Bhrama Purana

1.தோற்றுவாய்
புராணங்கள் என்பவை பண்டைய இலக்கியங்கள் ஆகும். அவை மகா புராணங்கள் 18, உப புராணங்கள் 18. மகா புராணங்கள் பதினெட்டின் வரிசையில் சிலர் நான்காவது வாயு புராணம் என்றும், சிலர் சிவபுராணம் என்றும் கூறுவர். மகா புராணங்களில் முதலில் தோன்றியது பிரம்ம புராணம் என்பதில் எத்தகைய கருத்து வேறுபாடும் இல்லை. எனவே இதனை ஆதிபுராணம் என்றும் கூறுவர். இது 10,000 ஸ்லோகங்கள் கொண்டது.
புராண லக்ஷணங்கள் ஐந்து. 1. இந்தப் பேரண்டப் படைப்பு, 2. பிரளயம் மூலம் உலக அழிவும், மறுபடி தோற்றமும் 3. வெவ்வேறு மன்வந்தரங்கள் 4. சூரிய வமிச, சந்திர வமிச வரலாறு 5. அரச பரம்பரைகள் சரிதம். இந்த ஐந்தும் பிரம்ம புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக எல்லாப் புராணங்களும் அரி, அரன், அயன் என்ற மும்மூர்த்திகளைப் பற்றி கூறினும் சிவபுராணங்களில் சிவனை உயர்த்தியும், சிலவற்றில் விஷ்ணுவை உயர்த்தியும் பேசப்பட்டுள்ளன. பிரம்ம புராணம் ஒரு ராஜசிக புராணம். புராணங்களை வேதவியாசர் எழுதினார் எனப்படுகிறது. இவருக்குக் கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயரும் உண்டு. தவிர கருப்பு நிறத்துடன் தீயில் தோன்றியவர் என்று அந்த சொல்லுக்குப் பொருள். வேதவியாசர் என்பது தனி ஒருவர் பெயரா? அல்லது ஒரு பீடத்தின் பெயரா என்பது தெரியவில்லை. ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒவ்வொரு வியாசர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மகாபாரதத்தை இயற்றிய பின்னும் மன அமைதி ஏற்படாததால் வியாசர் புராணங்களை எழுத முற்பட்டார் என அறியலாகிறது. பிரம்ம புராணத்தின் முதல் நூல் கிடைக்கப் பெறவில்லை என்றும், எனவே மகாபாரதம், ஹரிவம்சம், வாயுபுராணம், மார்க்கண்டேய புராணம், விஷ்ணு புராணம் ஆகியவற்றிலிருந்து செய்திகளைத் தொகுத்து தற்போது கிடைத்துள்ள பிரம்ம புராணம் உருவாக்கப்பட்டது என்பர். இது மிகப்பெரியதோ மிகச் சிறியதோ இன்றி நடுத்தரமாக உள்ளது.

2.உலக சிருஷ்டி
நைமிசாரணியத்தில் சனகாதி முனிவர்களுக்கு சூதமுனிவர் பிரம்ம புராணத்தைப் பற்றிக் கூறலானார். (வியாசரின் சீடன் ரோமஹர்ஷணர் கூறியதாகவும் சொல்லப்படும்)
எங்கும் நீர் சூழ்ந்திருக்க, பிரம்மனாகிய பகவான் விஷ்ணு யோகதுயில் கொண்டிருந்தார். நீருக்கு நர என்றும், அயன என்றால் படுக்கை என்றும் பொருள். எனவே விஷ்ணுமூர்த்தி நாராயணன் என்று பெயர் பெற்றார். நீரிலிருந்து ஓர் அண்டம் (முட்டை) வெளித்தோன்றியது. அதனுள் பிரம்மா இருந்தார். அவர் சுயம்பு ஆவார். அவர் முட்டையின் இருபகுதியிலிருந்து சுவர்க்கத்தையும், பூமியையும் ஆக்கினார். அவ்விரண்டிலும் ஆகாயம், திக்குகள், காலம், மொழி, உணர்வுகள் உற்பத்தி செய்யப்பட்டன. பிரம்மாவின் மனதிலிருந்து மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர் என்ற சப்தரிஷிகளைத் தோற்றுவித்தார். பின்னர் ருத்திரனையும், சனத் குமாரரையும் தோற்றுவித்தார்.
மேலும் சில படைப்புகள்: பிரம்மா ஓர் ஆணையும், ஒரு பெண்ணையும் படைத்து அவர்கள் மூலம் மக்கள் பெருக்கத்துக்கு வித்திட்டார். ஆணின் பெயர் சுவயம்புமனு; பெண்ணின் பெயர் சதரூபை. இவர்களின் புத்திரன் மனு. மனுவிலிருந்து வளர்ந்த மக்கள் மானிடர்(அ) மானவர் எனப்பட்டனர். அத்தம்பதியருக்கு வீரன், பிரியவிரதன், உத்தானபாதன் என்று மூவர் பிறந்தனர். உத்தானபாதனின் மகன் துருவன், துருவ நக்ஷத்திரமாக விளங்குகிறார். துருவன் பரம்பரையில் தோன்றிய பிராசீனபர்ஹிக்கு பிரசேதனர்கள் எனப்படும் பதின்மர் பிறந்தனர். அவர்களுக்கு உலக வாழ்க்கையில் விருப்பமின்றித் தவம் செய்யப் புறப்பட்டனர். உலகைப் பராமரிக்க ஆள் இல்லாததால் எங்கும் காடுகள் பெருகி விட்டன. பிரசேதனர்கள் கோபம் கொண்டு வாயுவையும், அக்கினியையும் தோற்றுவித்துக் காடுகளை அழித்தனர். அப்போது சோமன், ஓர் அழகிய பெண் மரீஷையுடன் பிரசேதனர்களை அணுகி, அவர்கள் கோபத்தை சாந்தமாக்கி மரீஷையை மனம் செய்வித்தார். அவர்களுடைய மகனே தக்ஷபிரஜாபதி.

3.தக்ஷன் சந்ததியினர்
தக்ஷனுடைய ஆயிரம் புத்திரர்களை நாரதர் அறவுரை கூறி தவம் செய்ய அனுப்பிவிட்டார். மறுபடியும் தோன்றிய ஆயிரம் பேர்களையும் அவ்வாறே அனுப்பி விட்டார். இவர்கள் ஹர்யக்ஷ்வர்கள், ஷவலஷ்வர்கள் என்பவர்கள் ஆவர். தக்ஷனுக்குப் பிறந்த அறுபது பெண்களில் பத்த பேரைத் தருமனுக்கும், பதின்மூன்று பேரை காசியப முனிவருக்கும், இருபத்தேழு பெண்களை சோமன் எனும் சந்திரனுக்கும், மீதிப் பெண்களை அரிஷ்டநேமி, வாஹுபுத்திரர், ஆங்கீஸர், கிரிஷஷ்வர் ஆகியோருக்கும் மணம் செய்வித்தான். தர்மனுக்கு மணம் செய்வித்த பத்து புத்திரிகளில் அருந்ததியின் மக்கள் உலகிற்கு விஷயமானவர்கள். வாசுவின் மக்கள் வசுக்கள் என்பர். அவர்களில் அனலனின் மகன் குமரன். கிருத்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட குமரன் கார்த்திகேயன் எனப்பட்டான். பிரபசாவின் மகன் விசுவகர்மா; தேவலோக சிற்பி. சாத்யாவின் மக்கள் சாத்திய தேவர்கள். விஸ்வாவின் மக்கள் விச்வதேவர்கள். சந்திரன் மனைவிகள் 27 பெண்கள், நக்ஷத்திரங்கள். காசியபரின் மனைவியரில் அதிதியின் மக்கள் ஆதித்தியர்கள் ஆவர். திதி மக்கள் தைத்தியர்கள். ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு அவள் புத்திரர்கள். தனுவின் புத்திரர்கள் தானவர்கள். அவர்கள் வம்சத்தில் பௌலமர்கள், காலகேயர்கள் தோன்றினர். அரிஷ்டாவின் புத்திரர்கள் கந்தர்வர்கள். காசாவின் மக்கள் யக்ஷர்கள். சுரபிக்கு பசுக்கள், எருமைகள் தோன்றின. வினிதாவுக்கு அருணன், கருடன் மக்கள். தாம்ராவின் ஆறு பெண்களுக்கு ஆந்தைகள், கழுகுகள், ராஜாளிகள், காக்கைகள், நீர்ப்பறவைகள் குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள் தோன்றின. குரோதவஷையின் ஆயிரக்கணக்கான மக்கள் நாகர்கள். இளைக்கு மரம், கொடி, புதர் போன்றவை தோன்றின. கத்ருவின் மக்களாகிய நாகர்களில் அனந்தன், வாசுகி, தக்ஷகன், நஹுஷன் ஆகியோர் முக்கியமானவர். முனிக்கு அப்ரஸுகள் தோன்றினர்.
திதி, காசியபரிடம் இந்திரனை வெல்லக்கூடிய ஒரு மகனை அருள வேண்டினாள். குழந்தை கருவுற்ற நாளிலிருந்து நியம நிஷ்டைகளுடன் இருக்க வேண்டும் என்று காசியபர் கூறினார். அதற்குப் பங்கம் ஏற்பட்டால் நினைத்தது நிறைவேறாது என்றார். கருவுற்ற திதி ஒருநாள் கால்களைக் கழுவாமல் தூங்கச் செல்ல, இந்திரன் அணு அளவில் அவளது கருவறையுள் நுழைந்து கருவை வஜ்ராயுதத்தால் ஏழு பகுதிகளாக்கிட, மறுபடியும் அந்த ஒவ்வொன்றும் ஏழாக மொத்தம் நாற்பத்தொன்பது துண்டுகளாயின. கரு அழ, இந்திரன், மா ருத (அழாதே) என்று கூற அவை மருத்துக்கள் எனப்பட்டன. திதிக்கு விரத பங்கம் ஏற்பட அவள் எண்ணம் ஈடேறவில்லை. மாறாக, அக்குழந்தைகள் அதாவது மருத்துக்கள் இந்திரனுக்கு உதவியாளராயினர். (சிருஷ்டியைப் பற்றி எல்லாப் புராணங்களும் கூறும் செய்திகள் ஒன்றே போல் காணப்படுகின்றன.)

4.பிருதுவும், பிருத்வியும்
துருவன் குலத் தோன்றல்களில் அங்கன் தரும நெறியில் நின்று வாழ்ந்தான். அவன் மனைவி மிருதியுவின் மகள் சுனிதை. மிருதியுவி தீய வழி செல்பவள். அவள் மூலம் அங்கனின் மகன் வேனன் தீயநெறிகளைப் பெற்றான். அவன் அதர்மசாலி. அவன் தொல்லைகள் அதிகமாக, முனிவர்கள் அவனை அழைத்து முறையிட அவன் திருந்தவில்லை. மமதையுடன் நடந்து கொண்டான். எனவே, அவனைப்பற்றி அவனுடைய வலது தொடையைக் கடைய ஓர் அசிங்கமான குள்ள உருவம் தோன்றிற்று. அதைக் கண்ட அத்திரி முனிவர் அதனை நிஷித (உட்கார்) என்றார். அவன் பெயர் நிஷாதன் என்று ஆயிற்று. அவன் வம்சத்தினர் நிஷாதர்கள் எனப்பட்டனர். அந்தப் பரம்பரையிலேயே துஷாரர்கள், துண்டுரர்கள் தோன்றினர். வேனனின் வலது கரத்தைக் கடைய பிருது தோன்றினான். பின்னர் வேனன் இறந்தான். பிருதுவைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் காணப்பட்டது. அவன் கைகளில் ஒரு வில்லும், கேடயமும் இருந்தன. தேவர்களும், முனிவர்களும் அவன் முடிசூட்டு விழாவுக்கு வந்தனர். சோமன், கிரகங்கன், வருணன், குபேரன், அக்னி, தக்ஷன், இந்திரன், பிரகலாதன், யமன், சித்திராதன், வாசுகி, தக்ஷகன், கருடன், ஐராவதம், உச்சச்சிரவம் போன்றோர் அவன் ஆட்சியில் அவனுக்கு உதவினர். பிருது நீதி, நெறிமுறை வழியில் தருமம் தவறாமல் ஆண்டு வர அவன் ஆட்சியில் அனைவரும் மகிழ்ந்தனர். பிருதுவைப் பெருமைப்படுத்த முனிவர்கள் யாகம் செய்ய, அதிலிருந்து இரண்டு இனங்கள் தோன்றின. அவை சூதர்கள், மகதர்கள் எனப்பட்டனர். அவர்கள் பிருதுவின் புகழ்பாடி அவன் சிறப்பைப் பரப்பினர். அதைக் கேட்ட மக்கள் அவனிடம் வந்து இருக்க இடமும், உண்ண உணவும் கிடைக்க வழி செய்யுமாறு வேண்டினர். பிருது கையில் வில்லும், அம்பும் ஏந்தி பூமியைக் கொல்ல எண்ண, பூமி பசு வடிவம் கொண்டு அனைத்துலகிலும் ஓட, அவனும் பின் தொடர்ந்தான். அது கண்ட நிலமாது (பசு வடிவ) தான் ஒரு பெண் என்றும், தன்னைக் கொல்வதால் பாவமே மிஞ்சும் என்றும் வேறு வழியில் மக்கள் நன்கு வாழச் செய்யலாம் என்றும் கூறியது. பின்னர் நிலமாது அதற்கான வழிமுறைகளைக் கூற பிருது அதன்படி செய்யலானான். வில்லினால் நிலத்தைச் சமன்படுத்த அதில் மக்கள் வாழும் இடமும், உண்ண உணவுப் பொருள்கள் பயிர் செய்யவும், அதற்கு உதவியாக மாடுகளும் வளர்ந்து மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இவ்வாறு பிருது செய்த நற்காரியங்களால் நிலம் பிருதிவி எனப்பட்டது.

5.மன்வந்தரங்கள்
மன்வந்தரம் என்பது ஒரு கால வரையறை. யுகங்கள் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு. இவை நான்கும் முடிவது ஒரு மகாயுகம். சுமார் எழுபத்தொன்று மஹாயுகங்கள் கொண்டது ஒரு மன்வந்தரம். பதினான்கு மன்வந்தரங்கள் கொண்டது ஒரு கல்பம். பிரம்மனின் நாட்களில் ஒன்று கல்பம். ஒரு கல்பம் முடிந்ததும் உலகம் அழியும். ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒவ்வொரு மனு ஆண்டு வந்தான். தற்போதைய கல்பத்தில், ஏழாவது மன்வந்தரத்தில் வைவஸ்வதன் மனு ஆவான். ஒவ்வொரு மன்வந்தரத்திலும் வெவ்வேறு சப்தரிஷிகள், இந்திரன்கள் இருந்தனர். தற்போது நடைபெறுவது வைவஸ்வத மன்வந்தரம். இதில் வசிஷ்டர், காசியபர், கௌதமர், பரத்துவாசர், விசுவாமித்திரர், ஜமதக்கினி ஆகியோர் சப்தரிஷிகள் ஆவர். சரித்யர்கள், ருத்திரர்கள், வாசுதேவர்கள், வசுக்கள், மருத்துக்கள், ஆதித்தியர்கள், இரு அசுவினி தேவர்கள் கடவுளர் ஆவர். அடுத்து ஏழு மனுக்கள் இருப்பர். அதன்பின் உலகம் அழிந்து விடும். இவர்களில் ஐவர் சவர்ணி மனுக்கள் என்றும், மற்ற இருவர் பௌத்தியர், ரௌச்சியர் எனவும் பெயர் கூறுவர்.

6.சூரியனும், சூரிய வம்சமும்
காசியபர், அதிதிகளுக்குப் புத்திரன் விசுவாச்வனன். இவனுக்கு சூரியன், மார்த்தாண்டன் ஆகிய பெயர்களும் உண்டு. இவனே சூரிய பகவான். அவனுக்கு சஞ்ஜனா, சாயா என இரு மனைவியர். சஞ்சனாவுக்கு விசுவஸ்வதமனு, யமன் என்ற புத்திரர்களும் யமுனை என்ற பெண்ணும் உண்டு. சாயாவுக்குப் பிறந்தவர்கள் சவர்ணி மனு.

7.வைவஸ்வத மனுவின் மக்கள்
புத்திரன் இல்லாத வைவஸ்வத மனு ஒரு யாகம் செய்தான். அதன் பயனாக அவனுக்கு இக்ஷ்வாகு, நிருகன், திருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், அரிஷ்டன், கரூஷன், விருஷத்திரன் ஆகிய ஒன்பது புதல்வர்கள் தோன்றினர். மேலும் மனுமித்ரன், வருணன் என்னும் கடவுளர்களை வேண்டி இள என்றும் பெண்ணைப் பெற்றான். இள, சந்திரனின் மகனான புதனை மணந்து புரூரவனைப் பெற்றாள். இளை, சுத்யும்னன் என்ற ஆணாக மாறிவிட, அவனுக்கு உத்கலன், கயா, வினதஷ்வா ஆகிய புத்திரர்கள் பிறந்தனர். உத்கலன் ஒரிஸ்ஸாவை ஆண்டான். கயா, கயாவையும், வினதஷ்வா மேற்குப் பகுதியையும் ஆண்டனர். சுத்யும்னன், இளை என்ற பெண்ணாக இருந்ததால் ஆட்சி செய்ய இயலாததால், அவனது பிரதிஷ்டான நகரை அவருக்குப் பின் புரூரவன் பெற்றான். வைவசுவத மனு இறந்த பிறகு அவனுடைய பத்து புத்திரர்களும் உலகைப் பகிர்ந்து கொண்டனர். இக்ஷ்வாகு மையப் பகுதியை ஆண்டு வந்தான். இக்ஷ்வாகு தான் செய்யப் போகும் யாகத்திற்குப் புதிதாக இறைச்சி கொண்டு வர அவன் மகன் விகுக்ஷியை அனுப்பினான். ஆனால், விகுக்ஷி பசியின் காரணமாக இறைச்சியை அவனே உண்டுவிட வசிஷ்ட முனிவர், மன்னன் இக்ஷ்வாகுவிடம், விகுக்ஷியை தேசப் பிரக்ஷ்டம் செய்யுமாறு கூறினான். விகுக்ஷி உண்டது ஒரு முயலின் இறைச்சி (சசக). எனவே அவன் சசதன் என்று பெயர் பெற்றான். இக்ஷ்வாகு மரணத்திற்குப் பின் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்ட விகுக்ஷி திரும்பி வந்து நாட்டை ஆண்டான். அதுவே அயோத்தி நாடாகும்.

8.குபலஷ்வன்
விகுக்ஷியின் மகன் காகுஸ்தன். இந்த வம்சத்தின் விரிஹதஷ்யன் மகன், குபலஷ்வன். அவனுக்கு முடி சூட்ட விரும்பினான் தந்தை. அவ்வமயம் அங்கு வந்த உதங்க முனிவர் மன்னனைத் தடுத்த, ஒரு செய்தியைக் கூறினார். துந்து என்றோர் அரக்கன் கடற்கரையில் வசிக்கிறான். அவனது மூச்சுக்காற்றினால் எங்கும் மணல் மேடு குவிந்துள்ளத. அவனைத் தேவர்களாலும் வெல்ல முடியவில்லை. எனவே, நான் என்னுடைய தவ வலிமையை உனக்குத் தருகிறேன். நீ அந்த அரக்கனைக் கொல்ல வேண்டும் என்று கூறினார். அதற்கு மன்னன் தன் மகன் குபலஷ்வன் அரக்கனைக் கொல்வான் என்று கூறி வனம் சென்று விட்டார். குபலஷ்வன், தனது நூறு புத்திரர்களுடன் உதங்கனை அழைத்துக் கொண்டு துந்துவை அழிக்கச் சென்றான். துந்துபியின் திரிதஷ்வன், சந்திரஷ்வன், கபிலக்ஷ்வன் என்ற மூன்று மகன்களைத் தவிர மற்றவரைக் கொன்றான். துந்து அரக்கனும் கொல்லப்பட்டான். இதனால் குபலஷ்வன் துந்து மாறன் எனப்பட்டான். முனிவனின் ஆசியால் இறந்த மக்கள் மோட்சம் அடைந்தனர்.

9.திரிசங்கு
திரிதஷ்வனுக்குப் பின் ஆண்ட திரியருனி என்ற மன்னன் நீதி நெறி வழுவாமல் தர்மவானாக நாட்டை ஆண்டு வந்தான். ஆனால், அவனது புத்திரன் சத்திய விரதன் அவனுக்கு நேர்மாறாக அதர்மவானாய் இருக்க வசிஷ்டர் அவனைத் தேசப்பிரஷ்டம் செய்யச் செய்தார். சத்தியவிரதன் காட்டில் சண்டாளர்களுடன் வாழ்ந்து வந்தான். சில நாட்கள் கழித்து மன்னன் திரியருனி தவம் செய்ய காடு செல்ல, நாட்டை ஆள அரசன் இல்லாததால் நாட்டில் அராஜகம், பஞ்சம் பன்னிரண்டு ஆண்டுகள் தாண்டவமாடின. அந்நாட்டில் வசித்து வந்த விசுவாமித்திர முனிவர் காட்டில் தவம் செய்து கொண்டிருந்ததால் அவருடைய மனைவி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவள் தன் மகனை விற்று தனக்கான உணவைப் பெற அவன் கழுத்தில் கயிறு கட்டி அழைத்துச் சென்று அவனை ஆயிரம் பசுக்களுக்கு விற்று விட்டாள். அவன் கழுத்தில் (கால) கயிறு கட்டப்பட்டதால் அவன் காலவன் எனப்பட்டான். இதையறிந்த சத்தியவிரதன், விசுவாமித்திரரின் மனைவி மக்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்து காலவனை விடுவித்து அவர்களை ஆதரித்து வந்தான். தன்னைத் தேசப்பிரஷ்டம் செய்யக் காரணமான வசிஷ்டர் மீது கோபம் கொண்ட அவன், அம்முனிவருடைய பசுவைக் கொன்று அதன் மாமிசத்தை, விசுவாமித்திரரின் மனைவி மக்களுக்குக் கொடுத்து தானும் உண்டான். இதனால் கோபம் கொண்ட வசிஷ்டர் சத்தியவிரதனைச் சபித்தார். அவன் செய்த மூன்று தவறுகனைச் சுட்டிக் காட்டினார். 1) உன் தகப்பனார் கோபத்துக்கு ஆளானாய், 2) பசுவைக் கொன்றாய், 3) பசு இறைச்சியை உண்டாய் என்று கூறி இனி அவன் திரிசங்கு என்ற பெயர் பெறுவான் என்று சபித்தார். தவம் முடிந்து திரும்பிய விஸ்வாமித்திரர், சத்தியவிரதன் தன் குடும்பத்துக்குச் செய்த உதவிக்காக மகிழ்ந்து அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, திரிசங்கு மானிட உடலுடனேயே சுவர்க்கம் போக விரும்ப, அவ்வாறே விஸ்வாமித்திரர் அருளினார். திரிசங்கு மன்னனாக விஸ்வாமித்திரர் அவருக்கு முக்கிய குருவானார்.

10.சகரன்
திரிசங்குவின் மகன் ஹரிச்சந்திரன். இவர்கள் வம்சத் தோன்றல் பாகு. அவன் இல்லற சுகத்தில் ஈடுபட்டு மகிழ்ந்திருக்க பகைவர்கள் படை எடுத்து வர, அவன் மனைவி யாதவியுடன் காட்டிற்குச் சென்று வசிக்கலானான். பாகுவை விரட்டியவர்கள் ஹதயர்களும், தலஜங்கா மன்னர்களும். அவர்களுக்கு சகர்கள், யவனர்கள், பரதர்கள், காம்போஜர்கள், பஹ்லவர்கள் உதவினர். காட்டில் மன்னன் பாகு மரிக்க, அவன் மனைவி யாதவி உடன்கட்டை ஏற விரும்பினாள். அவள் கருவுற்றிருந்ததால் அவளை அவுர முனிவர் தடுத்து நிறுத்தி தன் குடிலுக்கு அழைத்துச் சென்று ரக்ஷித்து வந்தார். பாகுவின் மற்றொரு மனைவி யாதவிக்கு விஷமூட்டிக் கொல்ல முயன்றாள். ஆனால், விஷம் அவளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. எனினும் குழந்தை நச்சுடனே பிறக்க அது சகரன் எனப்பட்டது. அவுர முனிவர் சகரனுக்கு சகல கல்விகளையும், வித்தைகளையும் கற்பித்தார். புனித ஆக்னேய அஸ்திரத்தை உபயோகிக்கும் முறையையும் அவன் கற்றான். சகரன் பெரியவனானவுடன் தன் தந்தையை விரட்டிய பகைவர்களை ஆக்கினேய அஸ்திரத்தின் உதவியால் வென்று அவர்களைக் கொல்ல யத்தனிக்கையில், வசிஷ்டர் அவர்களை முடி நீக்கிடுதுல் போன்றவை செய்து அவமானப்படுத்துமாறும், கொல்ல வேண்டாம் என்றும், அவர்கள் வேதங்களைப் பின்பற்றக்கூடாது என்றும் கூறினார். சகரன் தோற்கடித்த மன்னர்கள் கோனசர்ப்பர்கள், மஹிஷகர்கள், தார்வர்கள், சோழர்கள், கேரளர்கள் ஆகியோர்.
சசுர மன்னனுக்கு கேசினி, சுமதி என்று இரண்டு மனைவியர். அவுர முனிவர் அருளால் கேசினிக்கு ஒரு மகனும், சுமதிக்கு அறுபதினாயிரம் புத்திரர்களும் பிறந்தனர். கேசினியின் மகனின் பெயர் பஞ்சஜனன். சுமதிக்கு ஒரு பூசணிக்காய் தோன்ற அதனுள் ஒரு மாமிச பிண்டம் இருந்தது. அதை ஒரு பெரிய நெய் பானையில் வைத்தனர். அதில் நெய் நிரம்பி இருந்தது. அந்த பிண்டத்திலிருந்து அறுபதாயிரம் மக்கள் பிறந்தனர். சகரன் உலகை ஒரு குடைக்கீழ் ஆள திக் விஜய யாத்திரை தொடங்கினான். அதற்காக ஓர் அசுவமேத யாகம் செய்ய யாகக் குதிரையை உலகெங்கும் திரியவிட, அறுபதினாயிரம் மக்களும் அதனைப் பின் தொடர்ந்திட, குதிரை தென்கிழக்குக் கடற்கரையை அடைந்தது. சகர புத்திரர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது குதிரை களவாடப்பட்டது. குதிரையைத் தேடிச் சென்ற அவர்கள் தவம் செய்து கொண்டிருந்த முனிவரைக் கண்டனர். அவர்கள் வருகையால் தவம் கலைந்த முனிவர் அவர்களைக் கோபத்துடன் உற்று நோக்க, அவர்கள் எரிந்து சாம்பலாயினர். அவர்களில் வர்ஹிகேது, சுகேது, தர்மகேது, பஞ்சஜனன் நால்வர் மட்டும் தப்பிப் பிழைத்தனர். சாகரத்திலிருந்து யாகக்குதிரை சகரனால் பெறப்பட்டதால் அது சாகரம் எனப்பட்டது. பஞ்சஜனனின் மகன் அமஷுமனன். அவன் மகன் திலீபன். திலீபன் மகன் பகீரதன் தவம் செய்து கங்கையை உலகுக்குக் கொண்டுவர, வரும் வழியில் சாம்பலான சகர புத்திரர்களைக் காத்து மோக்ஷம் கிடைக்கச் செய்தான். பகீரதனால் புவிக்குக் கொண்டு வரப்பட்ட கங்கை பாகீரதி என்று பெயர் பெற்றது. பகீரதனின் பின் வந்தோர்களில் ரகு, ரகுவின் மகன் அஜன். அவன் மகன் தசரதன். தசரத குமாரன் ஸ்ரீராமச்சந்திரன் அனைவரும் சூரிய வம்சத்தினரே.

11.சந்திரனும் சந்திர வம்சமும்
அத்திரி முனிவரின் மகன் சோமன் என்ற சந்திரன் ஆவான். பிரம்மன் சந்திரனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு உலகை இருபத்தொன்று முறை சுற்றி வந்தார். பிறகு மீதியிருந்த சக்தியிலிருந்து மூலிகைகள் உற்பத்தி ஆயின. சந்திரன் ஒரு பத்ம ஆண்டு (பல மினியன் ஆண்டுகள்) தவம் செய்ய பிரம்மன் தோன்றி அவனை விதைகள், மூலிகைகள், சமுத்திரங்களுக்கு அதிபதி ஆக்கினான். அதனால் சந்திரன் ஒரு ராஜசூய யாகம் செய்தான். இது அவனுக்குப் புகழ், கீர்த்தி, செல்வம், மரியாதை ஆகியவற்றைக் கொடுத்தது. இதனால் மமதை கொண்ட சந்திரன், பிரகஸ்பதியின் மனைவியைக் கடத்திட, மற்ற தேவர்கள், அவளை விட்டு விடுமாறு கூற, தேவர்களுக்கும் சந்திரனுக்கும் இடையே கடும் போர் ஏற்பட்டது. பிரகஸ்பதி பக்கம் தேவர்களும், சிவனும் சேர்ந்திட, சந்திரன் பக்கம் அசுரர்களும், சுக்கிராச்சாரியாரும் சேர்ந்திட நடந்த இந்தப் போருக்கு தாரகாமய சங்கிராமம் என்று பெயர். இறுதியில் பிரம்மன் இருதரப்பினரையும் சமாதானம் செய்தார். இந்நிலையில் சந்திரனுக்கும், தாராவுக்கும் புதன் பிறந்தான். இந்த புதன் இளையை மணந்தான் என்று முன்பே கூறப்பட்டது.

12.சந்திர வம்ச மன்னர்கள்
யயாதி: சந்திர குலத்தில் தோன்றிய வலிமை மிக்க மன்னன் நகுஷன். அவன் விரஜா என்பவளை மணந்து யதி, யயாதி, சம்யாதி, ஆயாதி, வியாதி, கிருதி என்ற ஆறு புத்திரர்களைப் பெற்றான். நகுஷனுக்குப் பிறகு யயாதி அரசனானான். யயாதி சுக்கிராச்சாரியார் மகளான தேவயானையையும், தானவ மன்னன் மகளான சர்மிஷ்டையையும் மணந்தான். தேவயானிக்கு யது, துர்வசு என்று இரண்டு மகன்களும், சர்மிஷ்டைக்கு துருஹ்யு, அனு, பூரு என்ற மூன்று மகன்களும் பிறந்தனர். யயாதி பேரும், புகழுடனும் வாழ்ந்து, முதுமை வர தன் ராஜ்யத்தை தன் மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்தான். அவன் உலகம் முழுவதும் யாத்திரை செய்ய விரும்பினான். எனவே, அவன் யதுவை அழைத்து தன் முதுமையை ஏற்று அவனது இளமையைத் தரவும் வேண்டினான். அவன் மறுத்துவிட கோபம் கொண்ட யயாதி அவனும், அவன் மக்களும் அரசாள மாட்டார்கள் என்று சாபம் தந்தான். அவன் மற்ற புத்திரர்களையும் அவ்வாறே வேண்டிட அனைவரும் மறுக்க அனைவரையும் அவ்விதமே சபித்தான். ஆனால் பூரு மட்டும் தந்தை வேண்டுகோளை ஏற்று, தனது இளமையை யயாதிக்கு கொடுக்க, தந்தை மகனை வாழ்த்தினான். பல ஆண்டுகள் கழித்து யயாதி உலக இச்சையை வெறுத்து தன் இளமையை மறுபடியும் பூருவுக்குக் கொடுத்து முதுமையைப் பெற்றுக் கொண்டான். பின்னர் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றான். பூருவுக்குப் பின் பரதன் என்பவன் நாட்டை ஆண்டதால் நாடு பாரத வர்ஷம் எனப் பெயர் பெற்றது. இந்தக் குலத்தில் தோன்றிய மன்னன் குருவுக்குப் பின் வந்தவர்கள் கௌரவர்கள் எனப்பட்டனர். குருவின் பெயராலேயே குரு÷க்ஷத்திரம் அப்பெயரைக் கொண்டது. துர்வசுவின் சந்ததியில் பாண்டியர், கேரளர், கோலர், சோழர்கள் தோன்றினர். துருஹ்யனின் குலத்தில் காந்தார மன்னர்கள் தோன்றினர். யதுவுக்கு சகஸ்ரதன், பயோதன், குரோஷ்டு, நீலன், அஞ்சிகன் என்று ஐந்து புத்திரர்கள். சகஸ்ரதனின் குலத்தோர் ஹதயர்கள் எனப்பட்டனர். இவர்களில் சிறந்த மன்னன் கார்த்தவீர்யாச்சுனன். குரோஷ்குக்குப் பின் வந்தவர்கள் விருஷ்ணி, அந்தகர் முதலியோர். இதில் விருஷ்ணி குலத் தோன்றலே ஸ்ரீகிருஷ்ணன் ஆகும்.

13.பூ மண்டலப் பிரிவுகள்
பூமண்டலம் ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றைச் சுற்றி ஏழு வகையான சமுத்திரங்கள் உள்ளன. ஏழு வகையான பர்வதங்கள் உள்ளன. பாரத வர்ஷம் எனப்படும் நம் நாடு எட்டுப் பிரிவாக உள்ளது. இந்திரத் தீவு, சுசேருமனத்தீவு, தாம்ரபரணத்தீவு, கபஸ்தி மானத்தீவு, நாகத்தீவு, சௌம்யத்தீவு, காந்தர்வத்தீவு, வாருணத்தீவு என்பவை பாரதம். ஒன்பதாவது பகுதி கடலில் மூழ்கிவிட்டது. பாரத வர்ஷத்தின் கிழக்கில் கிராதர்களும், மேற்கில் யவனர்களும் உள்ளனர். பூமிக்கடியில் அதலம், விதலம், நிதலம், சுதலம், தலாதலம், ரஸாதலம், பாதாளம் என்று ஏழு உலகங்கள் உள்ளன. இவற்றில் தைத்தியர்கள், தானவர்கள், நாகர்கள் ஆகியோர் வசிக்கின்றனர். இந்தப் பாதாள லோகங்கள் மிகவும் அழகியவை, இங்கு பொன்னும் பொருளும் குவிந்து கிடக்கின்றன. இங்கேயும் காடு, பறவைகள் போன்ற ஜீவராசிகளும் நிறைந்துள்ளன என்று நாரதர் கூறினார். பூமண்டலப் பகுதியாக பல நகரங்கள் அமைந்துள்ளன. இதற்கெல்லாம் தலைவன் யமதர்மராஜன். அவரவர் செய்யும் பாவங்களுக்கு ஏற்ப இங்கு ஜீவன் தண்டிக்கப்படுகிறது. பாவப் பிராயச்சித்தம் செய்தவர்களும் புனிதர்களும் நரகங்களுக்குச் செல்லார். ஸ்ரீகிருஷ்ணனைத் தியானிப்பதே சிறந்த தவமாகும். மண்ணிலிருந்து விண் வரை பரவியிருப்பது இப்பூமி. புவர் லோகம் இதில் ஒரு பகுதி. மற்றும் வரிசையாக சூரிய மண்டலம், சந்திர லோகம், புதன், சுக்கிரன், அங்காரகன், குரு, சனி, சப்தரிஷி மண்டலம், துருவ லோகம் என்று பல பிரிவுகள் உள்ளன. கல்ப முடிவில் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் மட்டும் அழியும்.

14.கோனார்க் (உத்கல நாடு)
ஒரிஸ்ஸா (அ) உத்கலப் பகுதியில் வேத சாஸ்திர புராணங்கள் அறிந்த பிராமணர்கள் உள்ளனர். யஜ்ஞ, யாகாதிகள் நடத்தும் திறம்மிக்க பண்டிதர்கள். இங்கு கோனாதித்தியன் எனப்படும் சூரியன் வடிவம் உள்ளது. அர்க்க, ஆதித்யா என்பவை சூரியனுடைய பெயர்கள். கோனாதித்தியன் என்றாலும் கோனார்க் என்றாலும் ஒன்றையே குறிக்கும். கோனாதித்தியன் (அ) சூரியனின் விக்கிரகத்தைப் பார்த்தாலே, தரிசனம் செய்தாலே பாவம் பொடிபடும். இதைச் சுற்றியுள்ள மணற்பகுதியில் மரங்கள் செழிப்பாக வளர்கின்றன. சூரியோதயத்தில் இக்கடவுளைத் தரிசிப்பது மிகவும் சிறப்புடையது. கிழக்கு நோக்கி நின்று, எட்டு இதழ்கள் கொண்ட தாமரை மலர், சிவப்பு சந்தனம், தாமரை இதழ்கள் ஆகியவற்றைப் பரப்பி, அதன்மீது ஒரு தாமரைச் சொம்பில் நெல், எள், நீர், சிவப்புச் சந்தனம், சிவப்பு மலர்கள், தர்ப்பை கொண்டு நிரப்ப வேண்டும். இத்தகைய அமைப்பில் தாமரை இதழ்கள் மீது சூரிய பகவானை எழுந்தருளுமாறு பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு இக்கோயிலிலுள்ள சூரிய தேவனைப் பூஜை செய்தால், ஏழு பிறப்பு வினைகளும், பாவங்களும் நீங்கும். இந்திரன், தத்தன், பர்ஜன்யன், த்வஷ்டன், புஷன், ஆர்யமன், பகன், விவஸ்வனன், விஷ்ணு, அம்ஷுனன், வருணன், மித்திரன் என்ற பன்னிரண்டும் சூரியனின் வெவ்வேறு உருவங்களே. சூரியன், இந்திரனாக தேவர்களின் பகைவர்களை அழிக்கிறான். தத்தனாகப் படைக்கிறான். பர்ஜன்னியனாக மழையைப் பொழிவிக்கிறான். த்வஷ்டனாகத் தாவரங்களில் வாழ்கிறான். புஷனாகத் தான்யங்களை உற்பத்தி செய்து வளர்க்கிறான். ஆர்யமனாக காற்றை வீசுகிறான். பகலனாக எல்லா ஜீவராசிகளிலும் குடிகொண்டுள்ளான். விவஸ்வனனே தீயாகி உணவாக்க உதவுகிறான். விஷ்ணுவாக துஷ்ட நிக்கிரகம் செய்கிறான். அம்ஷுமனாகக் காற்றில் உள்ளான். வருணனாக நீரிலும், மித்திரனாக சந்திரனிலும் சமுத்திரத்திலும் உள்ளான். மேற்கூறிய பன்னிரண்டு பெயர்களில் பன்னிரண்டு மாதங்களில் பிரகாசிக்கிறான். இந்தப் பன்னிரண்டிலும் கதிர்கள் வெவ்வேறு அணுவில் ஒளிர்கின்றன. இவையே அன்றி சூரியனுக்கு மேலும் பன்னிரண்டு பெயர்கள் உள்ளன. அவை முறையே ஆதித்தியன், சவிதன், சூரியன், மித்திரன், அர்க்கன், பிரபாகரன், மார்த்தாண்டன், பாஸ்கரன், பானு, சித்திரபானு, திவாகரன், ரவி என்பவை. இந்த பிரமம புராணத்தில் சூரியனுடைய அஷ்டோத்திர நாமங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

15.இந்திரத்யும்னனும் புரு÷ஷாத்தம ÷க்ஷத்திரமும்
சத்திய யுகத்தில் இந்திரத்யும்னன் என்ற புகழ்பெற்ற மன்னன் இருந்தான். அவன் சத்தியம், நீதி, நெறிமுறையை தவறாது ஆண்டு வந்தான். அவன் ஒரு நல்ல ÷க்ஷத்திரத்தில் ஸ்ரீவிஷ்ணுவைத் தரிசிக்க நினைத்தான். ஆனால், எந்தத் தலமும் அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அந்த மன்னனின் தலைநகரம் அவந்தி மாளவ நாட்டில் இருந்தது. எல்லா வகையிலும் அந்த நகரம் சிறப்பு வாய்ந்து விளங்கியது. அழகு, இயற்கை, எழில், கோட்டை, யாவும் பெற்றிருந்தது. அந்நகரில் மகாகாலன் என்ற சிவன் கோயில் கீர்த்தி வாய்ந்தது. மகாகாலனைத் தரிசித்தால் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும். அவந்தி நகரில் ஷிர்பா நதி ஓடுகிறது. அதன் கரைகளில் விஷ்ணுவுக்கு கோவிந்தசாமி ஆலயம், விக்கிரம ஸ்வாமி ஆலயம் என இரண்டு ஆலயங்கள் இருந்தன. இவ்வளவு இருந்தும் அவை மன்னனுக்கு மனத் திருப்தி தரவில்லை. எனவே, அவன் ஸ்ரீ விஷ்ணுக்குப் புதியதாக ஓர் ஆலய நிர்மாணம் செய்யத்தக்க இடத்தைத் தேடினான். இவ்வாறு தேடிய அவன் இறுதியில் தெற்கிலுள்ள லவண சமுத்திரக் கரையை அடைந்தான். ஆங்கோர் இடத்தில் பூக்களும், பழக்களும் நிறைந்து, பலவிதப் பறவைகளும் நிறைந்த ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தான். அதுதான் தற்போது பூரி என்று புகழ்பெற்ற புரு÷ஷாத்தம ÷க்ஷத்திரம். இந்தத் தலம் ஒரு முக்கிய தீர்த்தமாகும். ஆனால் அதைப் பற்றிய விவரங்கள் மறைந்து கிடந்தன. இந்த இடத்தில் முன்பொரு விஷ்ணு கோயில் புகழ்பெற்று விளங்கியது. அந்த விஷ்ணுமூர்த்தியைத் தரிசித்தவர் எல்லாப் பாவங்களும் நீங்கிப் புனிதராயினர். இதனால் அங்கு எந்தப் பாவியையும் தண்டிக்க முடியாத யமதர்மன் பகவானிடம் முறையிட விக்கிரகம் மணலில் புதையுண்டு போயிற்று. இந்த இடம் இந்திரத்யும்னனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதன் அருகில் மகாநதி ஓடிக் கொண்டிருந்தது. ஒரு முகூர்த்த நாளில் ஆலய நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இச்செய்தியைப் பற்றி கலிங்க, உத்கல, கோசல நாட்டு மக்களுக்கும் தெரிவித்து ஆலயத்துக்கான கற்களை வேண்டினான். விந்திய மலைகளிலிருந்து கற்கள் படகுகளிலும், தேர்களிலும் வந்து சேர்ந்தன. மற்ற நாட்டு மன்னர்களும் ஆலய நிர்மாணச் செய்தியை அறிந்து ஒன்று கூடினர். அவர்களிடம் மன்னன் தான் மிகக் கடினமான இரண்டு பணிகளை மேற்கொண்டிருப்பதாகவும், அவர்களது உதவியால் அவை நிறைவு பெறும் என்ற நம்பிக்கையையும் விண்ணப்பித்தான்.
ஜம்புத்வீபத்திலிருந்து வேதசாஸ்திர விற்பன்னர்கள் வந்தனர். சிறப்பாக யாகசாலை நிர்மாணம் செய்யப்பட்டு யாகம் நல்ல முறையில் நடந்தேறியது. இனி விக்கிரக உருவாக்கம் பற்றித் தன் கவனத்தைச் செலுத்திய மன்னன் ஒரு கனவு கண்டான். அதில் மகாவிஷ்ணு தோன்றி கவலை வேண்டாம். சூரியோதயத்தில் சமுத்திரக்கரைக்குச் செல். அங்கு நன்கு வளர்ந்த ஒரு மரம் பாதி நீரிலும், பாதி மணலிலுமாக ஓங்கி வளர்ந்திருக்கும். அதை வெட்டி எடுத்து அதைக் கொண்டு பிரதிமைகளை உருவாக்கு என்றார். மரம் இரண்டு துண்டாக வெட்டப்படும் போது அங்கே விஷ்ணுவும், விச்வகர்மாவும் இரண்டு அந்தணர் வடிவில் தோன்றினர். அவர்கள் மரத்தை ஏன் வெட்டினாய் என்று கேட்க, மன்னன் கனவில் விஷ்ணு இட்ட ஆணையைப் பற்றி விளக்கினான். அப்போது அந்தணர் வடிவில் இருந்த விஷ்ணு அது நல்ல காரியம் என்று சிலாகித்து, மேலும் தன் அருகிலுள்ள அந்தணச் சிறந்த சிற்பி விக்கிரகம் அமைத்துக் கொடுப்பார் என்று கூறினார். அந்த அந்தணச் சிற்பி உதவியால் மூன்று பிரதிமைகள் உருவாகின. ஒன்று, வெள்ளை நிறத்தில் உருவான பலதேவர் எனப்படும் பலராமர் விக்ரகம். கண்கள் மட்டும் சிவப்பாக அமைந்தன. நீலவர்ண உடை, தலை மீது பாம்புப் படம், கையில் கதைகளுடன் ஏற்பட்டது. இரண்டாவது ஸ்ரீகிருஷ்ணனின் பிரதிமை. நீல நிறம். தாமரைக் கண்கள், மஞ்சள் உடை, கையில் சக்கராயுதத்துடன் உருவாயிற்று. மூன்றாவது, கிருஷ்ணனின் சகோதரி சுபத்திரையின் பிரதிமை. பொன்னாலான பட்டாடையுடன் தோன்றியது. கண நேரத்தில் பிரதிமைகள் உருவானது கண்ட மன்னன் பிரத்யும்னன் அந்தணர்களின் கால்களில் வணங்கி நீங்கள் உண்மையில் அந்தணர்கள் அல்லர், நீங்கள் யார்? என்று வினவினான். உடனே இருவரும் விஷ்ணு, விசுவகர்மாவாகத் தோன்ற மன்னன் மெய்மறந்து நின்றான். மகாவிஷ்ணு இந்திரத்யும்னனை ஆசிர்வதித்தார். நெடுங்காலம் நாட்டை ஆண்டு பரமபதத்தை அடைவாய் என்று கூறி மறைந்தார். ஒரு நன்முகூர்த்த நாளில் மூன்று விக்கிரகங்களும் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

16.மார்க்கண்டேயரும் புவனேசுவரர் ஆலயமும்
முன்காலத்தில் மார்க்கண்டேயர் என்ற முனிவர் கடும் தவம் செய்து வந்தார். எங்கும் நீரும் அந்தகாரமும் சூழ்ந்தன. உலகெங்கும் தீ பரவியது. மார்க்கண்டேயரையும் தீ பாதிக்க அவர் ஓர் ஆலமரத்தைக் கண்டார். அதன் அடியில் அமர்ந்து தொடர்ந்து விஷ்ணுவை நோக்கித் தவம் செய்யலானார். ஜலத்தின் மீது பள்ளி கொண்டிருந்த விஷ்ணு பகவான் மார்க்கண்டேயனிடம், அச்சம் வேண்டாம். என்னுடைய பக்தனாகிய உன்னைக் காப்பாற்றுவேன் என்றார். தன்னுடன் பேசியது யார்? என்ற வியப்பில் ஆழ்ந்திருந்த போது ஆலமரம் நீரில் மிதக்க அதனடியில் கிளைகளின் மீது ஒரு தங்கப் படுக்கையில் ஒரு சிறுவன் படுத்திருப்பதைக் கண்டார். அச்சிறுவன் விஷ்ணு என்பதை அவர் அறியவில்லை. அப்போது அச்சிறுவன், நீ களைப்படைந்திருக்கிறாய். என்னுடைய உடலில் சேர்ந்து ஓய்வு கொள் என்றான். அந்தச் சிறுவன் உடலில் பிரவேசித்த மார்க்கண்டேயர் அங்கு இந்தப் பேரண்டத்தின் சகல பகுதிகளையும் கண்டார். என்ன செய்வதென்று தோன்றாமல் திகைத்து அச்சிறுவனிலிருந்து வெளிப்போந்து விஷ்ணுவைப் பிரார்த்திக்க அவர் முன் மகாவிஷ்ணு தோன்றி வேண்டிய வரத்தைக் கேள் என்றார். அப்போது முனிவர் புரு÷ஷாத்தம ÷க்ஷத்திரத்தில் அரியும், சிவனும் ஒன்றே என்று காட்ட ஒரு சிவாலயம் எழுப்ப விரும்புகிறேன். அதற்கு அருள் புரிய வேண்டும் என வேண்டினான். பகவான் விஷ்ணு, கோரிய வரத்தை அருள, மார்க்கண்டேயர் புவனேச்வரர் ஆலயத்தை நிர்மாணித்தார்.

17.பலிச்சக்கரவர்த்தியும் உலகளந்தானும்
இது வாமன அவதாரம் பற்றிய பகுதி. பல புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதில், ஓங்கி உலகளந்தான் மூன்றாவது அடியை பலியின் சிரசில் அல்ல, முதுகில் வைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஓங்கி உலகளந்தான் பாதம் விண்ணை அளந்த போது பிரம்மன் கமண்டலத்திலிருந்த புனித நீரால் பாதத்தை நீராட்ட அந்நீர் மலைகள் மீது தெளிக்கப்பட்டு நாலாபுறமும் பாய மேற்கில் சிந்திய நீர் பிரம்மன் கமண்டலத்தையே திரும்பி வந்து அடைந்தது. கிழக்கில் சென்ற நீரைத் தேவர்களும், முனிவர்களும் சேகரித்தனர். தெற்கில் பாய்ந்த நீர் சிவனின் ஜடாமுடியில் இறங்கியது. அதுவே கங்கை நதி ஆகும்.

18.கவுதம முனிவரும் கங்கையும்

சிவனை மணம் புரிந்த பார்வதி, அவர் கங்கை மீது ஆசையாய் இருப்பது குறித்து வருத்தமுற்று கங்கையை அகற்ற பலவாறு முயன்றும் வெற்றி கொள்ள இயலவில்லை. அந்த நிலையில் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் பஞ்சம் தாண்டவமாடிற்று. அவ்வமயம் கௌதம முனிவரின் ஆசிரமம் மட்டும் பஞ்சத்தால் பாதிக்கப்படாமல் செழிப்பாகவே விளங்கியது. எனவே எல்லா முனிவர்களும் கவுதமர் ஆசிரமத்தை அடைய, அவர்களை வரவேற்றார் கவுதமர். இதற்கிடையில் தாயின் வருத்தத்தை அறிந்த கணேசரும் கவுதமர் ஆசிரமத்தை அடைந்தார். பார்வதிக்கு ஜயா என்றொரு தோழி. கணேசர், அவளிடம் ஒரு பசுவாக மாறி கவுதமர் வயலில் மேயும்படி கூற, அவ்வாறே நிகழ்ந்தது. பசு மேய்வதைக் கண்ட கவுதமர் ஒரு தர்ப்பைப் புல்லைக் கொண்டு அதை விரட்ட, பசு துயரக்குரல் எழுப்பி கீழே வீழ்ந்து இறந்தது. இவ்வாறு பசுஹத்யை நடந்த ஆசிரமத்தில் இருக்க இஷ்டம் இன்றி முனிவர்கள் அகன்றனர். அவர்களைத் தடுக்க கவுதமர் முயன்றார். மேலும், தான் என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று கூறுமாறு வேண்டினார். அப்போது கணேசர், சிவபெருமான் சடையிலுள்ள கங்கையை இறக்கி கீழே ஓடச் செய்து, அந்நீர் இறந்த பசுவின் உடலை அடைந்தால் பாவம் அகலும் என்று சொன்னார். கணேசரின் திட்டத்தை அனைவரும் ஆமோதித்தனர். கவுதமரும் அதை ஒப்புக்கொண்டார். கவுதமர் கைலாயம் சென்று சிவனைக் குறித்துத் தவம் செய்ய, மகிழ்ச்சியுற்ற சிவபெருமான் வேண்டும் வரம் கேட்குமாறு கூற, கவுதமரின் வேண்டுதலின்படி அவரும் கங்கையை இறக்கி விட்டார். இவ்வாறு கவுதமர் கங்கையை புவிக்குக் கொண்டு வந்ததால் கௌதமி கங்கை என்ற பெயர் ஏற்பட்டது. விண்ணில் கங்கைக்கு நான்கு உபநதிகளும், பூமியில் ஏழு கிளை நதிகளும், பாதாளத்தில் நான்கும் உள்ளன என்று கூறப்படுகிறது.

19.கபோத தீர்த்தம்

கபோதம் என்றால் புறா. இரண்டு புறாக்களின் ஞாபகார்த்தமாக ஏற்பட்ட கபோத தீர்த்த வரலாற்றினைப் பார்ப்போம். பிரம்மகிரி என்ற மலையில் ஒரு கொடிய வேடன் இருந்தான். அவன் பறவைகள், மிருகங்களை மட்டுமின்றி பிராமணர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். ஒருநாள் வேட்டை ஆடிக்கொண்டே காட்டில் வெகுதூரம் சென்றுவிட்டான் வேடன். அவனிடம் பிடிபட்ட சில புறாக்களும், பறவைகளும் இருந்தன. இருள் சூழ்ந்தது. மழையும் பெய்ய ஆரம்பித்தது. வேடனுக்குப் பசியும், தாகமும் அதிகரித்தது. அவன் ஒரு மரத்தை அடைந்து ஒரு கிளையில் அமர்ந்து இரவைக் கழிக்க முடிவு செய்தான். ஆனால், அவன் மனமோ மனைவி, மக்களை எண்ணி வருத்தமுற்றது. அந்த மரத்தில் பல நாட்களாக ஒரு பெண்புறாவும், ஆண் புறாவும் வாழ்ந்து வந்தன. அவற்றில் பெண் புறா வேடனால் பிடிக்கப்பட்டு கூண்டில் அடைப்பட்டு வேடனிடம் இருந்தது. இதனை அறியாத ஆண்புறா தன் மனைவியை எண்ணி வருந்தியது. வேடன் நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனிடமிருந்த பெண் புறா, ஆண் புறாவின் செவிகளில் விழும்படியும், ஆண் புறா பெண் புறாவின் காதுகளில் விழும்படியும் பேசத் தொடங்கின. வேடன் உறங்குவதால் பெண் புறாவை விடுவிப்பதாக ஆண் புறா கூற பெண் புறா அதை மறுத்தது. மேலும், ஒன்று ஒன்றை அழித்து உயிர் வாழ்வது உலக இயற்கை. எனவே அந்த எண்ணத்தை விடுத்து விருந்தினனான வேடனை எண்ணி அவனுக்கு உதவுவது தமது கடன் என்று கூறிற்று. உடனே ஆண் புறா வேடனின் குளிரை நீக்கச் சுள்ளிகளையும், சருகுகளையும் கொண்டு தீ மூட்டியது. பின்னர் அது தீயில் விழுந்து இறந்தது. பெண் புறாவும் தானும் தீயில் விழுந்து உணவாக விரும்புவதாக கூறி தீயில் குதித்தது. இவற்றை உணர்ந்த அந்த வேடன் மனம் மாறினான். அவன் அன்று முதல் வேட்டையாடுவதை நிறுத்தியதுடன் இதுவரையில் செய்த கொலைகளுக்காக வருந்தி, தான் இனி செய்ய வேண்டுவது யாது? எனச் சிந்தித்தான். புறாக்களின் தியாகத்தைக் கண்டு விண்ணிலிருந்து வந்த விமானத்தில் புறாக்கள் ஏறி நல்லுலகை அடைந்தன. அப்போது அப்புறாக்கள் கவுதம கங்கையில் பதினைந்து நாட்கள் நீராடினால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று வேடனிடம் கூறின. இவ்வாறு புறாக்கள் தியாகம் செய்ய தீயில் விழுந்த இடம் கபோத தீர்த்தம் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது.

20.கருட தீர்த்தம்

பெரிய நாகமாகிய அனந்தனின் மகன் மணிநாகன் என்பான். பாம்புகளின் பகைவன் கருடன். எனவே பாம்புகள் கருடனிடம் அச்சம் கொண்டிருந்தன. மணிநாகன் சிவனை வேண்டி கருடனால் தனக்கு அபாயம் ஏற்படாதவாறு வரம் பெற்று அச்சமற்று திரிந்து வந்தது. கருடனால் மணிநாகனைக் கொல்ல முடியாது எனினும் அவனைப் பிடித்து சிறையில் வைத்தது. சிவபெருமான் நந்தியிடம் மணிநாகனுக்கு என்ன ஆயிற்று. அதைக் காணவில்லையே என்று கேட்டார். அதற்கு நந்தி மணிநாகனைக் கருடன் சிறை வைத்திருக்கிறது என்றார். உடனே, நந்தியை விஷ்ணுவை நோக்கித் தவம் செய்யுமாறு சொல்ல, நந்தியின் தவத்தை மெச்சி தோன்றிய விஷ்ணுவிடம் நந்தி, கருடனது பிடியிலிருந்து மணிநாகனை விடுவிக்குமாறு வேண்டிட, விஷ்ணுவும் கருடனிடம் உடனே மணிநாகனை விடுவிக்கச் செய்தார். இதனால் கோபம் கொண்ட கருடன் விஷ்ணுவிடம், எல்லோரும் தன் தொண்டர்களுக்கு உதவி செய்கின்றனர், பரிசு அளிக்கின்றனர். ஆனால் நீங்களோ நானே பெற்ற ஒன்றையும் விட்டுவிடச் செய்கிறீர்கள். இது என்ன நியாயம் என்று கேட்டது. அப்போது விஷ்ணு நீ சொன்னது சரிதான். என்னை சுமந்ததால் நீ இளைத்து பலவீனம் அடைந்து விட்டாய். உன்னுடைய சக்தி, திறமை, சாமர்த்தியத்தால் தான் நான் அரக்கர்களை வெல்ல முடிந்தது. உனக்கு மிக்க பலம் உள்ளது. இதோ இந்த எனது சிறு விரலைத் தாங்கி உன் வலிமையை நீ நிரூபி என்று கூறி, தன் சிறு விரலைக் கருடன் தலையில் வைத்து அழுத்த கருடன் நசுங்கியது. அதனால் வெட்கமுற்று, தன் தவறுக்காக வருந்தி தன்னைக் காத்திடுமாறு சரணடைந்தது. விஷ்ணு நந்தியிடம், கருடனைச் சிவபெருமானிடம் அழைத்துச் செல்லுமாறு கூறி, கருடனுக்கு சிவபெருமான் அருள்புரிவார் என்று சொல்ல, கருடன் மணிநாகனை விடுதலை செய்து விட்டு பரமசிவனைச் சென்று தரிசித்தது. சிவபெருமான் கருடனை கௌதமி கங்கையில் தீர்த்தமாடி முன் போல் மாறிட அருள் புரிந்தார். அவ்வாறே கருடன் நீராடி முன்னைவிட பலமும், வேகமும் பெற்றது. கருடன் நீராடிய அவ்விடம் கருட தீர்த்தம் எனப்படுகிறது.

21.விசுவாமித்திர தீர்த்தம்

முன்னொரு காலத்தில் கோர பஞ்சம் தலைவிரித்தாடியது. விஸ்வாமித்திர முனிவர், மனைவி மக்கள் மற்றும் சீடர்களுடன் கவுதமி கங்கை கரைக்கு வந்தடைந்தார். அவர்கள் உணவைத் தேடி அலைகையில் ஓர் இறந்த நாயின் உடல் மட்டும் காணப்பட்டது. அதன் இறைச்சியைத் தூய்மை செய்து கடவுளுக்கும், முனிவர்களுக்கும், மூதாதையர்களுக்கும் படைக்குமாறு கூறினார். அப்போது கழுகு வடிவில் அங்கு வந்த இந்திரன் அந்த மாமிசக் கலயத்தைத் திருடிச் சென்றார். இதை அறிந்த முனிவர் அவருக்குச் சாபம் அளிக்க எண்ணியபோது, இந்திரன் அந்தப் பாத்திரத்திலுள்ள இறைச்சியை அமிர்தமாக மாற்றிக் கொண்டுவந்து கொடுக்க, முனிவர் அதை ஏற்க மறுத்தார். உலகில் எல்லோரும் உணவின்றி தவிக்கையில் தனக்கு அமிர்தம் வேண்டாம் என்றும், அத்தகைய சூழ்நிலையில் நாயினிறைச்சியை உட்கொள்வது தவறாகாது. மேலும் அதை இறைவனுக்குப் படைப்பது பாவம் ஆகாது, என்றார். மழைக்குக் கடவுளாகிய இந்திரன், முனிவர் நாய் இறைச்சியை உண்ணாமல் செய்ய ஒரே வழி மழையே என்று எண்ணி மழை பொழியச் செய்ய பஞ்சம் பறந்தோடியது. அப்போது விசுவாமித்திரர் அமிர்தத்தை ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சி நடந்த இடம் விசுவாமித்திர தீர்த்தம் எனப் பெயர் பெற்றது.

22.கவுதமி கங்கை ஜல மகிமை

சுவேதன் என்னும் பிராமணர் ஒரு சிவபக்தர். கௌதம முனிவரின் நண்பர். கவுதமி கங்கை நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்த அவர் மரணம் அடைந்தார். அவரை யமனிடம் அழைத்துச் செல்ல வந்த யம தூதர்களால் அவரது ஆசிரமத்தில் நுழையக்கூட முடியவில்லை. அவர்கள் திரும்பி வராததைக் கண்ட சித்திரகுப்தன் அது குறித்து யமனிடம் கூற, யமன் தனது தோழனாகிய மிருத்யுவை அனுப்பி வைத்தான். மிருத்யு, ஆசிரம வாயிலிலேயே நின்று கொண்டிருந்த யமதூதர்களை அணுகி கேட்க, சுவேதனின் உடலை சிவபெருமான் காத்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள். சிவகணங்களில் ஒருவர், யமதூதர்களையும், மிருத்யுவையும் பார்த்து அவர்களுக்கு என்ன வேண்டும். ஏன் அங்கு நிற்கிறார்கள் என்று கேட்க, மிருத்யு சுவேதனின் ஆயுள் முடிந்து விட்டது. அவரை யமபுரிக்கு அழைத்துச் செல்ல வந்திருப்பதாகக் கூறினான். சுவேதனின் உடல் மீது மிருத்யு பாசக்கயிறை வீச சிவகணம் மிருத்யுவைத் தடியால் அடித்துக் கொன்றான். செய்தி கேட்ட யமதர்மன் மிகவும் கோபம் கொண்டு தன் பரிவாரங்களுடன் சுவேதனின் வீட்டைத் தாக்கினான். சிவபெருமான் பக்கத்தில் கணேசர், நந்தி, கார்த்திகேயன் முதலியோர் யமனுடன் போர் தொடுத்தனர். கடும் போர் நடந்தது. கார்த்திகேயனால் யமன் கொல்லப்பட்டான். இந்தப் பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர தேவர்கள் கூடினர். யமன் தன்னுடைய கடமையைச் செய்தான். ஆனால் சிவபக்தர்களை யமன் யமபுரிக்கு அழைத்துச் செல்லக் கூடாது. அவர்கள் நேராகச் சுவர்க்கம் செல்ல வேண்டும் என்றார். அந்த நிபந்தனை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கௌதமி கங்கை ஜலத்தை நந்தி கொண்டு வந்து யமன் மீதும், மற்றும் போரில் இறந்தவர்கள் மீதும் தெளிக்க அவர்கள் உயிர் பெற்றனர்.

23.நிதிக்கதிபதி குபேரன்

விச்ரவ முனிவருக்கு இரண்டு மனைவியர். மூத்தவள் மகன் குபேரன். இளையவள் ஓர் அரக்கி. அவளுக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்று மூன்று மகன்கள். இலங்கையைப் பேரும், புகழுடன் குபேரன் ஆண்டு வந்தான். இது அவனுடைய சிற்றன்னைக்குப் பொறுக்கவில்லை. அதைப் பற்றி தன் புத்திரர்களிடம் கூறி, அவர்களும் புகழ்பெற ஆவன செய்யுமாறு கூற, அவர்கள் கானகம் சென்று பிரம்மனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து வலிமை பெற்று நாடாள வரம் வேண்ட பிரம்மனும் அவர்கள் விரும்பியபடி வரம் அளித்தார். இவ்வாறு வலிமை பெற்ற ராவணன், கும்பகர்ணன் ஆகியோர் குபேரனை எதிர்த்து தோற்கடித்தனர். அவனை இலங்கையை விட்டு விரட்டினர். குபேரனுடைய புஷ்பக விமானத்தையும் கைப்பற்றினர். குபேரனுக்கு யாரேனும் அடைக்கலம் கொடுத்தால் அவனைக் கொல்வதாக அறிவிக்க யாரும் அவனுக்கு அடைக்கலம் அளிக்க முன்வரவில்லை. குபேரன் தன் பாட்டனாராகிய புலஸ்தியரின் அறிவுரையை வேண்டினான். புலஸ்தியர் குபேரனை கவுதமி கங்கைக் கரையை அடைந்து சிவனைக் குறித்துத் தவம் செய்யுமாறு கூறினார். குபேரன் கவுதமி கங்கைக் கரையில் சிவனை நினைத்து தவம் செய்ய சிவபெருமான் தோன்றி, குபேரனை நிதிக்கதிபதியாக்கி ஆசிர்வதித்தார். இவ்வாறு குபேரன் செல்வத்துக்குக் கடவுள் ஆனான்.

24.ஹரிச்சந்திரன்

இஷ்வாகு குலத்தோன்றல் ராஜா ஹரிச்சந்திரனுக்கு புத்திரப் பேறு ஏற்படவில்லை. நாரதரும், பர்வதரும் அவனுக்குப் புத்திரன் இல்லாவிட்டால் அவர் நரகம் செல்ல நேரிடும் என்றனர். அதற்கான வழியை அவன் முனிவர்களிடம் கேட்க, அவர்கள் கவுதமி கங்கைக் கரையை அடைந்து வருணனைக் குறித்து பிரார்த்திக்கும் படியும், அதனால் மகப்பேறு ஏற்படும் என்றும் அறிவுரை கூறினர். வருணன் தோன்றி அவனுக்கு ஒரு மகன் பிறப்பான் என்றும், ஆனால் அவனை வருணனைக் குறித்த யாகத்தில் பலி கொடுக்க வேண்டும் என்று கூற, ஹரிச்சந்திரன் சம்மதிக்க அவனுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்து ரோஹிதன் என்ற பெயரில் வளர்ந்து வந்தது. சில நாட்களில் வருணன் தோன்றி யாகத்தைப் பற்றி நினைவூட்ட அவனுக்குப் பத்து நாட்கள் ஆகட்டும். அதுவரையில் தூயவனாகான் என்று கூறி வருணனை அனுப்பிவிட்டான். பன்னிரண்டு நாட்கள் கழித்து வருணன் வர குழந்தைக்குப் பல் முளைக்கட்டும் என்றான். ஏழாண்டுகள் கழித்து மறுபடியும் வருணன் வந்து கேட்க, அவனுக்குப் பால் பற்களே உள்ளன. உண்மை பற்கள் வளரட்டும் என்றான். அடுத்து வருணன் வந்தபோது அந்தப் பாலகன் க்ஷத்திரியக் குலத்தோன்றல். அவன் அங்கே சாத்திர வித்தைகள் கற்று முழு க்ஷத்திரியன் ஆகட்டும் என்றான் மன்னன். பதினாறு வயதில் அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்தான் வருணன். அவ்வமயம் வந்த வருணன் முன் மன்னனும், இளவரசன் ரோஹிதனும் உரையாடினர். அப்போது மன்னன் பேசுவதற்கு முன்பே ரோஹிதன் வருணனிடம், தான் விஷ்ணுவைக் குறித்த ஒரு யாகம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும், அதைச் செய்ய அனுமதிக்குமாறும் அதன்பின் விரும்பிய வண்ணம் செய்யலாம் என்று கூறினான்.

ரோஹிதன் கானகம் சென்றான். அவ்வமயம் அவன் தந்தை வயிற்று நோயால் அவதியுறுவதாகவும் செய்தி எட்டியது. காட்டில் ரோஹிதன் அஜிகர்த்தா என்னும் ஓர் ஏழை முனிவரை அவரது மனைவி, மற்றும் மூன்று புத்திரர்களுடன் வறுமையில், உண்ண உணவின்றித் தவிப்பதைக் கண்டான். அவன் முனிவரிடம் ஒரு யாக பலிக்காக அவருடைய புதல்வர்களில் ஒருவரைத் தருமாறும் அதற்கு ஈடாக ஆயிரம் பசுக்களும், ஆயிரம் பொற்காசுகளும், ஆயிரம் ஆடைகளும், நிறைய செல்வமும் அளிப்பதாகக் கூறினான் ரோஹிதன். முனிவர் தனது நடுமகனாகிய ஷுனஷேபனைக் கொடுக்க, ரோஹிதன் அவனைத் தந்தையிடம் அழைத்து வந்தான். அப்போது ஹரிச்சந்திரன் மன்னன் பிராமணர்களை ரக்ஷிக்க வேண்டியவன். எனவே அவனை முனிவரிடம் திருப்பிக் கொண்டு போய் விட்டுவிடு என்ற ஆணையிட்டான். அப்போது ஓர் அசரீரி வாக்கு கேட்டது. யாரும் பலி ஆக வேண்டியதில்லை. ஷுனஷேபனைக் கவுதமி கங்கைக் கரைக்கு அழைத்துச் சென்று வருணனை முன்னிட்டு யாகம் நடக்கட்டும். அது மிகச்சிறந்த புண்ணிய நதி. அதன் கரையில் செய்யப்படும் யாகத்திற்குப் பலி தேவையில்லை என்றது. ஹரிச்சந்திரன் அவ்வாறே செய்ய வருணனும் திருப்தி அடைந்தான். விசுவாமித்ர முனிவர் ஷுனஷேபனைத் தன் மகனாகத் தத்தெடுத்துக் கொண்டார்.

25.விருத்த கவுதமனும் விருத்த சங்கமமும்

கௌதம முனிவருக்கு விருத்த கவுதமன் என்றொரு மகன் இருந்தான். அவன் ஒரு மூக்கறையன். எனவே அவன் குருகுலம் செல்லவில்லை. கற்கவுமில்லை. எனினும் எப்போதும் சில மந்திரங்களை உச்சரித்த வண்ணம் இருந்தான். இளமை அடைந்த அவன் உலகைச் சுற்றிவரக் கிளம்பினான். மூக்கறையன் என்பதால் அவனுக்குத் திருமணம் ஆகவில்லை. சுற்றுப்பயணம் கிளம்பிய அவன் ஷிதகிரியை அடைந்தான். அங்கு ஓர் அழகிய குகையைக் கண்டு அதனை இருப்பிடமாக்கிக் கொள்ள உள்ளே நுழைந்தான். அதனுள் ஓர் ஆச்சரியத்தைக் கண்டான். அதனுள் வயது முதிர்ச்சியால் மிகவும் மெலிந்த ஒரு முதியவனைக் கண்டு அவளுடைய பாதங்களைத் தொட முயற்சிக்கையில் அம்முதியவள், அவன் அவளுடைய குரு என்றும், அதனால் தன்னை வணங்கக் கூடாது என்றும் தடுத்தாள். அப்போது முனிபுத்திரன் வியப்புற்று அது எவ்வாறு சாத்தியமாகும், தானோ வயதில் சிறியவன் என்று கூறி மூதாட்டியை வினவ, அவள் தன் வரலாற்றைக் கூறினாள்.

மூதாட்டியின் வரலாறு: ரிதத்வஜன் என்றொரு இளவரசன் இருந்தான். அவன் ஓர் அழகிய வலிமை வாய்ந்த இளைஞன். அர்ஷ்டிஷேனனின் மகன். அவன் வனத்தில் வேட்டையாடித் திரிய அந்த குகைக்கருகில் ஓர் அப்சர மங்கையைக் கண்டான். அவள் பெயர் சுஷ்யமை. இருவரும் திருமணம் செய்து கொள்ள அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் அந்த இளவரசன் ஊர் திரும்ப நேர்ந்தது. அப்போது சுஷ்யமை அந்தப் பெண் குழந்தையிடம் அவள் குகையை விட்டு வரக்கூடாது என்றும், குகையில் அவள் முதல் முதல் சந்திக்கும் ஆணே அவளுக்குக் கணவனாவான் என்றும் கூறிச் சென்று விட்டான். அந்தப் பெண் குழந்தையே இந்த வயது முதிர்ந்த மூதாட்டி. ரிதத்வஜனும் அவன் மகனும் நெடுங்காலம் நாடாண்டனர். இத்தனை ஆண்டுகளாகத் தான் அங்கிருப்பதாகக் கூறினாள் மூதாட்டி. முதன்முதலில் தான் கண்ட ஆண் விருத்த கௌதமனே என்றும், அவனே அவள் கணவன் என்றும், ஒரு பெண்ணுக்கு அவள் கணவன் குரு அல்லவா என்றும் சொன்னான். அப்போது அவன், அதெப்படி சாத்தியமாகும். நீயோ மூதாட்டி. நானோ உனக்குக் குழந்தை போல என்று மறுக்க, அவளோ அவன் தன்னை மணம் செய்து கொள்ளாவிடின் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறினாள்.

அப்போது அவன் தான் அசிங்கமானவனென்றும் தான் கல்விமானாயும், அழகனாயுமானால் அவளை மணப்பதாகவும் கூறினான். அதற்கு மூதாட்டி, தான் சரசுவதியைக் குறித்துத் தவம் ஆற்றித் திருப்தி செய்திருப்பதால் அவள் அவனைக் கல்விமான் ஆக்குவாள் என்றும், வருணனிடம் வேண்டியுள்ளதால் வருணன் அவனை அழகனாக்கி விடுவான் என்றும் கூறினாள். உடனே விருத்த கவுதமன் கல்விமானாகவும், பேரழகனாகவும் மாறி அவளை மணந்து சுகமாக வாழ்ந்து வந்தான். பல முனிவர்கள் அவர்கள் ஆசிரமத்திற்கு வந்தனர். அவர்களில் சிறந்த கல்விமான்களாகிய வசிஷ்டரும், வாமதேவரும் இருந்தனர். அவர்களுடன் சில இளம் சீடர்களும் இருந்தனர். அவர்கள் இந்தத் தம்பதியரைக் கண்டு எள்ளி நகையாடினர். அவர்கள் அந்த ஆண் யார் என்று மூதாட்டியிடம் கேட்டனர். இதனால் இருவரும் வெட்கமடைந்தனர். அவர்கள் அகஸ்திய முனிவரை நாடி அவருடைய அறிவுரையை வேண்டினர். முனிவர் அவர்களிடம் கவுதம கங்கையின் சிறப்பை எடுத்துக் கூறி அங்கு சென்று அதில் நீராடினால் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற சொன்னார். அவ்வாறே அவர்கள் தீர்த்தமாடி அரியையும், அரனையும் வழிபட்டனர். கிழவி அழகிய குமரியானாள். இத்தகைய அதிசய நிகழ்ச்சி நடந்த இடம் விருத்த சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.

26.பிப்பலதன் வரலாறு

பல்லாண்டுகளுக்கு முன்பு ததீசி என்ற முனிவரும், அவரது மனைவி லோபமுத்திரையும் வாழ்ந்து வந்தானர். புனித நதி கங்கøக்கருகில் ததீசி ஆசிரமம் இருந்தது. அத்தம்பதியருடன் லோபமுத்திரையின் சகோதரி கபஸ்தினியும் இருந்து வந்தாள். அவருடைய தவ வலிமையை அறிந்த தானவர்களும், தைத்தியர்களும் அவரது ஆசிரமத்தில் நுழையவே அஞ்சினர். ஒரு சமயம் தேவாசுரப் போரில் அசுரர்களை வென்ற தேவர்கள் ததீசி முனிவருக்குத் தமது மரியாதையையும் வணக்கத்தையும் செலுத்த அவருடைய ஆசிரமத்திற்கு வந்தனர். முனிவர் அவர்களுடைய நலன்கள் பற்றி விசாரித்தார். அப்போது தேவர்கள், அசுரர்கள் தோற்று ஓடிவிட்டதால் இனி தமது ஆயுதங்களுக்கு பாதுகாவலாக ஓரிடத்தைத் தேடி வந்த தேவர்கள், அவற்றை முனிவர் ஆசிரமத்தில் வைக்க விரும்பி அவரை வேண்டினர். முனிவர் சம்மதம் தெரிவிக்கவே, தேவர்கள் அவற்றை ஆசிரமத்தில் வைத்து விட்டுச் சென்றனர். அது கண்ட லோபமுத்திரை, பற்றற்ற முனிவர், மற்றவர் பொருள்களைத் தன்னிடத்தில் வைத்துக் கொள்வது சரியல்ல. அந்த ஆயுதங்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் என்ன செய்வது? தேவர்கள் நம்மைக் குறை கூறமாட்டார்களா? என்றாள். நான் அதை எண்ணிப் பார்க்கவில்லை. எனினும் வாக்குக் கொடுத்த பின் அதிலிருந்து பின்வாங்க முடியாது என்றார் முனிவர். பல்லாண்டுகள் கழிய ஆயுதங்கள் மறைய ஆரம்பிக்க, என்ன செய்வதென்றறியாத முனிவர் அவற்றை புனித நீரில் தூய்மை செய்ய, அவை தமது சக்தியை இழந்துவிட்டன. அந்த நீரைத் ததீசி முனிவர் குடித்து விட்டார். பின்னர் தேவர்கள் அவர்கள் ஆயதங்களைப் பெற வந்து முனிவரைக் கேட்டனர். மறுபடியும் அசுரர்கள் வலிமை பெற்றுள்ளனர் என்றனர். முனிவர் அவர்களிடம் நடந்ததைக் கூறி அவை வலிமை இழந்துவிட்டதாலும், கழுவின நீரை அவர் பருகி விட்டதாலும், தான் தனது தவவலிமையால் உயிரை விடுவதாகவும், தன்னுடைய எலும்புகளிலிருந்து சிறந்த ஆயுதங்கள் உருவாகும் என்றார். ததீசி முனிவர் மரிக்க, தேவர்கள் விசுவகர்மாவிடம் முனிவர் எலும்பிலிருந்து ஆயுதங்களை உருவாக்க வேண்டினர். அப்படித் தயாரான ஆயுதங்களில் வஜ்ராயுதம் தலை சிறந்தது. இவ்வளவு நடைபெறும் போது லோபமுத்திரை அங்கில்லை. முனிவர் உடலுடன் அவள் உடன்கட்டை ஏற விரும்பினாள். ஆனால் அவள் கருவுற்றிருந்ததால் சதி தடைப்பட்டது. குழந்தை பிறந்தவுடன் அதை ஒரு பிப்பல மரத்திடம் (அத்திமரம்) வளர்க்க விட்டுவிட்டாள்.

பிப்பலதன்: பிப்பல மரத்தினால் வளர்க்கப்பட்ட அவன் பிப்பலதன் எனப்பட்டான். அம்மரம் பிப்பலதனுக்கு அமிர்தம் கேட்டு, சந்திரனை வேண்டிட, சந்திரன் கொடுக்க பிப்பலதன் அதிக பலம் பெற்றான். பிப்பலதன் தன் பெற்றோர்களின் மரணம் பற்றிய விவரங்களைக் கேட்டு பழிவாங்க நினைத்தான். பிப்பல மரம் அவனைச் சந்திரனிடம் அழைத்துச் செல்ல, சந்திரன் நல்லுரை வழங்கினான். சந்திரன் பிப்பலதனிடம் அவன் சிறியன் என்றும், அவன் கல்வி கற்க வேண்டும், அஸ்திர சாஸ்திர வித்தைகளைக் கற்க வேண்டும் என்றும் தண்ட காரணியத்துக்குச் செல்லுமாறும் அங்கு கௌதம கங்கை பாய்கிறது என்றும், அங்கு சென்று சிவனைக் குறித்து தவம் செய்தால் அவனுடைய கோரிக்கை நிறைவேறும் என்றும் அறிவுரை வழங்கினான். அவ்வாறே பிப்பலதன் தவம் செய்ய சிவபெருமான் தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்க, தேவர்களை நான் அழிக்க வரம் தரவேண்டும் என்று கேட்டான். அப்போது சிவபெருமான் தன் நெற்றியில் உள்ள கண்ணை அவன் என்று பார்க்கிறானோ அன்று அவன் கோரிக்கை நிறைவேறும் என்றார். நெடுநாட்களாகியும் சிவபெருமானைக் காணவோ, அவரது நெற்றிக் கண்ணைக் காணவோ இயலாததால் மறுபடியும் சிவனைக் குறித்துக் கடுந்தவம் செய்ய சிவனது நெற்றிக்கண்னைக் காண அதிலிருந்து ஒரு பூதம் தோன்றியது. அது பிப்பலதனிடம் என்ன வேண்டும் என்று கேட்க, பிப்பலதன் தன் பகைவர்களாகிய தேவர்களை அழிக்குமாறு ஆணை இட்டான். உடனே அது பிப்பலதனையே எதிர்த்தது. அதற்கு பிப்பலதன் என்ன காரணம் என்று கேட்க, அவன் உடலும் தேவர்களாலேயே உண்டாகியது. எனவே உன்னையும் நான் கொல்வேன் என்றது. தன்னைக் காத்துக் கொள்ள பிப்பலதன் சிவனிடம் ஓடினான். சிவபெருமான் ஓர் இடத்தைப் பிப்பலதனுக்காகக் குறிப்பிட்டு அதில் அவன் வசிக்க வழி ஏற்படுத்தினார். அவ்விடத்தில் பூதம் செல்ல முடியவில்லை. இதற்கிடையில் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தங்களைக் காப்பாற்ற வேண்டினர்.

பிப்பலதனுக்கு அறிவுரை: சிவபெருமான் பிப்பலதனிடம் கோபத்தை அடக்கிக் கொள்ளுமாறும், தேவர்களைக் கொல்வதால் அவனுடைய பெற்றோர்கள் திரும்பிவரப் போவதில்லை என்றும் கூறி சாந்தி அடையச் சொன்னார். ஆனால், பிப்பலதன் தன் பெற்றோர்களை ஒருமுறை பார்க்க விரும்பினான். அப்போது விண்ணிலிருந்து ஒரு விமானம் வந்தது. அதில் ததீசி முனிவரும், லோபமுத்திரையும் இருந்தனர். அவர்கள் பிப்பலதனை ஆசிர்வதித்து, திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்று இல்லறம் நடத்துமாறு அறிவுரை கூறினர். அந்தப் பூதம் ஒரு உபநதியாகி கங்கையுடன் இணைந்தது.

27.நாகேசுவரனும் நாகதீர்த்தமும்

பிரதிஷ்டானபுரம் என்ற நகரில் சூரேஸ்வரன் என்னும் ஓர் அரசன் ஆண்டு வந்தான். ஒருநாள் பிரார்த்தனைக்குப் பிறகு அவன் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அது ஒரு பாம்பாக இருப்பதைக் கண்டு மன்னனும், அவள் மனைவியும் துயரக் கடலில் ஆழ்ந்தனர். எனவே, அக்குழந்தையை யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் வளர்த்து வந்தனர். சில மாதங்களில் இளவரசனாகிய அந்தப் பாம்பு ஒரு மனிதக் குழந்தையைப் போல பேச ஆரம்பித்தது. அதற்கு வேதங்களைக் கற்பிக்க ஏற்பாடு செய்ய அதுவும் கற்று முடித்தது. அப்போது அந்த நாகக்குழந்தை தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறும், தனக்கொரு புத்திரன் இல்லாவிடில் நரகமே வாய்க்கும் என்றும் அந்த நாகம் கூறிற்று. இதைக் கேட்டு வியப்புற்ற மன்னன் எந்த இளவரசி பாம்பை மணக்கச் சம்மதிப்பாள் என்று கேட்டான். அதற்கு அது அதெல்லாம் தெரியாது தனக்குத் திருமணம் செய்து வைக்காவிடில் தற்கொலை செய்து கொள்வதாக கூறிற்று. அதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. ஓர் இளவரசியைக் கடத்தி வந்து மணம் செய்விக்கலாம் என்றது. செய்வதறியாமல் மன்னன் அமைச்சர்களிடம், இளவரசன் தக்க வயது அடைந்து கல்வி கேள்விகளில் சிறந்துள்ளான். தைரியசாலிகளில் அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்குத் திருமணம் செய்வித்து தான் வனம் சென்று தவம் செய்யப் போவதாகக் கூறினான். ஆனால், நாகேசுவரன் ஒரு பாம்பு என்ற விஷயம் அமைச்சர்களுக்குத் தெரியாது.

சூரசேனனுக்கு அறிவுமிக்க, மூத்த அமைச்சர் ஒருவர் இருந்தார். அவர் நாட்டின் கிழக்கில் விஜயன் என்றொரு மன்னன் ஆண்டு வருகிறான் என்றும், அவனுக்கு எட்டு புத்திரர்களும், போகவதி என்ற ஒரு புத்திரியும் இருக்கிறாள், அவள் சிறந்த அழகி. அவள் நாகேசுவரனுக்குத் தக்க மனைவி ஆவாள் என்றார். அந்த அமைச்சர் மன்னன் விஜயனிடம் தூதாக அனுப்பப்பட்டார். ஓர் இளவரசி ஒருவனை நேரில் பார்த்துத் தான் விவாகம் செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை. அவள், வாளுக்கோ அல்லது எந்த ஆயுதத்துக்கோ மாலையிட்டு மணம் செய்து கொள்ளலாம். அமைச்சர் மன்னன் விஜயனிடம் சில முக்கிய காரணங்களால் இளவரசன் நேரில் வரமுடியாத சூழ்நிலை. எனவே இளவரசன் வாளுக்கு மாலையிட்டு மணம் செய்யலாம் என்று கூற, மன்னனும் அதற்கு இசைந்தான். எனவே, இளவரசியுடன் அனைவரும் பிரதிஷ்டானபுரம் வந்தடைந்தனர். அப்போது நாகேசுவரனின் தாயார் ஒரு பணிப்பெண்ணை அனுப்பி மணமகள் இளவரசியிடம் அவள் கணவன் ஒரு பாம்பு என்று கூறி, அதற்கு அவளுடைய பிரதிக்கிரியை எப்படி இருக்கிறது என்று அறிய முற்பட்டாள். அவ்வாறே பணிப்பெண் சென்று இளவரசியிடம் கூற, இளவரசி அது தான் செய்த பாக்கியம், பெண்கள் சாதாரணமாக ஆண்களை மணப்பர். தான் முற்பிறவியில் செய்த நல்வினைப் பயனால் நாக தேவதையை மணக்கிறேன் என்று கூறினாள். இவ்வாறு இளவரசி கூற, அவளை நாகேசுவரன் முன் கொண்டுவர போகவதியைக் கண்டவுடன் நாகேசுவரனுக்கு முற்பிறவி ஞாபகம் வந்தது. தான் முன் ஜென்மத்தில் சிவனுடன் தோழனாக இருந்ததும், அப்போது போகவதி தன் மனைவியாக இருந்ததும் நினைவுக்கு வந்தது. ஒரு சமயம் பரமன் பார்வதியிடம் ஒரு நகைச்சுவை சொல்ல அங்கிருந்த அவனும் அதைக்கேட்டு சிரிக்க, சிவனார் அவனை ஒரு மனிதனுக்குக் குழந்தையாக, பாம்பு வடிவில் பிறக்க சாபமிட்டார். அதே சமயம் போகவதிக்கும் தன் முற்பிறவி செய்திகள் நினைவுக்கு வந்தன. இருவரும் கௌதம கங்கை ஆற்றை அடைந்து புனித நீராடினர். நாகேசுவரன் ஓர் அழகிய ஆண் வடிவம் பெற்றான். இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அவன் தந்தை சூரசேனன் இறந்த பிறகு நாகேசுவரன் அரசாட்சி செய்து இறுதியில் கைலையை அடைந்து சிவசந்நிதியைப் பெற்றான். அந்த ஆற்றங்கரையில் இருவரும் ஓர் சிவாலயம் எழுப்பினர். அவ்விடத்தின் பெயர் நாகதீர்த்தம் ஆகும்.

28.நான்முகனாகிய பிரமன்

ஒரு சமயம் நடந்த தேவாசுரப் போரில், தேவர்கள் பிரம்மனின் அறிவுரையைக் கேட்க வர, அவர் அவர்களுடன் சிவபெருமானைத் தரிசித்தார். சிவனார் தேவர்களுக்கு உதவியாகப் போரில் கலந்துகொண்டு அசுரர்களை சுமேரு மலையிலிருந்தும், சொர்க்கத்திலிருந்தும் விரட்டி அடிக்க அவருக்கு உடலில் அதிக வியர்வை ஏற்பட, வேர்வைத் துளிகள் விழுந்த இடத்திலெல்லாம் தோன்றிய பூதங்களும் சிவபெருமானுக்கு உதவியாக நின்றன. அவை மாத்ரிகள் எனப்பட்டன. அவை அரக்கர்களைப் பாதாளத்திற்குத் துரத்திச் சென்று கொல்லுகையில், பிரம்மனும் மற்ற தேவர்களும் கவுதமி கங்கை நதிக்கரையில் காத்திருந்தனர். அந்த இடமே பிரதிஷ்டானபுரம் என்றானது. அரக்கர்களைக் கொன்று விட்டு பூமிக்கு வந்த மாத்ரிகள் கவுதம கங்கைக் கரையில் வசித்தனர். அங்குள்ளது மாத்ரி தீர்த்தம். பூர்வம் பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஐந்தாவது தலை கழுதை வடிவில் இருந்தது. அரக்கர்கள் பாதாளத்துக்கு ஓட, இந்தக் கழுதைத் தலை அரக்கர்களை நோக்கி ஏன் ஓடுகிறீர்கள் திரும்பி வாருங்கள். நானும் உங்களுக்காக தேவர்களுடன் போர் செய்கிறேன் என்றது. தேவர்களுக்கு உதவியாக பிரம்மன் போரில் ஈடுபட அவரது கழுதை தலை மட்டும் அரக்கர்களுக்கு உதவ முற்பட்டது கண்டு தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று, பிரம்மனின் கழுதை தலை எல்லோரையும் குழப்பத்தில் ஆழ்த்துவதாகக் கூறி அதை நீக்கிவிட வேண்டினர். நீக்குவது எளிது என்றாலும், அது புவியில் விழுந்தால் உலகையே அழித்து விடும். எனவே அதற்கான வழி காண சிவபிரானைப் பிரார்த்தியுங்கள் என்றார் விஷ்ணு. புவியும், கடலும் பிரம்மனது கழுதைத் தலையை ஏற்க முடியாத நிலையில் என்ன செய்யலாம் என்று எண்ணி இறுதியில் சிவனே அத்தலையை ஏற்பதாக முடிவாயிற்று. பிரம்மனது தலையைச் சிவபெருமான் கொய்த இடம் ருத்ர தீர்த்தம் எனப்படுகிறது. இதனால் பிரம்மன் நான்கு முகங்களுடன் சதுர்முகன் அல்லது நான்முகன் எனப்பெயர் பெற்றார். கௌதம கங்கைக் கரையில் பிரம்மனது கோயில் உள்ள இடம் பிரம்ம தீர்த்தம் எனப்படுகிறது. இங்கு பிரம்மதரிசனம் செய்வதன் மூலம் ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்துக்கு நிவாரணம் பெறலாம்.

29.ஆந்தையும் புறாவும்

கவுதமி கங்கை ஆற்றங்கரையில் யமனின் பேரனான அனுஹ்ரதன் என்ற புறாவும் அதன் மனைவி ஹேதியும் வசித்து வந்தன. கொஞ்சம் தூரத்தில் அக்னி குலத்தைச் சார்ந்த உலூகன் என்ற ஆந்தையும், அதன் மனைவி உலூகியும் வசித்து வந்தன. ஆந்தையும், புறாக்களும் பகைவர்கள். புறாக்கள் தங்களுக்குத் தேவையான ஆயுதங்களை யமனிடமிருந்தும், ஆந்தைகள் தமக்கு வேண்டுவனவற்றை அக்னியிடமிருந்தும் பெற்று அடிக்கடி போர்செய்தவண்ணம் இருந்தன. அதனால் எல்லாம் எரிந்து போகக்கூடிய அபாயம் ஏற்பட யமனும், அக்கினி தேவனும் ஆந்தைகளையும், புறாக்களையும் தமக்குள் உள்ள விரோதத்தை மறந்து நண்பர்களாக வாழுமாறு அறிவுரை கூறினர். அந்தப் புறாக்கள் வசித்தி இடம் யமதீர்த்தம் என்றும், ஆந்தைகள் வசித்த இடம் அக்னி தீர்த்தம் என்றும் பெயர் பெற்றன.

30.அந்தணன் வேதாவும் வேடன் பில்லாவும்

வேதா என்ற பெயருடைய அந்தணர் பிற்பகல் வரை தினமும் சிவபூஜை செய்து விட்டு பிற்பகலில் அருகிலுள்ள கிராமங்களில் யாசகம் செய்வது வழக்கம். பில்லா என்ற பேர் கொண்ட வேடன் பிற்பகலில் காட்டுக்குள் வேட்டைக்குச் செல்வது வழக்கம். வேட்டை முடிந்தவுடன் பில்லா அங்குள்ள சிவலிங்கத்திற்குத் தான் கொண்டு வந்த இறைச்சியை நிவேதனம் செய்வது வழக்கம். அப்போது அவன் சிவலிங்கத்தின் மீதிருந்த பூக்கள், வில்வ இலைகள் போன்றவற்றை அகற்றுவான். பில்லாவின் பக்தியில் மகிழும் சிவபெருமான் தினமும் பிற்பகலில் அவன் வருகைக்காக காத்திருப்பார். இவ்வாறு நடைபெற்று வர வேதனும், வேடனும் ஒருவரை ஒருவர் சந்தித்ததே இல்லை. ஆனால், அங்கு அன்றாடம் ஏற்படும் மாறுதல்களைக் கவனித்து வந்தனர். அந்தணர் யாசகத்துக்குச் செல்லும் போது, வேடன் நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் யாரால், எது நிகழ்கிறதென்று அந்தணருக்குப் புரியவில்லை. எனவே, ஒருநாள் அந்தணர் யாசகத்துக்குப் போகாமல் அங்கு நடப்பவற்றை மறைந்திருந்து கண்டார்.

அவ்வமயம் சிவபெருமான் தோன்றி பில்லாவிடம் அன்று ஏன் தாமதமாயிற்று என்றும், அவனுக்காகத் தான் காத்திருப்பதாகவும் கூறினார். பூசை முடிந்து பில்லா சென்றவுடன் அந்தணர் எம்பெருமானை அணுகி, கொடிய, தீய வேடுவனுக்குக் காட்சி அளித்தீர். நான் இத்தனை ஆண்டுகள் பூஜையாகிய தவமேற்று செய்து வருகிறேன். எனக்குக் காட்சி தரவில்லை. ஏன் இந்த ஓரவஞ்சனை. பாராங்கல் கொண்டு இந்த லிங்கத்தை உடைக்கிறேன் என்று கூறினார். தேவைப்பட்டால் செய்யவும். எனினும், நாளை வரை பொறுத்திருந்து பார் என்று அசரீரி வாக்குக் கேட்டது. அடுத்த நாள் அந்தணர் பூசைக்கு வந்தபோது லிங்கத்தின் மீது ரத்தத்தைக் கண்டு அதை அகற்றி இடத்தைத் தூய்மை செய்து தன் பூஜையை முடித்தார். பின்னர் அங்கேயே மறைந்திருந்தார். சிறிது நேரம் கழித்து பில்லாவும் வந்து, லிங்கத்தின் மீதுள்ள இரத்தத் துளிகளைக் கண்டு, தானே அதற்கு பொறுப்பேற்று ஒரு கூரிய அம்பால் தன் உடலைப் பல இடங்களில் தானே தண்டனையாகக் குத்திக் கொண்டான். வேதன், வேடன் இருவர் முன்பும் எம்பெருமான் தோன்றி அந்தணர் வேதனுக்கும், வேடன் பில்லாவுக்கும் உள்ள வேறுபாட்டை வெளிப்படுத்தினார். அந்தணர் வேதன் தனக்கு அன்பான பூஜையும், நைவேத்தியமும் அளித்ததாகவும், ஆனால் வேடன் பில்லா தன்னையே இறைவனுக்கு அளித்து விட்டதாகவும் கூறினார். அதுவே பூஜை, புனஸ்காரங்களுக்கும், ஆத்மார்த்த உண்மையான பக்திக்கும் உள்ள வேறுபாடு என்றார். பில்லா சிவனை ஆராதித்து வழிபட்ட இடம் பில்லா தீர்த்தம் ஆகும்.

31. தர்மம், தர்மத்தைக் காக்கும்

பௌவனம் என்ற நகரில் கௌதமன் என்னும் ஓர் அந்தணன் வசித்து வந்தான். அவனுக்கு வைசிய குலத்தைச் சார்ந்த மணிகுண்டலன் என்ற நண்பன் இருந்தான். கௌதமனின் தாயார் அவனுக்கு அதர்ம வழிகளைக் கூறி வந்தாள். அதனால் அவன் நண்பனிடம், இருவரும் அயல்நாடு சென்று வாணிகம் செய்து நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறினான். ஆனால், மணிகுண்டலன் தன் தந்தையிடம் போதுமான அளவு பணம் இருப்பதால் மேலும் செல்வம் தேடும் அவசியம் இல்லை என்றான். அதற்கு கவுதமன், நண்பனிடம் அவனுக்கு வருங்காலம் பற்றியும் வாழ்வில் முன்னேறுவது பற்றியும் அக்கறை இல்லை என்றும், ஒரு வெற்றியுள்ள மனிதன் தன் தந்தையின் பொருள் கொண்டு வாழமாட்டான். ஆனால் அவனுடைய அதிர்ஷ்டத்தை அவனே தேடிக் கொள்வான் என்றும் கூறினான். கவுதமனின் வார்த்தை சரியே என மணிகுண்டலன் எண்ணினான். நண்பன் தனக்கு மோசம் செய்வதை அவன் உணரவில்லை. மணிகுண்டலன் தேவையான மூலதனத்துடன் வர, கவுதமனும், மணிகுண்டலனும் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். வழியில் கவுதமன் சொன்னான், நல்ல தர்மநெறியில் நடப்பவர்கள் எப்படியெல்லாம் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு செல்வமோ, மகிழ்ச்சியோ ஏற்படுவது இல்லை. எனவே தருமம், நியாயம் என்பது எல்லாம் வீணானவையே என்றான்.

அதற்கு மணிகுண்டலன், தருமநெறியில் நிற்பதே மகிழ்ச்சியை அளிக்கிறது. வறுமை, துயரம் என்பனவெல்லாம் தவிர்க்க முடியாதவை என்று கூறி மறுத்தான். இருவரும் அவரவர் போக்கிலேயே நின்றதால் யார் சொல்வது சரி என்று நிச்சயிக்க இயலவில்லை. இதற்காகப் பணயம் வைத்தனர். மற்றவர்களிடம் கேட்டு யார் சொல்வது சரி எனப்படுகிறதோ அவருக்கு மற்றவருடைய பணம் உரித்தாகும் என்று முடிவெடுத்து அவ்வாறே கேட்க, அனைவருமே தீயவரே வாழ்கின்றனர். நல்லவர் துன்பமடைகின்றனர் என்று கூற, மணிகுண்டலன் தன்னிடமிருந்த பொருளை எல்லாம் கவுதமனிடம் கொடுத்துவிட வேண்டியதாயிற்று. எனினும், மணிகுண்டலன் தருமத்தையே சிலாகித்துப் பேசினான். கவுதமன், மணிகுண்டலன் ஒரு கழுதை. அவன் பொருளைத் தன்னிடமிழந்தும் தருமமே சிறந்ததென்று கூறுவது விந்தை என்றான். அப்போது மணிகுண்டலன் எப்போதும் இறுதியில் வெல்வது தர்மமே. கவுதமன் பெற்ற வெற்றி ஒரு மாயை என்றான்.

மற்றொரு முறை அவர்கள் பந்தயம் வைத்துக் கொண்டு வேறு சிலரிடம் அவர்களது அபிப்பிராயத்தைக் கேட்டனர். இதில் தோற்பவர் தன் இரு கைகளையும் இழப்பதாக முடிவெடுத்தனர். மறுபடியும் பெரும்பாலோர் கவுதமன் கூற்றே சரியென்று கூற, மணிகுண்டலனின் இரு கரங்களும் வெட்டப்பட்டன. அப்போது கவுதமன் மணிகுண்டலன் போக்தைக் குறை கூற, அவன் தருமமே முக்கியமானது. தேவையானது. அது தன் பக்கம் இருப்பதாகக் கூறினான். இதனால் மிக்க கோபம் கொண்ட கவுதமன், மேலும் மேலும் மணிகுண்டலன் தர்மத்தைப் புகழ்ந்தால் அவன் தலையை வெட்டிவிடுவதாகக் கூறினான். ஆனால் மணிகுண்டலன் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. மறுபடியும் ஒரு பந்தயம் வைக்க, அதிலும் கவுதமன் கூற்றே சரி என மற்றோர் ஒப்புக்கொள்ள கவுதமன், மணிகுண்டலன் கண்களைப் பிடுங்கி விட்டு அவன் அப்படியே சாகட்டும் என்று எண்ணி வழியிலேயே விட்டுச் சென்றான். கவுதமி கங்கைக் கரையில் தன் விதியை நொந்து கொண்டு மணிகுண்டலன் விழுந்து கிடந்தான்.

இரவு வந்தது. எங்கும் இருள் சூழ்ந்தது. அங்கே விஷ்ணுவின் சிலை ஒன்று இருந்தது. தினந்தோறும் இரவில் விபீஷ்ணனின் மகன் அங்கு விஷ்ணு பூசை செய்ய வருவது வழக்கம். அவன் கண்களை இழந்து பரிதவிக்கும் மணிகுண்டலனின் கதையைக் கேட்டு தந்தையிடம் தெரிவித்தான். அப்போது விபீஷணன், லக்ஷ்மணனைக் காப்பாற்ற சஞ்சீவி மலையைக் கொண்டு வந்த போது அந்த இடத்தில் விஷல்யகரணி என்ற மூலிகைச் செடி விழுந்து வளர்ந்ததாகவும், அதனைப் பயன்படுத்தி மணிகுண்டலனுக்குச் சிகிச்சை செய்து காப்பாற்றலாம் என்றும் கூறினார். அந்தச் செடி இப்போது அங்கு மரமாக வளர்ந்து இருந்தது. அதன் கிளை ஒன்றை வெட்டி மணிகுண்டலன் மீது வைக்க, அவன் கண்களும், கைகளும் வலுப்பெற்று எழுந்தான். இவ்வாறு மணிகுண்டலனுக்குச் சிகிச்சை செய்தபின் விபீஷ்ணன், மகனுடன் இலங்கை சென்றான். இவ்வாறு தர்மநெறி நின்ற மணிகுண்டலன் பயணத்தைத் தொடர்ந்து மஹாராஜன் என்பவரால் ஆளப்படும் மஹாபுரத்தை அடைந்தான். அந்த மன்னனுக்கு புத்திரன் இல்லை. ஆனால், ஒரு குருட்டுப் புத்திரி மட்டும் இருந்தாள். அவளைக் குணப்படுத்துபவனே தன் மாப்பிள்ளை ஆவான் என்றும், தனக்குப் பின் நாட்டை ஆள்வான் என்றும் அறிவித்திருந்தான். இப்போது விஷல்யகரணி மூலிகையைப் பற்றி அறிந்திருந்த மணிகுண்டலன் அவளைக் குணப்படுத்தி, அவளையே மணந்து அந்த மஹாபுரத்துக்கு மன்னன் ஆனான்.

பல ஆண்டுகள் கழிய, ஒரு நாள் சேவகர்கள் கவுதமன் இழைத்த குற்றத்திற்காக அவனை இழுத்து வந்து மன்னனின் முன் நிறுத்தினர். அப்போது கவுதமன் செல்லாக் காசுகூட இல்லாமல் பிச்சைக்காரனை விட மோசமான நிலையில் இருந்தான். கவுதமனைக் கண்ட மணிகுண்டலன் அவனை மன்னித்து தன் செல்வத்தை அவனுடன் பகிர்ந்து கொண்டான். எனவே தர்மம் தலைகாக்கும் என்பது போல் எல்லா வகையிலும் துணை புரியும். இப்படிப்பட்ட பல நிகழ்ச்சிகள் நடந்த இடங்கள் கவுதமி கங்கைக் கரையில் உள்ளன.

32.கண்டு மகரிஷியும், அப்ஸரஸும்

கவுதம கங்கைக் கரையில் ஓர் அழகிய ஆசிரமத்தில் கண்டு முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் வெயில், மழை, குளிர், காற்று என்று பாராமல் நெடுங்காலம் தவமியற்றி வந்தார். அவர் தவத்தால் தன் இந்திர பதவிக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சிய இந்திரன் அவர் தவத்தைக் கெடுக்க பிரேமலோசனை என்ற அப்சர ஸ்திரீயை அனுப்பினான். அவள் ஆடிப்பாடி தன் இனிய குரலால் முனிவரின் தவத்துக்குப் பங்கம் விளைவிக்க முயன்றாள். அவளின் இனிய குரலையும், அழகையும் கண்ட முனிவர் அவளை மணந்தார். பல ஆண்டுகள் இன்பத்தில் திளைத்த அவர் ஒரு நாள் ஆசிரமத்தை விட்டு வெளியே செல்ல முற்பட பிரேமலோசனை அவர் எங்கு செல்கிறார் என்று கேட்க, முனிவர் மாலை ஆனதால் சாயங்கால வந்தனைக்குப் புறப்படுவதாகக் கூறினார். பிரேமலோசனையுடன் பல நாட்கள் கழிந்ததை அறியாத முனிவர் ஒரு பகல் முடிந்து சாயங்காலம் வந்ததென்று எண்ணிக் கூறினார். பிரேமலோசனை தான் காலை வந்தது என்பது பல ஆண்டுகளுக்கு முந்திய காலை என்றும் அன்றிலிருந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழிந்துவிட்டன என்றும் கூறினாள். உண்மையை அறிந்த முனிவர் தன் தவத்தை அவள் கெடுத்து விட்டதாகவும், எனினும் மனைவியாக இருந்ததால் அவளை சபிப்பதில்லை என்றும், அவள் தேவலோகம் செல்லலாம் என்று, கூறி விடை கொடுத்து அனுப்பிவிட்டு, தான் பிராயச்சித்தத்தை மேற்கொண்டார். கண்டு முனிவர் புரு÷ஷாத்தம ÷க்ஷத்திரத்தை அடைந்து தவம் புரிய விஷ்ணுவால் ஆசிர்வதிக்கப்பட்டார். கண்டு, பிரேமலோசனைக்கு மரீஷை என்றொரு மகள் பிறந்தாள். தற்போதுள்ள கோதாவரி ஆறே கவுதம கங்கை எனத் தெரிகிறது.

33.ஒரு சண்டாளனும், ஒரு பிரம்மராக்ஷசனும்

நாடு கடத்தப்பட்டவனை அல்லது சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவனை சண்டாளன் என்பர். அவந்தி நகரின் புறப்பகுதியில் ஒரு சண்டாளன் வசித்து வந்தான். ஆனால், அவன் ஒரு சிறந்த விஷ்ணு பக்தன். ஒவ்வொரு ஏகாதசி அன்றும் உபவாசம் இருந்து, இரவில் விஷ்ணு ஆலயம் சென்று திருமால் புகழ்பாடுவது அவன் வழக்கம். அவந்தி நகருக்கருகில் ஷிப்ரா என்னும் ஓர் ஆறு ஓடுகிறது. ஓர் ஏகாதசி திதி அன்று சண்டாளன் ஆற்றங்கரையில் பூசைக்கான மலர்களைச் சேகரிக்க சென்றான். ஆற்றங்கரையில் ஒரு பெரிய மரம் இருந்தது. அதில் ஒரு பிரம்மராக்ஷசன் வசித்து வந்தது. சண்டாளனைப் பார்த்ததும் அது அவனைக் கபளீகரம் செய்ய எண்ணியது. நான் விஷ்ணு பூசைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் இன்றிரவு என்னை விட்டுவிடு என்று கூறினான். அதற்கு பிரம்மராக்ஷசன் பத்து நாட்களாக உணவின்றிக் கடும் பட்டினியாக இருப்பதால் உன்னை விடமாட்டேன் என்றது. அப்போது சண்டாளன், இப்போது தன்னைப் போக விடும் படியும், பூஜை முடிந்தவுடன் தானே வந்து சேர்வதாகவும் உறுதி அளித்தான். சண்டாளன் விடுபட்டுச் சென்று இரவெல்லாம் விஷ்ணு பூஜை, பக்திப் பாடல்கள் எல்லாம் முடித்து காலையில் தான் கூறியவாறே பிரம்மராக்ஷசனிடம் வந்து சேர்ந்தான். என்னால் நம்ப முடியவில்லை. வியப்பாக உள்ளது. நீ சண்டாளனாக இருக்க முடியாது. ஓர் அந்தணனே என்று கூறி பிரம்மராக்ஷசன் சண்டாளனிடம் சில கேள்விகள் கேட்டது.

பிரம்மராக்ஷசன் : இரவெல்லாம் என்ன செய்தாய் ?

சண்டாளன் : விஷ்ணு ஆலயத்தில் முன் நின்று விஷ்ணுவின் புகழ் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தேன்.

பிரம்மராக்ஷசன் : எத்தனை காலமாக இவ்வாறு செய்கிறாய்?

சண்டாளன் : இருபத்தைந்து ஆண்டு காலமாக.

இவ்வாறு கூறிய பதில்களைக் கேட்டு பிரம்மராக்ஷசன் சண்டாளனிடம், நிறைய புண்ணியத்தைச் சம்பாதித்திருப்பீர்கள். நான் ஒரு பாவி. எனக்கு ஓர் இரவு புண்ணியத்தைத் தாருங்கள் என்று கேட்டது. அதற்கு சண்டாளன், புண்ணியம் என்னுடையது. நான் அதைத் தரமாட்டேன். என் உடலை எடுத்துக் கொள் என்றான். சரி குறைந்த பட்சம் இரண்டு மணி நேர புண்ணியத்தையாவது கொடு என்று வேண்டிற்று. அப்போது சண்டாளன், என்னால் புண்ணியத்தைத் தரமுடியாது. அது சரி, உன்னுடைய பாவம் தான் என்ன? என்று சண்டாளன் கேட்டான். அப்போது பிரம்மராக்ஷசன் தன் வரலாற்றைக் கூறியது. என் பெயர் சோம சர்மா. நான் தேவசர்மா என்ற அந்தணரின் மகன். ஆனால், நான் தீய நடத்தையில் வாழ்ந்தேன். உபநயனம் ஆகாத ஒரு பிராமணன் யாகங்கள் செய்யத் தகுதியில்லாதவன், அப்படியான நான் ஒரு யாகத்தை நடத்தி விட்டேன். அதன் பயனாய் இப்பிறவியில் நான் பிரம்ம ராக்ஷசனாய் பிறந்துள்ளேன் என்றது. அது கேட்டு மனம் இறங்கிய சண்டாளன் தன் புண்ணியத்தில் ஒரு பகுதியை பிரம்மராக்ஷசனுக்கு அளித்தான். பிரம்மராக்ஷசன் மகிழ்ச்சியுற்று தன் நன்றியைத் தெரிவித்து ஒரு புனிதத் தீர்த்தத்தை அடைந்து தவமியற்றி விடுதலை பெற்றான். அதன்பின் சண்டாளன் தீர்த்த யாத்திரையாக பல இடங்களுக்குச் செல்ல ஓரிடத்தில் அவனுக்கு அவன் முற்பிறவி நினைவுக்கு வந்தது. அவன் முற்பிறவியில் சகல சாஸ்திர, வேதப் பண்டிதனாக இருந்தான். யாசகம் எடுத்து உணவு உண்டான். இந்நிலையில் ஒருநாள், சில திருடர்கள் பசுக்களைத் திருடி ஓட்டிவர அவற்றின் குளம்பு தூசி உணவில் விழ அவன் வெறுத்து யாசகம் பெற்ற உணவை வீசி எறிந்தான். அவ்வாறு அவ்வுணவை எறிந்ததால் சண்டாளனாகப் பிறந்தான். இந்தப் பாவத்திற்காகத் தவமியற்ற, அவன் மன்னிக்கப்பட்டான்.

34.காயத்ரி

காயத்ரி ஏற்பட்ட விவரத்தை முனிவர் கூறலானார்.

மூலப்பிரம்மம் தன் நாபியிலிருந்து பிரம்மனைத் தோற்றுவித்தார். அவருக்கு பிரணவ ஒலி கேட்டது. அவ்வொலியைக் கேட்ட பிறகு அவருடைய நான்கு முகங்களிலிருந்தும் 24 எழுத்துக்கள் தோன்றின. அந்த இருபத்து நான்கு எழுத்துக்களும் பீஜாக்ஷரம் எனப்படும். அதுவே காயத்ரி மஹாமந்திரம் எனப்படும். அதன் பிறகு அவர் முகத்திலிருந்து நான்கு வேதங்கள் தோன்றின. எனவே காயத்ரி மந்திரம் வேதங்களுக்குத் தாயாகும். அதனை ஜபிப்பவர்கள் பிரம்ம விதியைப் பெறுவர்.

யோகம் : யோகம் என்பது ஆத்மாவைப் பரமாத்மாவுடன் அல்லது பரப்பிரம்மத்துடன் இணைப்பது. யோகம் செய்யப் புகுபவர் வேதத்தையும், புராணங்களையும் கற்க வேண்டும். சாத்விக உணவுண்டு இனிய பிரதேசத்தில் பழக வேண்டும். புலன்களை அடக்கி சரியான ஆசனங்களைப் பயின்று, மூக்கின் நுனியின் மீது திருஷ்டி வைத்துப் பயில வேண்டும். பற்றற்ற நிலை வேண்டும். சரியான முறையில் யோகம் செய்தால் எல்லா உயிர்களிலும் ஒரே பராமாத்மா இருக்கிறார் என்று அறியலாம். ஜீவராசிகளைத் தனித்தனியே காண்பது ஒரு மாயத் தோற்றமே. எல்லாவற்றிலும் ஒரே பரமாத்மா தான் இருக்கிறார்.

பிரம்ம புராணம் முற்றிற்று

Related Articles

  • Puranas
    Puranas
    புராணங்கள் என்பவை வேதங்களில் உள்ள கருத்துகளை தெளிவாக…
  • Padma Purana
    Padma Purana
    1.தோற்றுவாய் வேத வியாசர் எழுதிய பதினெண் புராணங்களில் இரண்டாவது பத்ம புராணம். இது 55,000 ஸ்லோகங்கள் கொண்டது. வேத வியாசரின் இயற்பெயர்…
  • Vishnu Puranas -1
    Vishnu Puranas -1
    1.புராணம் கேட்ட வரலாறு 18 புராணங்களில் மூன்றாவதாக கருதப்படுவது விஷ்ணு புராணம். இது 23,000 ஸ்லோகங்கள் கொண்டது. ஒருநாள் அதிகாலையில் பராசர…
  • Vishnu Purana-3
    Vishnu Purana-3
    11.துருவன் கதை பராசரர் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேய முனிவரே! சுவாயம்புவ மநுவுக்குப் பிரியவிரதன் உத்தானபாதன் என்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள்.…
  • Vishnu Purana-4
    Vishnu Purana-4
    16.பிரகலாத சரித்திரப் பிரச்னை பராசரரே! மனு வமிசத்தில் பிறந்த உத்தானபாதன், துருவன் முதலிய மாமன்னர்களின் வரலாறுகளையும் அனாதி புருஷனான ஸ்ரீவிஷ்ணுவே ஜகத்…