இராமன் சுக்ரீவனிடம் “நாம் கொண்ட முயற்சியில் வெல்வோமா? தீர்க்க முடியாத பழி நம்மை வந்து அடைந்து விடுமோ?” என்றெல்லாம் அஞ்சினான். நாம் விதித்திருந்த கெடு முடிந்து விட்டது. தென் திசைக்குச் சென்றவர்கள் திரும்பவில்லை, இறந்து விட்டார்களோ? அல்லது வேறு என்ன ஆயிற்றோ? சீதை இறந்து போயிருப்பாள், அவள் இறந்த செய்தியை வந்து எப்படிச் சொல்வது என்று இவர்களும் இறந்து போயிருப்பார்கள்; அல்லது இன்னமும் சீதையைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்களோ? இராவணன் முதலான அரக்கர்கைளைக் கண்டு கோபம் கொண்டு போரிட்டு அவர்களது மாயையினால் இறந்து போனார்களோ? அல்லது தப்ப முடியாமல் வெஞ்சிறையில் அடைக்கப் பட்டிருப்பார்களோ? நமக்கு விதித்த கெடு முடிந்து விட்டது, காரியம் ஆகவில்லை என்ற விரக்தியில் தவத்தினை மேற்கொண்டு போய் விட்டார்களோ? வேறு என்னதான் நேர்ந்திருக்கும் அவர்களுக்கு, சொல்! சுக்ரீவா சொல்!” என்றான் இராமன்.
இவ்வாறு இராமன் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில் தென் திசையில் வான வெளியில் அனுமன் தோன்றினான். இருக்கையிலிருந்து எழுந்து மனமெல்லாம் அன்பு நிறைந்திருக்க அருட் கரங்களைக் கொண்ட இராமன் அனுமனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். விரைந்து வந்த அனுமன் இராமன் இருக்குமிடத்தை அடைந்ததும், இராமனின் திருவடிகளை வணங்கவில்லை; மாறாகத் தான் வந்த சீதை இருக்கும் தென் திசை நோக்கி இரு கரங்களைக் கூப்பி நிலத்தில் வீழ்ந்து வணங்கினான். இவ்வளவும் சில நொடிகளில் நடந்து முடிந்து விட்டன எதுவும் பேசாமலே.
இந்தக் காட்சியின் குறிப்புகள் மூலம் இராமபிரான் வைதேகி நன்றாக இருக்கிறாள்; கற்பு நிலையும் களங்கமற்று உள்லது; இந்த அனுமன் அவளையும், அவள் நிலைமையையும் கண்டுணர்ந்து வந்துள்ளான் என்று ஊகித்துத் தெரிந்து கொண்டான். இராமனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். அதுவரை வாய்திறவாத அனுமன் வாய் திறந்து இராமனிடம் பேசுகிறான். அவன் சொன்ன முதல் செய்தி:“கண்டேன் சீதையை!” அண்டர் நாயகா! இராமா! கவலையை விடு!” என்று அனுமன் சொன்னதும், இராமனது முகம் தெளிவடைந்தது.
“ஐயனே! உன் பெருமைக்குரிய மனைவியாகவும், தசரத சக்கரவர்த்தியின் மருமகள் என்ற பெருமைக்கும், மிதிலையின் ஜனகனின் மகள் என்ற தகுதிக்கும் ஏற்றவாறு தெய்வமெனத் திகழ்கிறாள் சீதாபிராட்டி” என்றான் அனுமன்.
“தங்கத்துக்கு நிகராக வேறு எது இருக்க முடியும், தங்கத்தைத் தவிர? பொறுமையின் சிகரமாக உள்ளார் சீதாபிராட்டி. என் அன்னை சீதை உன் குலத்துக்குப் பெருமை சேர்த்தாள். தன்னை வருத்திய இராவணன் குலத்தை எமனுக்குக் கொடுத்தாள். அதன் மூலம் தேவர் குலம் வாழச் செய்தாள். அன்னையின் சிந்தையில் எப்போதும் நீ இருக்கிறாய். அவள் வாய் உதிர்க்கும் சொற்களிலும் நீயே இருக்கிறாய். ஐயனே! தவத்தின் பயனாய் விளங்கும் அன்னை கடலுக்கு நடுவே விளங்கும் இலங்கை என்னும் விரிந்த நகரத்தின் ஓர் புறத்தஏ, ஓர் பிரகாசமான கற்பகச் சோலையில், இலக்குவன் வடித்துத் தந்த பர்ணசாலையில் வீற்றிருந்தாள். முன்பு பிரமதேவன் இட்ட சாபம் ஒன்று இராவணனுக்கு உண்டு. உன்னை விரும்பாத ஒரு பெண்ணை நீ வலிந்து தீண்டுவாயானால், உன் தலை வெடித்துச் சிதறி நீ மாண்டு போவாய் என்று. அந்த சாபத்துக்கு அஞ்சி அவன் அன்னையைத் தீண்டாமல் தரையோடு பர்ணசாலையைத் தூக்கிச் சென்றிருக்கிறான்.”
“இராவணன் அன்னையைத் தீண்டவில்லை என்பதற்குச் சான்று, பிரமன் படைத்த அண்ட கோளம் சிதறவில்லை; ஆதிசேடனின் படம் கிழியவில்லை; கடல்கள் கரையினைத் தாண்டவில்லை; உலகம் கடலுள் மூழ்கவில்லை; சந்திர சூரியர் கீழே விழவில்லை; வேதங்கள் கூறும் நெறிகள் அழியவில்லை; எவற்றால் நீ உணர்ந்து கொள்வாய்”.
“நான் இலங்கை நகரம் முழுவதும் தேடினேன். மாட மாளிகைகளில் தேடினேன். இராவனன் அரண்மனையில் தேடினேன். குளிருந்த அசோகவனத்துக்குள் சென்றேன். அங்கே தேவமகள் சீதையைக் கண்ணீர் கடலில் மிதக்கக் கண்டேன். பேய்களின் கூட்டம் போல அரக்கியர் சூழ்ந்திருக்க, இரக்கம் என்னும் பண்பு, ஓர் பெண்ணாக வடிவெடுத்து கொடுமை எனும் சிறைக்குள் இருக்கும் தன்மை கண்டேன். தகுந்த நேரம் பார்த்து சீதையை வனங்க எண்ணியிருந்தேன். அப்போது இராவணன் அங்கே வந்தான். சீதையிடம் இறைஞ்சி நின்றான். கடுஞ்சொற்களை வீசிய சீதாபிராட்டியைக் கொல்ல முயன்றான். பிறகு சீதைக்கு புத்தி சொல்லுங்கள் என்று அரக்கியரிடம் சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றான்.”
“சீதை அப்போது தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார்கள். ஓர் கொடியை எடுத்து மரத்தில் கட்டித் தன் கழுத்தில் மாட்டிக் கொண்டார்கள். அந்த நேரம் நான் போய்த் தடுத்து, திருவடிகளை வணங்கி, உன் திருப்பெயரைச் சொன்னேன். அப்படி நான் உன் பெயரைச் சொன்னதும் அருவி போல கண்ணீர் சிந்தினார். என்பால் நீ அருளுடையவன் நான் இறக்கப்போகும் நேரத்தில் இராமனின் பெயரைச் சொல்லி நீ என்னை மரணத்திலிருந்து மீட்டாய் என்று கூறினார்”.
“என் தந்தை போன்றவனே! நான் சொன்ன அடையாளங்களைக் கேட்டுக் கொண்டார். நான் வஞ்சக எண்ணம் உள்லவன் அல்ல என்பதை புரிந்து கொண்டார். உன் கணையாழியைக் கொடுத்தேன். அதனை உற்றுப் பார்த்து கண்ணீர் வடித்தார். அது உயிர் காத்த சஞ்ஜீவினி அன்றோ? ஒரு கணப் பொழுதில் இரண்டு அதிசயங்களைக் கண்டேன். நான் கொடுத்த உனது கணையாழியைத் தன் மார்பு மீது வைத்ததும் உன்னைப் பிரிந்ததால் உண்டான வெப்பத்தால் கணையாழி உருகியது. உன் மோதிரத்தைத் தீண்டியதால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் உடல் குளிர்ந்து உருகிய கணையாழி மீண்டும் இறுகி விட்டது.”
“கணையாழியைக் கண்ணீரால் அபிஷேகம் செய்தார். வாய் திறந்து பேசவில்லை. இளைத்த உடல் பூரித்தார். வியப்புற்றார். ஆனாலும் இமையாமல் கணையாழியைப் பார்த்த வண்ணம் இருந்தார். மன்னவா! அடியேன் சீதைக்கு உன்னை அவர் பிரிந்த பிறகு நடந்த செய்தியனைத்தையும் சொன்னேன். நீ இருக்குமிடம் தெரியாததால் கால தாமதம் ஆகிவிட்டது என்றும் கூறினேன். தான் இன்னும் ஒரு மாத காலம்தான் உயிரோடு இருப்பேன், அதன் பின் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றார். ஐயனே! அன்னை தன் உடையில் முடிந்து வைத்திருந்த தன் சூளாமணியை என்னிடம் அடையாளமாகக் கொடுத்தார். இதோ, சூடாமணியைக் காண்பாயாக!” என்று அனுமன் கொடுத்தான்.
தன் திருமணத்தின் போது சீதையின் கையைப் பற்றிய அதே உணர்வோடு அந்தக் கணையாழியைத் தன் கைகளால் வாங்கினான் இராமபிரான். இராமனது மயிர்க்கால்கள் சிலிர்த்தன. கண்ணீர் பெருக்கெடுத்தது. மார்பும், தோள்களும் பூரித்து விம்மின. வியர்வைத் துளிகள் துளிர்த்தன; உதடுகள் மடிந்தன; உயிர் போவதும் வருவதுமாக இருந்தது. உடல் பூரிப்பு அடைந்தது. இது என்ன வியப்பு!
“இனியும் கால தாமதம் வேண்டாம். சேனைகள் போரிடப் புறப்படட்டும்” என்று சுக்ரீவன் ஆணையிட்டான். எழுபது வெள்ளம் சேனை புறப்பட்டது. கடல் போல எழுந்த அந்த வானரப் படையினர் அனுமன் சொன்ன வரலாற்றைக் கேட்டுக் கொண்டே உற்சாகமாக வழிநடைப் பயணம் செய்தார்கள். இராம லக்ஷ்மண சுக்ரீவாதியர் முன் செல்ல வானரப் படை பதினோரு நாட்கள் பயணம் செய்து பன்னிரெண்டாம் நாள் தெற்குக் கடற்கரையைச் சென்றடைந்தனர்.
(அனுமனின் புகழ் பாடும் சுந்தர காண்டம் நிறைவு பெற்றது)
Be the first person to comment this article