடனைப் போன்று அமைப்பு உடையது கருடன் என்றும், ரிஷபம் போன்றது நந்தி என்றும், யானை முதுகுபோல் அமைந்தது கஜகுஞ்சா என்றும் பெயர் பெறும்.
9. குகை போன்றது குகைராஜா எனப்படும்.
10. அன்னம் பறப்பது போல் நீள்வட்டமாக அமைவது ஹம்சம் எனப்படும்.
11. நில அமைப்பு குடம் போன்றது கும்பகடம் ஆகும்.
12. அடித்தளம் சதுரமாய், பல கிளைகளுடன் கூடி, ஐந்து, மச்சு கொண்டது சர்வதோ பத்திர எனப்படும்.
13. சதுர அடித்தளத்தில் ஒரே சிகரத்துடன் கூடியது. சதுரஸ்ர, வவ்ரிஜ்ஹத், சதுஷ்கோண என்று பெயர் பெறும்.
14. ஒரே மாடியுடன் எட்டு பக்கங்கள் கொண்டது அஷ்டஹ்ரம் எனப்படும்.
15. பதினாறு பக்கங்கள் கொண்டு ஒரு மாடி உடையது ÷ஷாடஷ்ர எனப்படுகிறது.

4.விக்கிரகங்கள் (அ) கடவுளர் பிரதிமைகள்
இறைவனின் பலவித திருமேனிகள் பல பொருள்களால் உருவாக்கப்படுகின்றன. அவை தங்க விக்கிரகம், வெள்ளி விக்கிரகம், செப்புத்திருமேனி மற்றும் மண்ணால், கல்லால், மரத்தால் ஆனவை என்று பலவகைப்படும். பொதுவாக உற்சவமூர்த்திகள் பஞ்சலோகம் எனப்படும் ஐம்பொன் கொண்டு வார்க்கப்படுகின்றன. மரத்திருமேனி வழிபாடு நீண்ட ஆயுளும் செல்வமும் அளிக்கும். மண்ணாலானவை எங்கும் மகிழ்ச்சி அளிக்கும். ரத்தினக் கற்களால் உருவாக்கப்படும் விக்கிரகம் வாழ்வில் செழுமை தரும். தங்க விக்கிரகம் வலிமையையும், வெள்ளி உருவங்கள் புகழையும், செப்பு புத்திர சந்ததியையும் தரும். கற்சிலை வழிபாடு நிலபுலன்கள், ஐஸ்வர்யம் அருளும். வைரம் பாய்ந்த தேவதாரு, சந்தன மரம், வில்வம், மாமரம், வேப்பமரம், பலாமரம், சிவப்பு சந்தன மரம் ஆகிய ஏதாவதொரு மரத்தை எடுத்து உபயோகிக்க வேண்டும்.
சூரிய பகவானுடைய திருமேனியை செய்யும் முறை. உருவம் எண்பத்தி நான்கு விரல் அளவு இருக்க வேண்டும். முகம் பன்னிரண்டு விரற்கடை நீளம். அதில் மூன்றில் ஒரு பங்கு முகவாய்க் கட்டை இருக்க வேண்டும். மீதி நெற்றியும், மூக்குமாக அமைய வேண்டும். கண்கள் இரண்டு விரற்கடை. அதில் பாதி கண் விழிப்படலம்; அதில் மூன்றில் ஒரு பங்கு கண்விழி; முகம் முப்பத்திரண்டு விரற்கடை கழுத்தும், மூக்கும் சமமாக இருக்கும். கரங்கள், புஜங்கள், கால்கள், தொடைகள் சமமாக இருக்க வேண்டும். பாதம் ஆறு விரற்கடை நீளம் நான்கு விரற்கடை அகலம் இருக்க வேண்டும். கால் விரல்கள், அவற்றின் நகங்கள் சிறியவையாக இருக்க வேண்டும். புஜம், மார்பு, தொடை, இரப்பை, நெற்றி, மூக்கு, கன்னங்கள் ஆகியவை உயர்ந்து இருக்க வேண்டும். பெரிய கண்கள், சிலந்தி உதடுகள், தாமரை போல் முகம் அமைய வேண்டும்.
விக்கிரகத்தை ஆடை ஆபரணங்களால், மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். மேற்கூறிய அளவில் குறைபாடு ஏதுமின்றி அமையுமாறு மிக்க கவனத்துடன் உருவாக்க வேண்டும். இன்றேல் தீமை விளையும். எனவே, சிற்பக்கலை நிபுணர்களே இறைவன் திருமேனியைப் பயபக்தியுடன் உருவாக்குவர்.

5.சியாமளாவின் கதை
மிதிலா நகரில் ஊர்மிளா என்றொரு பெண்மணி இருந்தாள். அவளுக்கு ஒரு மகனும், மகளும் இருந்தனர். வருமானம் போதாமையால் அவள் அவந்தி நகருக்குச் சென்று ஓர் அந்தணர் வீட்டில் வேலையில் சேர்ந்தாள். ஒருநாள் குழந்தைகளின் பசியைத் தீர்க்க அவர்கள் வீட்டிலிருந்து கொஞ்சம் கோதுமையைத் திருடினாள். ஊர்மிளா தன் பெண் சியாமளாவை யமனுக்குத் திருமணம் செய்து வைத்தாள். பின்னர் அவள் இறந்து விட்டாள். யமன் சியாமளாவிடம் தன் வீட்டில் அவள் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாகச் சுற்றிவரலாம். ஆனால், பூட்டி வைக்கப்பட்டிருக்கும் ஏழு அறைகளைத் திறக்கக் கூடாது; பார்க்கக்கூடாது என்றான். அவ்வாறே நடந்து வந்த சியாமளா ஒருநாள், அவ்வறைகளில் என்ன இருக்கிறது என்ற ஆவல் மேலிட அவற்றை ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்க ஆரம்பித்தாள்.
முதல் அறையில் அவஸ்தயாணக் கொதிக்கும் எண்ணெய் கொப்பறையில் யம கிங்கரர்கள் அவள் தாயாரைத் தள்ளுவதைக் கண்டாள். துயரமுற்ற அவள் அந்த அறையைப் பூட்டிவிட்டு இரண்டாவது அறையைத் திறந்து பார்க்க அதில் அவளுடைய தாயாரை உரலில் போட்டு வாட்டுவதைக் கண்டாள். அதிகம் துயருற்ற அவள் அந்த அறையையும் மூடிவிட்டு மூன்றாவதைத் திறக்க அதில் அவளுடைய தாயாரின் நெற்றியில் ஆணிகள் அடிக்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியுற்றாள். நான்காவது அறையில் அவள் தாயார் கோபம் கொண்ட நாய்களால் கடித்துக் கீறிக்கிடப்பதைக் கண்டாள். மற்ற மூன்று அறைகளில் அவளுக்கு நேரும் கொடுமைகளைக் கண்டு மிகவும் வருந்தி செய்வது அறியாமல் தவித்தாள்.
இதுபற்றி யமனிடம் அவள்கூற, அவன், அவளது தாயார் செய்த குற்றத்திற்காகத் தண்டனைகளை அனுபவிக்கிறாள் என்று கூற, அவரைக் காப்பாற்றும் உபாயம் கூறுமாறு வேண்டினாள். அதற்கு யமன் சியாமளா முற்பிறவியில் எட்டுமுறை புதாஷ்டமி விரதம் அனுஷ்டித்து சேர்த்து வைத்துள்ள புண்ணியத்தைத் தானம் செய்தால் அவருடைய தாயார் நரகத்திலிருந்து விடுபடுவாள் என்று கூறினாள். அவ்வாறே செய்ய அவளுடைய தாயார் நரகம் நீங்கி மோக்ஷம் அடைந்தாள். புதன்கிழமை அன்று வரும் அஷ்டமியில் செய்யப்படும் விரதம் புதாஷ்டமி விரதம் எனப்படும்.

6.ஒரு பிசாசின் கதை
விதிஷ நாட்டில் ஓடும் வேத்ரவதி ஆற்றங்கரையில் ஒரு பிராம்மணன் கொளுத்தும் வெயிலில் மணலில் பிசாசு ஒன்று மிகவும் அவதிப்படுவதைக் கண்டு அதன் மீது தயை கொண்டு அதன் அத்தகைய நிலைக்குக் காரணம் என்ன என்று விசாரித்தான். அப்போது அந்தப் பிசாசு, தான் முற்பிறவியில் ஷிலாபத்திரன் என்ற பெயரில் வாழ்ந்து வந்த வைசியன் என்றும் தன் மனைவி, தன் மக்கள், தன் குடும்பம் என்றே வளமுடன் வாழ்ந்து வந்ததாகவும் கூறினான். எனினும் தான் பிறருக்கு எந்த உதவியும் செய்ததில்லை. முக்கியமாக அந்தணர்களுக்குத் தானம் தருமம் செய்ததில்லை. அவர்களைப் பூசிக்கவும் இல்லை. கவுரவிக்கவும் இல்லை. பிறர்க்கென வாழாமல் தனக்கெனவே வாழ்ந்ததன் பலனாக இந்த ஆற்று மணலில் வறுக்கப்படுகிறேன். நான் கரையேற உதவுங்கள் என்று அந்தப் பிராமணரிடம் பிசாசு கேட்டது.
அப்போது அப்பிராமணர் தான் பத்து ஆண்டுகளுக்கு முன் சுக்கிர துவாதசி விரதம் இருந்ததாகவும், அந்தப் புண்ணியத்தை அந்தப் பிசாசுக்கு தானம் அளிப்பதாகவும் கூறி, அவ்வாறே செய்ய அந்தப் பிசாசு பாவம் நீங்கப்பெற்று நேராக மோக்ஷ உலகத்தை அடைந்தது. சுக்கிர துவாதசியின் விரதப் பெருமை மிகவும் சிறந்தது. அந்தப் புண்ணியத்தை தானமாகப் பெற்ற அந்தப் பிசாசு மோட்சம் அடைந்ததல்லவா!

7.விரதங்களும் அவற்றின் பலன்களும்
முற்கூறிய கதைகளின் மூலம் புதாஷ்டமி விரதம், சுக்கிர துவாதசி விரதபலன்கள் பற்றி கூறப்பட்டன. விரதங்கள் எண்ணில் அடங்கா எனலாம். மேலும் சில விரதங்கள் பற்றி இனி அறியலாம்.
1. புண்ணிய தல யாத்திரைகளால் அமையும் புண்ணியத்தை விட அதிகமான புண்ணியத்தை உபய துவாதசி விரதம் அளிக்கும். நெற்றியில் திருமண், திருநீறு, குங்குமம் போன்ற திலகங்களைப் பக்தியுடன் அணிபவர்களைக் கண்டு பகைவரும், தீய பேய் பிசாசுகளும் ஓடிவிடும்.
2. ஜதிஸ்மார விரதம் என்பது சந்திரோதயம் வரையில் மவுனம் காத்து இறை அருளைப் பெறுதல். ஜதிஸ்மார என்றால் முற்பிறவியில் நிகழ்ச்சிகளை நினைவு கூறுதல் ஆகும்.
3. ரசகல்யாணி விரதம் பார்வதியின் விக்கிரகத்தை நெய்யபிஷேகம் செய்து வழிபடல் ஆகும். இந்த விரதம் பற்றிய விதிமுறைகளைக் கேட்பவர் பிறருக்கு எடுத்துணர்த்துபவர் பார்வதியின் அருளைப் பெற்று அவருடைய இடத்தை அடைவர்.
4. அரித்ரானந்தசாரி விரதம் பார்வதி பரமேஸ்வரனைக் குறித்து அனுஷ்டிப்பது. இதை அனுஷ்டிப்பவர், இதைப் பற்றி கூறுபவர், கேட்பவர் இந்திரலோகம் அடைவர்.
5. மந்தரஷஷ்டி விரதம் பற்றிக் கூறுபவர், கேட்பவர், படிப்பவர் பாவங்களிலிருந்து விடுபடுவர். விரதங்களை அரைமனதுடன் (அ) அரைகுறையாகச் செய்தால் கடவுட்களின் அருளுக்குப் பதில் கோபத்தைப் பெறுவர். அப்போது விஷ்ணுவை ஆராதித்து, நிவேதனம் அளித்து, மந்திர உச்சாடனம் செய்து அகண்ட துவாதசி விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் பகவான் கோபத்திலிருந்து தப்பலாம்.
பெண்களுக்கான விரதங்கள்
ஒரு பெண் பாரினில் அனந்த திரிதீய விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் அசுவமேத யாகப் பலனைப் பெறலாம். விரதங்கள் அனுஷ்டிக்கும் பெண்மணிகள் சிவப்பு நிற ஆடையையும், கைம்பெண்டிர் மஞ்சள் நிற ஆடையையும், கன்னிப் பெண்டிர் வெண்ணிற ஆடையையும் அணிய வேண்டும்.
சூரியனைக் குறித்து அனுஷ்டிக்கப்படும் விரதங்கள்
1. அபய சப்தமி விரதம்-சிராவண மாதச் சுக்கிலபக்ஷத்தில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர் சூரியலோகத்தை அடைவர்.
2. அபயபக்ஷ சப்தமி விரதம்-பவுஷ மாதத்தில் (தை) சப்தமி திதியில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பது சூரியனைப் பூஜித்து, அந்தணர்களுக்கு உணவளித்து, தட்சிணை அளிப்பதால் சதுர்வித புருஷார்த்தங்களைப் பெறலாம்.
3. அனந்த சப்தமி விரதம்-பாத்திரபத (புரட்டாசி) சுக்கில பக்ஷத்தில் அனுஷ்டித்தால் அதன் பலனாக சூரியலோகம் அடையலாம்.
4. பத்திர விரதம்-சூரியன் விக்கிரகத்தை நெய், பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். பகலில் தூங்குவதும் தீய சகவாசமும் கூடாது. சூரியலோகம் கிட்டுவதே இதன் பலன்.
5. கமல ஷஷ்டி விரதம்-ஷஷ்டியிலும், காமத சப்தமி விரதம் சப்தமியிலும் அனுஷ்டிக்கப்பட வேண்டும். மகாசப்தமி விரதம் சப்தமி திதியிலும் செய்யப்படும்.
6. மகாதூய சப்தமி விரதம்-மார்த்தாண்ட சப்தமி விரதம். உபய சப்தமி விரதம் ஆகியவையும் சப்தமியில் செய்யப்படும்.
7. துர்க்கந்த நாசன விரதம்-சூரியனுக்குகந்த மரத்தை ஆனி மாத சுக்கிலபக்ஷத்தில் பூஜிப்பதால் உடலில் கெட்ட வாசனை அகலும்.
8. ஹ்ருதயாதித்வன விரதம்-அனுஷ்டிப்பதால் துன்பங்கள் அகலும்.
9. ஜயவிரதம், ஜயசப்தமி விரதம்-சப்தமியில் அனுஷ்டிப்பது.
10. காமப்ர ஆதித்யாதன விரதம்-சூரியன் வழிபாடு உலக இன்பங்களை அளிக்கும்.
11. மந்தா ஷஷ்டி விரதம்-மார்கழி சுக்கிலபக்ஷ ஷஷ்டியில் மந்தாரபுஷ்பம் கொண்டு சூரியனை வழிபட்டால் மறுபிறவியில் உத்தம குடும்பத்தில் பிறப்பு நிச்சயம்.
12. நரிஜனவிரதம், நிக்ஷு பார்க்க விரதம்-முக்தி அளிக்கும்.
13. ஷர்கா சப்தமி விரதம்-ஐப்பசி திங்கள் சப்தமியில் நீராடி, வெண்ணிற ஆடை அணிந்து கதிரவனை வழிபட்டு பிராமணர்களுக்கு உணவளித்து, தானமும் செய்ய வேண்டும்.
14. சர்வத சப்தமி விரதம்-மார்கழி தேய்பிறையில் செய்யப்படுவது உப்பு, எண்ணெய் நீக்கி சூரியனைப் பூசித்து பிராமணர்களுக்குத் தானம் அளித்தல் முக்தி கிட்டும்.
15. திரிவர்க சப்தமி விரதம்-பங்குனி சுக்கில பக்ஷத்தில் அனுஷ்டிக்க வேண்டும். தீயோர் சகவாசத்தை நீக்கும்.
16. பாபநாசினி சப்தமி விரதம்-பாபத்தை நீக்கும்.
17. பாத்ரபத சுக்கிலபக்ஷ விரதத்தை ஓர் ஏழை செல்வந்தனாக அனுஷ்டிக்க வேண்டும். புலனடக்கம், கோபம் அடக்கம் அவசியம். இது வளர்பிறையில் அனுஷ்டிக்கப்படுவது.
18. ரகசிய சப்தமி விரதம்-எண்ணெய், நீலநிறம், இறைச்சி நீக்கி விரதமிருந்தால் உலகக் கோரிக்கைகள் நிறைவேறும்.
19. ரோகஹராதித்யவன விரதம்-பால் மட்டும் அருந்தி, தரையில் உறங்கி, பல மலர்களால் சூரியனை வழிபட்டால் சகலநோய்களும் நீங்கும்.
20. ரதசப்தமி விரதம்-சூரியன், அவன் தேர், சாரதி ஆகியோரை மார்கழி வளர்பிறை சப்தமியில் வழிபட வேண்டும். மறுபிறவியில் உயர் குலத்தில் பிறப்பு ஏற்படும். அந்தணர்க்கு போஜனம், தானம் அவசியம்.
21. சங்கரநிதி விரதம்-சூரிய வழிபாட்டினால் நீண்ட ஆயுள், நலவாழ்வு கிட்டும். அந்தணரை உண்பித்தல், அவர்க்கு தானம் அவசியம்.
22. சித்தரத சப்தமி விரதத்தில் சூரிய பூஜை வெற்றி தரும்.

மற்ற கடவுளர் வழிபாட்டு விரதங்கள்
வெவ்வேறு இறைவர்களுக்காக அனுஷ்டிக்கப்படும் விரதங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.
1. அனந்த சதுர்த்தசி விரதம்-சதுர்த்தசி அன்று விஷ்ணுவின் விக்கிரகத்திற்கு நெய்யபிஷேகம் செய்து வழிபட்டால் நற்குழந்தைகள் பிறக்கும். மாறாக, சிவபெருமானை வழிபட்டால் எல்லாக் கோரிக்கைகளும் நிறைவேறும்.
2. அசோக விரதம்-அசோக மரத்தை வழிபட்டால் சோகம் நீங்கும்.
3. அஷன்ய ஷயன விரதம்-இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர் நான்கு மாதகாலம் உபவாசம் இருந்து இனிப்பு, பழங்கள் பல கடவுளர்க்குப் படைத்து வழிபட்டால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைக்கும்.
4. அவியோக திருதிய விரதம்-சுக்கில பக்ஷ திருதியை அன்று அதிலும் மார்கழி மாதத்தில் இந்த விரதம் இருப்பின் தம்பதியர் ஒற்றுமை நிலைக்கும். இதில் வேறுவேறு கடவுளர்களையும் வழிபடலாம்.
5. குக்குடி விரதம்-புரட்டாசி மாதத்தில் பார்வதி, பரமேசுவரரை வழிபடும் விரதம் இது. இதில் தாலியை அணிவதும் சேரின் குழந்தைகளின் அகால மரணம் தடுக்கப்படும்.
6. கோவத்ச துவாதசி விரதம்-கார்த்திகை தேய்பிறை, துவாதசியில் பசுவையும், கன்றையும் வழிபடல், பிரம்மச்சரியம் இருந்து, தரையில் உறங்கினால் கோலோகம் கிட்டும். (விஷ்ணுவின் வாசஸ்தலமே கோலோகம் ஆகும்.)
7. கோவிந்த துவாதசி விரதம்-பவுஷம் (தை) மாத சுக்கில பக்ஷ துவாதசியில் அனுஷ்டித்தல் வேண்டும். அன்று பசுக்களுக்கு உணவளித்து, பால் மட்டும் அருந்தி, உப்பைத் தவிர்க்க வேண்டும்.
8. கோஷ்பாத திருதியை விரதம்-புரட்டாசி மாத சுக்கிலபக்ஷ திருதியை அன்று கோ பூசை செய்தால் நலம் பயக்கும். சமைத்த உணவு, எண்ணெய் உப்பு தவிர்க்க வேண்டும்.
9. சரசுவதி விரதம்-நல்ல கல்வி, வித்தை பெற்றிட பதின்மூன்று மாதங்கள் சரஸ்வதி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
10. சாந்தி விரதம்-கார்த்திகை மாதம் வளர்பிறையில் நாராயணனைப் பூஜிக்க வேண்டும். ஓராண்டு உப்பில்லா உணவு கொள்ள வேண்டும். இந்த விரதபலன் குடும்ப ஒற்றுமை தரும்.
11. உல்கா துவாதசி விரதம்-மார்கழி துவாதசி அன்று விஷ்ணுவை ஆராதித்தால் உடல் குறைபாடான ஊமை, செவிடு, தொழுநோய் நீங்கும்.
12. நாக பஞ்சமி விரதம்-பஞ்சமி அன்று உபவாசம் இருந்து நாகப்பிரதிமைக்குப் பாலபிஷேகம் செய்து பூஜித்தால் பாம்பு கடியிலிருந்து தப்பலாம்.
13. மதுக திருதியை விரதம்-பங்குனி மாதம் திருதியைத் திதியில் மரத்துடன் கவுரியைப் பூசித்தால் புத்திர சந்தானம் கிட்டும்.
14. யம விரதம்-உலகத்தில் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற யம விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
15. வட சாவித்திரி விரதம்-புரட்டாசி மாத திருதியை அன்று தொடங்கி மூன்று நாட்கள் உபவாசம் இருந்து சத்தியவான், சாவித்திரி கதையை நினைவு கூற கணவன் மனைவி ஒற்றுமை நிலைக்கும்.
16. விநாய சதுர்த்தி விரதம்-விநாயக சதுர்த்தி அன்று கணேசனைப் பூஜைசெய்து விரதம் இருத்தல் வேண்டும். எள்ளை உட்கொண்டு, அக்னிக்கு நைவேத்தியம் செய்தல் வேண்டும். இதனால் தடைகள் நீங்கி காரிய சித்தி கிடைக்கும். (மேலும் பல விரதங்கள்-அக்னி புராணத்தில் காண்க.)

8.தானமும் தான பலனும்
(தானங்கள் பற்றி அக்னி புராணத்திலும் கூறப்பட்டுள்ளது.) தனம் பெற்றிருத்தல் தானம் அளிக்கவே. உடை, உணவு, நீர், பொன், தக்ஷணை ஆகியவற்றைப் பிராமணர்களுக்குத் தானம் அளிப்பதால் துரதிருஷ்டம் தொலையும். அவர்களுக்கு வாழ்த்து கிடைக்கும். இன்றேல் மறுவாழ்வில் நோய், பசி, உடையின்மை காரணமாய் பிச்சை எடுக்க நேரும்.
யஜ்ஞ, யாகம், சமயச் சடங்குகள் விரதம், தானம், தக்ஷணை இன்றி முடிவு பெறாது. விரதங்கள் பற்பல என்பது போல் தானங்களும் பல வகைகள் ஆகும்.
1. அக்னிஷ்டிக தானம்-குளிர் காலத்தில் ஒவ்வொருவரும் குளிர் காய்வதற்கான அக்னியைக் காலை முதல் இரவு முடிய ஏற்பாடு செய்தல். இதனால் கோரிக்கைகள் நேரும்.
2. அபக தானம்-புத்திரர்கள், பணியாளர்கள், செல்வம் ஆகியன பெற ஆயிரம் பாத்திரங்கள் தானம் செய்தல் வேண்டும்.
3. அன்னதானம்-விஷ்ணுலோகம் அடைய அன்னதானம் செய்க.
4. கல்ப தருதானம்-பொன்னால் கல்பதரு ஒன்றைப் பழங்களுடன் செய்து ஓர் அந்தணர்க்குத் தானம் செய்பவர் சூரிய லோகம் சேர்ந்து, அப்சரசுகளால் சேளவ பெறுவர்.
5. கிருக தானம்-கிருகம் (அ) வீடு தானம் சிவலோகப் பிராப்தி தரும்.
6. கோதானம்-ஒரு படித்த ஏழை பிராமணனுக்கு அளிக்கும் கன்றுடன் கூடிய பசுதானம் முக்தி அளிக்கும்.
7. சப்த சாகர தானம்-பாவங்களிலிருந்து விடுபட உப்பு, பால், வெல்லம், சர்க்கரை ஆகியவற்றை ஒரு பிராமணனுக்குத் தானம் செய்யவும்.
8. சய்ய தானம் (சய்ய படுக்கை:)-முக்தி பெற ஒரு பிராமணனுக்குப் படுக்கை தானம் நன்மை பயக்கும்.
9. தாசி தானம்-பட்டாடைகள் அணிவித்து, நகைகள் பூட்டி ஒரு வேலைக்காரியை ஓர் அந்தணருக்குத் தானம் செய்பவர்களுக்கு விண்ணுலகில் அப்சர ஸ்திரீகள் பணி செய்வர்.
10. தட்டு (அ) ஸ்தாலி தானம் : செம்பு (அ) மண்தட்டில் உணவைத் தானம் அளிப்பவர்களுக்கு வீட்டில் என்றும் உணவுக்குக் குறை இருக்காது.
11. தானிய மலை தானம்-மலை போல் குவிக்கப்பட்ட தானியம், வெல்லம், தங்கம், நெய் ஆகியன பிராமணனுக்குத் தானம் செய்வது.
12. துலாபாரம் (அ) துலாபுருஷ தானம்-ஒருவன் எடைக்கு எடை தானியம், தயிர், உப்பு, வெள்ளி, பொன் போன்றவற்றை அளிப்பது இது. இதில் பாதி பிராமணருக்கும், கால் பங்கு பூசாரிக்கும், மீதி ஏழைகளுக்கும் கொடுக்கும் தானம் இது. இதனால் சூரியலோகம் அடையலாம்.
13. பிரம்மாண்ட தானம்-பொன் முட்டையின் மீது அரி, அரன், (அ) அயன் உருவமைத்துப் பிராமணனுக்குத் தானமாகக் கொடுப்பதால் அத்துடன் அந்தணருக்கு தானியம், செருப்பு, குடை போன்றவை கொடையாக அளிப்பதால் ஒருவர் பாவங்கள் நீங்கும். கோரிக்கை நிறைவேறும்.
14. பூமி தானம் (அ) நிலக்கொடை-பாவங்களைத் தொலைக்கும்.
15. பிரப (அ) நீர்தானம்-வழிப்போக்கருக்கு தண்ணீர் பந்தல் வைத்து குடிநீர் வழங்குதல் முக்தி அளிக்கும்.
16. மஹிஷிதானம்-கறவை பெண் எருமையை அந்தணருக்குத் தானம் செய்தால் கோரிக்கை வெற்றி பெறும்.
17. ரிஷப தானம்-எருது தானம் ஏழு பிறப்பு பாவங்களையும் நீக்கும்.
18. வித்யா தானம் (அ) கல்விக்கான கொடை-புத்தகம், பேனா, மைக்கூடு போன்றவை தானம் செய்தல் மோக்ஷம் தரும்.
19. ஹயபங்க்தி தானம்-தங்க ஏர், நவரத்தினங்கள் புதைத்து நாற்பது மாதிரி பொன் எருதுகள் தானம் அளித்தால் ஏழு பிறப்பிலும் முக்தி தரும்.
20. ஹிரண்ய கர்ப்ப தானம்-பசித்தவர்க்கு அன்னமிட்டு, பிராமணர்களுக்குப் பொன் தினந்தோறும் தானம் செய்வது மோக்ஷத்துக்கு வழி வகுக்கும்.

Related Articles

  • Bhavisya Purana-2
    Bhavisya Purana-2
    9.வருணாசிரம தருமங்கள்:தலைப்பு ஒரேமாதிரி இருப்பினும் பவிஷ்ய புராணத்தில் வருணாசிரம தருமங்கள் சிறிது மாறுபட்டிருக்கின்றன என்று அறியலாம். வகுப்புகளில் மற்ற புராணங்களில் சொல்லப்பட்டது…