Linga Purana-2

19.அனுசரிக்க வேண்டிய ஆசார விதிகள்
எண் வகை சித்திகள். 1) அணுவைப் போலாகும் சக்தி அணிமா. 2) பஞ்சென இலேசாக இருத்தல் லகிமா. 3) பருத்தல் மகிமா. 4) நினைத்த இடம் செல்லும் சக்தி பிராத்தி. 5) யாவையும் உணர்ந்திடும் சக்தி பிராகாமியம். 6) அனைத்திலும் ஆணை செலுத்திடும் சக்தி ஈசத்துவம். 7) நினைத்த உருவை எடுத்தல் வாசித்துவம். 8) பிறப்பொடு இறப்பு நீக்கல் சாயுச்சியம். இந்த எண்வகை சித்திகள் பெற்றவர் அழியாப் பரம்பொருளாய், மூவர்க்கும் முதலாய் பரஞ்சுடராய் விளங்கும் இறைவனை உணர்ந்து சமாதியிலிருந்து முக்தி பெறுவர். சித்திகளைப் பெறாதவர்களும் கூட ஈசனை நன்குணர்ந்து அவரைத் தம் மனத்திலே இருத்தி தியானத்தால் முக்தி அடைவர். பிறவிப் பெருங்கடலிலிருந்து கரையேறிப் பிறப்பிறப்பு அற்ற பேரின்ப வாழ்வு பெற ஜோதிப் பிழம்பான சுடரொளியின் மலரடிகளைச் சேவித்தல் வேண்டும். பிரம்மச்சாரி சிறந்த குருவை அடைந்து உபதேசம் பெற்று, இயம நியமங்களை குறைவற ஆற்ற நன்னெறியில் பிரம்மச்சரிய வாழ்வைக் கடைப்பிடிக்க பிரம்மச்சாரி பிøக்ஷ பெற்றே உணவு உட்கொள்ள வேண்டும். முற்றும் துறந்தவர்களைக் கண்டால், மும்முறை வலம் வந்து வணங்க வேண்டும். தண்டம், கமண்டலம், குடை, செருப்பு, மான் தோல் ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டும். வசிக்கும் கிரகத்தில் தரையைப் பசுஞ்சாணத்தால் மெழுகித் தூய்மையாக்க வேண்டும்.
வேதியருக்குப் பத்து நாட்களும், வேந்தருக்குப் பன்னிரண்டு நாட்களும், வைசியருக்குப் பதினைந்து நாட்களும், பின்னவருக்கு முப்பது நாட்களும் தீட்டு உண்டாம். மங்கையர் தீட்டமான நான்காம் நாள் விடியற்காலையில் நீராடி சூரிய தரிசனம் செய்து பால் (அ) பஞ்சகவ்யம் உட்கொள்ள வேண்டும். நீராடிய 4,6,8,10,12,14,16 நாட்களில் கணவனுடன் கூடினால் புதல்வரையும் மற்ற நாட்களில் கூடினால் பெண் குழந்தையும் பெறுவர். துறவிகள் இடம் தேடிவரும் உணவை உட்கொள்ள வேண்டும். எதிலும் ஆசை கொள்ளக்கூடாது. துர் நிமித்தங்களையும், கனவுகளையும் கண்டவர் வடதிசை சென்று, பஞ்சகவ்வியத்தில் ஒன்றை உட்கொண்டு, பிரணவம் ஓதி, பரமனைத் தியானித்து வேண்டினால் தோஷம் நீங்கி மரணம் அடையமாட்டார்.

20.காசியின் சிறப்பு
காசியின் மகிமை ஏராளம். கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் காசியே முக்தி தரும் நகரம். இத்தலத்தில் ஈசன் என்றும் நீங்காது உறைவதால் இதற்கு அவிமுக்தேச்வரம் என்ற பெயர் உண்டு. முனிவர் அவ்வியன் காசியில் பரமனை வழிபட்டு வீடுபேறு பெற்றார். குபேரன் நவநிதிகளைப் பெற்றான். சம்வர்த்தன் என்பவன் இங்கு ஈசனை வழிபட்டு பரமன் திருவடிகளை நீங்காத வாழ்வு பெற்றான். இங்குதான் வியாசர் இறைவனின் திருவடிகளைப் பெற்றார். மாயோன், நான்முகன், அக்கினி, சூரியன், சந்திரன், இந்திரன் ஆகியோரும் இந்தக் காசியில் பரமனை வழிபட்டு அவர் திருவருளைப் பெற்றனர். காமதேனு காசியில் ஈசனை லிங்க வடிவில் ஆராதித்துப் பேறு பெற்றது அந்த இடம் கோப்பிந்ரேக்கம் ஆகும். அந்த லிங்கத்தின் பெயர் கோப்பியேச்சுவரர் ஆகும். பிரம்மன் கபிலாகாரம் என்ற குளக்கரையில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதன் பெயர் ரிஷபத்து வாசன். மற்றொரு லிங்கத்தை பத்திரோதயம் என்ற தடாகக் கரையில் பிரதிஷ்டை செய்ய, அதனை மாதவன் வழிபட்டான். அது அரணிய சர்ப்யேசுவரர் எனப்படும். மற்றொரு லிங்கம் பிரம்மன் வழிபட்டது. இச்சுவலினேச்சுவரர் எனப்படுகிறது.
பர்வதராஜனால் காசியில் வழிபாடு செய்யப்பட்ட லிங்கம் சைலேச்சுவரர் ஆகும். மற்றொரு லிங்கம் பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அசுரர்களாலும், அமரர்களாலும் வழிபாடு பெறப்பட்டது. அது மத்திமேசர் ஆகும். சுக்கிராச்சாரியாரால் அமைக்கப்பட்டது சுக்கி ரேசுவரர் ஆகும். இத்தலத்தில் உயிர்விடும் மனிதனே அன்றி மற்ற எந்த ஜீவராசியும் முக்தி அடையும். பிரளய காலத்திலும் அழியாது விளங்கும் இத்தலம் அவிமுக்தம் என்ற பெயர் பெற்று விளங்குகிறது. இவ்வாறு காசியின் சிறப்பைத் தேவிக்கு விளக்கிய ஈசன் அவிமுக்தீசுவர லிங்கத்தில் மறைந்தார். எனவே, கற்றோர்கள் தங்கள் அந்திமக் காலத்தை உணர்ந்து, காசிக்குச் சென்று தங்கி, கங்கையில் நீராடி பிரணவம் ஜபித்து, ஈசன் திருவடிகளை, ஒரு கணமும் மறவாது தியானித்து ஆவி நீத்து பிறவாப் பேரின்ப வீட்டை அடைவர்.

21.கணத் தலைவனாகிய அந்தகன்
சிவனைத் தவிர வேறு எவராலும் வெற்றி கொள்ள முடியாத பராக்கிரமம் வேண்டும் என அந்தகாசுரன் பிரம்மனிடம் வரம் வேண்டினான். அவன் இரணியாக்ஷனின் மகன். அவன் திக் விஜயம் புறப்பட்டு உலகை வென்று பின் விண்ணுலகை முற்றுகையிட்டான். தேவர்கள் திருமாலிடம் உதவிக்காகச் செல்ல வைகுந்தத்தை முற்றுகையிட்டான் அசுரன். ஈசனால் மட்டுமே அவனுக்கு மரணம் என்று வரம் பெற்றவனானதால் எல்லோரும் ஈசனிடம் முறையிட, பரமன் அவர்களுக்கு அபயம் அளித்தார். அங்கு வந்த அந்தகாசுரன் சிவனை வணங்கி, தேவர்களை விட்டு செல்லும்படி விடும்படி கேட்டான். சிரித்தார் சிவபெருமான். தேவர்களை விட்டுச் செல்லுமாறு அந்தகனிடம் கூற, அவன் ஈசனையே எதிர்த்தான். அதனால் அளவில்லாக் கோபம் கொண்ட பரமன், அசுரர்களை அழித்தார். அந்தகாசுரனை சூலத்தால் குத்தி உயரத் தூக்கி நிறுத்தினார். அந்தகன் உடலிலிருந்து குருதி பாய அவன் ஆணவம் அழிந்தது. ஈசன் கைப்பட்டதால் அவன் பாபங்கள் தொலைந்தன. அவனிடம் சத்வகுணம் மிகுந்திட, அவன் இருகரம் கூப்பி ஈசனைத் தொழுதான். சரணம் அடைந்த அவனுக்கு அபயம் அளித்து ரக்ஷிக்குமாறு வேண்டினான் அந்தகாசுரன். அந்தகனைச் சூலத்திலிருந்து இறக்கி விட அவன் ஈசனை வலம் வந்து வணங்க, ஈசன் கரம் பட்டு அவன் பொன்மேனி பெற்று புனிதனாக, அவனைக் கணங்களுக்குத் தலைவனாக்கினார் பெருமான்.

22.வராகன் சுயரூபம் பெறுதல்
இரணியாக்ஷன் வராஹ வடிவில் வந்த பரந்தாமனை எதிர்த்துப் போரிட, வராஹாவதாரம் எடுத்த திருமால் அசுரன் மீது பாய்ந்து அவனைக் கீழே தள்ளி, அவன் மார்பில் ஏறி கூரிய கோரைப் பற்களால் அவன் மார்பைப் பிளந்து இரத்தத்துடன், ஆவியையும் குடித்து, அவன் பதுக்கி வைத்திருந்த பூமியை மீட்டுத் தம் கொம்புகளில் தாங்கியவாறு வெளிப்பட்டார். அது கண்டு தேவர்களும், நிலமாதும் மகிழ்ச்சி பெற்றனர். அரக்கனைக் கொன்ற பின்னும் அரியின் கோபம் தணியவில்லை. அதனால் அச்சமுற்ற தேவர்கள் பரமேச்வரனிடம் முறையிட ஈசன் மாதவனை நெருங்கி அவருடைய கடைவாய் கொம்புகளில் ஒன்றைப் பற்றி உடைத்தார். அப்போது பன்றி வடிவில் இருந்த பரந்தாமன் சுயரூபம் பெற்று ஈசனைத் துதி செய்து வணங்கினார்.

23.நரசிம்மர் வெறி அடங்குதல்
பக்த பிரகலாதன் தந்தையாகிய இரணியகசிபுவிடம், ஸ்ரீமந் நாராயணனிடம் விரோதம் பாராட்ட வேண்டாம் என்றும் அழிவைத் தடுக்க அவரிடம் பக்தி கொள்ளுமாறும் வேண்டினர். அப்போது இரணியகசிபு, இப்போது அந்த நாராயணன் வந்து உன்னைக் காப்பாற்றட்டும் என்று கூறி ஆங்கோர் கம்பத்தை உதைக்க, அதிலிருந்து திருமால் நரசிம்ம வடிவில் தோன்றி இரணியகசிபுவைக் கொன்றார். தேவர்கள் ஸ்ரீமந் நாராயணனைத் துதி செய்து சாந்தமடையுமாறு வேண்டினர். லக்ஷ்மியும் பிரகலாதனும் பிரார்த்தித்தனர். இரணியன் மார்பைப் பிளந்து குருதியுடன் ஆவியையும் குடித்த அச்சுதன் வெறி அடங்காதது குறித்து விண்ணப்பித்து அவரைச் சாந்தமுறச் செய்யுமாறு பரமனிடம் வேண்டினர். ஈசன் சரபம் என்ற பறவை வடிவுடன் நரசிம்மன் முன் வர சரபமும், நரசிம்மமும் மோதினர். முடிவில் நரசிம்மர் களைத்துவிட ஈசன் அவரது தோலைக் கிழித்து உரித்துத் தன் மேல் போர்த்திக் கொண்டார். நரசிம்மரின் வெறி அடங்கியது. அவர் சாந்தமடைந்தார்.

24.ஜலந்தரன் வரலாறு:ஜலத்திலிருந்து தோன்றிய அசுரன் ஜலந்தரன் எனப்பட்டான். அவன் பரமனை நோக்கித் தவம் செய்து தேவர்களால் தன்னை வெல்லமுடியாதவாறு வரம் பெற்றான். அளவற்ற பராக்கிரமத்தைப் பெற்ற ஜலந்தரன் வரங்கள் பெற்றவுடன் அகந்தை கொண்டு திக்விஜயம் புறப்பட்டான். இந்திரனை ஓடச்செய்து தேவர்களை வென்றான். அடுத்து அக்கினி, இயமன், நிருதி, வாயு, குபேரன் ஆகியோர்களை வென்று தன் வயப்படுத்திக் கொண்டதுடன் வைகுந்தம் சென்றிட, திருமால் கருடன் மீதேறி அவனுடன் போர் செய்தார். ஆனால், அசுரனை ஈசன் ஒருவனாலேயே அழிக்க முடியும் என்றறிந்து மாயையால் இருளைத் தோற்றுவித்து அந்த மாயையில் மறைந்து விட்டார். அடுத்து, அவன் பார்வை கயிலாயத்தின் மீது பட சிவனாரையும் எதிர்க்க முற்பட்டான். அப்போது சிவபெருமான், ஜலந்தரா, நீ சொன்னது அனைத்தும் சரியாக இருக்கலாம். ஆனால், நான் கண்கூடாகக் காணவில்லை என்று கூறித் தன் கால் கட்டைவிரலால் பரமேச்வரன் பூமியில் ஒரு சக்கரம் வரைந்து அசுரனிடம் அதை எடுத்துத் தலைமீது வைத்து அவன் பிரதாபத்தை நிரூபிக்குமாறு சொன்னார். அவன் மிகவும் ஏளனமுடன் இலகுவில் வட்டத்தைப் பெயர்த்து விட்டான். ஆனால், அதை மேலே உயர்த்துவது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. மிகவும் முயற்சி செய்து அதனைக் கழுத்துக்கு நேராகக் கொண்டு வர, அது சக்கராயுதமாக மாறி அவன் கழுத்தைத் துண்டித்தது. அசுரன் உடல் பூமியில் சரிந்தது. அவனுடைய மனைவியர் அங்கு வந்து அவன் உடலை எடுத்து வைத்துக் கொண்டு புலம்பினர். அப்போது சிவனார் அவர்களிடம், ஜலந்தரன் என் கையால் இறந்ததால் உத்தம லோகத்தை அடைந்துள்ளான் என்று கூறி அவனுடைய மனைவியர்களையும் அவனுடன் சென்று மகிழ்ந்திருக்குமாறு கூறி அருளினார்.

25.அரிக்குச் சக்கராயுதம் அளித்தல்
ஜலந்தரன் மரணத்துக்குப் பின் அவனுடைய புதல்வர்கள் தேவர்களுக்குத் தொல்லைகள் தர முற்பட்டனர். தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டனர். அப்போது பரந்தாமன் சிறிது காலம் பொறுத்திருங்கள். நான் ஈசனைக் குறித்துத் தவம் செய்து ஜலந்தரனைக் கொன்ற சக்கராயுதத்தை அவரிடமிருந்து பெற்று வருகிறேன் என்றார். திருமால் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஆயிரத்தெட்டு மலர்களால் அர்ச்சனை செய்ய முற்பட்டார். முடிவில் ஒரு மலர் ஈசனால் மறைக்கப்பட்டு விட்டதால் குறைந்தது. அப்போது அரி தன் கண் மலரை எடுத்து ஈசன் திருநாமம் கூறி அர்ச்சனையை முடித்தார். அப்போது சிவனார் தோன்றி அவர் பக்தியை மெச்சி, தன் மகிழ்ச்சியைத் தெரிவித்ததுடன் வேண்டும் வரம் கேட்குமாறு கூறினார். அப்போது திருமால் மறுபடியும் அசுரர்கள் தேவர்களைத் துன்புறுத்தி வருவதால் ஜலந்தரனை அழித்த சக்கராயுதத்தை அளித்து, அதன் மூலம் தேவ சத்ருக்களை ஒழிக்கும் வலிமையை அருள்புரியுங்கள் என்று வேண்டினார். ஈசனும் அவ்வாறே சக்ராயுதத்தை அளித்து ஆசி கூறினார். மேலும், தனக்காக அர்ப்பணித்த கண் மலரையும் திரும்பி அளித்தார். ஈசன் அளித்த சக்கராயுதத்தால் மாதவன் அசுரர்களை வென்று தேவர்களின் துன்பங்களை நீக்கி அருளினான்.

26.தக்கன் நடத்திய வேள்வியும், அதன் விளைவும்
தக்கன் தன் மகள் சதியை ஈசனுக்குத் திருமணம் செய்து வைத்தான். தக்கன் மகள் என்பதால் தேவி தாட்சாயிணி என்றும் அழைக்கப்பட்டாள். தக்ஷபிரஜாபதியை இந்திராதி தேவர்கள் வணங்குவதால் மருமகனாகிய ஈசன் தன்னை வணங்கி கவுரவிப்பதில்லை என்று அவன் ஆணவத்தின் காரணமாக ஈசன் மீது பகை கொண்டான். தக்கன் மாபெரும் யாகம் ஒன்று நடத்தினான். பிரமாதி தேவர்கள் எல்லார்க்கும் அழைப்பு அனுப்பி, ஈசனுக்கு மட்டும் அனுப்பவில்லை. எனினும், தாட்சாயிணி அழைப்பில்லாமலே யாகத்திற்கு வர அவரைக் கவுரவிக்கவில்லை. மேலும், ஈசனைப் பற்றியும் அவதூறாகப் பேசினான். அவமதிப்புக்கு உள்ளான தாட்சாயிணி அக்கினியில் உடலைத் துறந்துவிட்டு இமவான், மேனை தம்பதிகளின் வேண்டுதலுக்கேற்ப அவர்களுக்குப் புத்திரியாக அவதரித்தாள். இதனால் மிகவும் கோபம் கொண்ட பரமசிவன் வீரபத்திரனைத் தோற்றுவித்து, உடனே புறப்பட்டுச் சென்று தக்கன் வேள்வியை அழித்து, அவனைத் தண்டித்து திரும்புமாறு ஆணையிட்டார். வீரபத்திரன் தக்கன் யாக சாலையை அடைந்து அங்கிருந்தாரை எல்லாம் விரட்டி அழித்து, கடைசியில் தக்கன் தலையைப் பற்றி இழுத்து, அவன் தலையைச் சீவி நிலத்திலே எறிந்தான். இந்த நிலையில் பிரமன் தோன்றி தேவர்களைத் தக்கபடி தண்டித்தாகி விட்டது. யாகம் அழிக்கப்பட்டது. இனி சாந்தம் கொண்டு ஈசனிடம் திரும்புமாறு பிரார்த்தித்தான். மேலும், தேவர்களை மன்னிக்குமாறும் வேண்டிக்கொண்டார் பிரமன். தேவர்களும் அவ்வாறே சிவனாரை அணுகி தங்களை மன்னிக்குமாறு வேண்டிக்கொள்ள, அவரும் இறந்தவர்களை எல்லாம் உயிர்ப்பித்து மன்னித்தருளினார். தக்கனும் சிவபெருமானை வலம் வந்து நெஞ்சம் உருக பிரார்த்திக்க, அவனை மன்னித்து கணங்களின் தலைவனாக்கினார்.

27.மன்மதனை எரித்தல்
இமவான் மகளாய் பிறந்த பார்வதி சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தாள். ஈசன் சனகாதியருக்கு யோகம் உபதேசிக்க நிஷ்டையில் இருந்தார். இவர்கள் இருவர் மீதும் மலர்பாணம் தொடுத்து முருகன் அவதாரத்திற்கு வழிகோல தேவர்கள் மன்மதனை வற்புறுத்தி அனுப்பினர். அவனும் சிவனார் மீது மலர்க்கணைகள் தொடுக்க, கண் விழித்துப் பார்த்த முக்கண்ணனின் நெற்றிக்கண்ணால் மன்மதன் எரிந்து சாம்பலாகினான். அப்போது மன்மதனின் மனைவி ரதி, காமன் மீது எந்தத் தவறும் இல்லை என்று கூறி அவனை உயிர்ப்பித்து தனக்களிக்குமாறு வேண்டினாள். சிவபெருமான் கருணை கொண்டு ரதியிடம், காமன் அவள் கண்ணுக்கு மட்டும் தெரிவானென்றும், கிருஷ்ணனுக்கு மகனாகப் பிறந்து அனைவரும் அறிய உடல் பெறுவான் என்றும் அருள்புரிந்தார்.

28.பார்வதி, பரமசிவன் திருமண வைபவம்
நிஷ்டை கலைந்து எழுந்த ஈசன் ஒரு முதிய அந்தணர் வடிவில் பார்வதி முன் தோன்ற, உமையும் அவரை யார் என்று அறிந்து உபசரித்து, தன் விருப்பப்படி திருமணம் நிறைவேற அருள்புரிய வேண்டினாள். மகிழ்ச்சியுற்ற மகேசுவரன் சுயஉருவை காட்டி அவ்வாறே ஆகும் என்று கூறி மறைந்தார். நடந்தவற்றை எல்லாம் பார்வதி இமவானிடம் தெரிவித்தாள். அடுத்து இருதரப்பிலும் திருமண ஏற்பாடுகள் நடைபெறலாயின. குறிப்பிட்ட நாளில் எல்லோரும் பரமன் வருகையை நோக்கிக் காத்திருந்தனர். உமாதேவி புனித நீராடி புத்தாடை அணிந்து, ஆபரணங்கள் தரித்து அற்புத கோலத்துடன் தந்தையின் அருகில் வந்து அமர்ந்தாள். அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. திடீரென்று பார்வதியின் மடியில் ஒரு குழந்தை அமர்ந்திருப்பதை அனைவரும் கண்டனர். இந்திரன் அது ஓர் அசுரனோ என எண்ணி அதன்மீது வஜ்ஜிராயுதத்தை ஓங்க, அவன் கை அசைவற்றுப் போயிற்று. மற்றவர்களும் வெகுண்டு எழுந்தனர். நான்முகன் எல்லோரையும் அமைதிப்படுத்தி குழந்தையை நெருங்கி போற்றி வழிபட்டார். இறைவனே குழந்தையாக வந்திருக்கிறார். அவரைப் பணிந்து தொழுது அருளைப் பெறுங்கள் என்று கூறினார். இறைவன் ஜோதியாக தன் சுயஉருவைக் காட்டிட, இமவானும் மேனையும் அவரை வலம் வந்து வணங்கி தமது புத்திரி உமையை மனமுவந்து திருமணம் செய்து கொள்ளுமாறு பிரார்த்தித்தனர். பிரமனும் ஈசனை அணுகி அவரை வணங்கி தேவியின் திருக்கரம் பற்றி அனைவரையும் மகிழ்விக்குமாறு வேண்டினார். அப்போது பரமன், பிரம்மனிடம் விசுவகர்மாவைக் கொண்டு மாளிகைகளை நிர்மாணிக்கச் செய்யுமாறு கூறினார்.
திருமண முகூர்த்த நேரம் நெருங்கிட, சர்வ அலங்கார பூஷிதராய் ஈசன் உமையவள் திருக்கரத்தைப் பற்றக் காத்திருந்தார். அவருடைய மணக்கோலத்தைக் கண்டு முனிவர்களும், மற்றவர்களும் மகிழ்வுற்றனர். உமாதேவியாரும் புனித நீரால் நீராட்டப்பட்டு, ஆடை அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு லக்ஷ்மி, சரஸ்வதி, இந்திராணி ஆகியோர் தேவியைத் தாங்கிவர திருமண மண்டபத்தை அடைந்தாள் பார்வதி. அப்போது அயன், விஷ்ணுவிடம் அவரது உடன்பிறந்தாளைச் சிவபெருமானுக்கு அனைவரும் மகிழ்ந்திட அளிக்குமாறு கூறினார். உடனே மாதவன், பரமன் தாள் பணிந்து வணங்கி, அவரது பாதங்களை கைகளால் பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, கங்கை நீரால் கழுவி, நறுமலர்கள் கொண்டு பக்தியுடன் அர்ச்சித்தார். பின்னர் திருமால் ஈசனிடம், தங்களையே பதியாக அடைய அல்லும் பகலும் தேவி தியானித்து வருகிறாள். அவனை மனமுவந்து ஏற்றருள் புரியவேண்டும் என்று வேண்டினார். பிரமன் ஈசனை நெருங்கி அவர் அனுமதி பெற்று, ஹோம காரியங்களைத் தொடங்கினார். பரமன் தேவியுடன் ஹோமகுண்டத்தின் முன் அமர்ந்து எங்கும் ஆனந்தம் பொங்கிட மங்கள நாணைத் தேவிக்கு அணிவித்தார். திருமணம் முடிந்த பின் ஈசன் உமையுடன் புறப்பட்டுக் காசியை அடைந்தார். அங்கே இமவான் லிங்கப் பிரதிஷ்டை செய்து ஈசன் உருவைத் தியானித்து வழிபட்டு மேனையுடன் மேலான உயர் பதத்தை அடைந்தன்.
நம: பார்வதி பதயே, ஹரஹர மகாதேவ

29.பரமன் பார்வதிக்குக் கூறிய யோகம்
தேவி கேட்டுக் கொண்டபடி ஈசன் கயிலையில் ஒருநாள் அவருக்கு யோகம் பற்றி எடுத்துரைத்தார்.
யோகம் ஐந்து வகைப்படும்.
1) இறைவனைத் தியானித்து அருமறை மந்திரங்களை ஜபிப்பது மந்திர யோகம் ஆகும்.
2) தூய மனதுடன் ரேசகம், பூரகம் செய்து கும்பத்தில் ஆன்மாவை நிறுத்துவது பரிச யோகம் எனப்படும்.
3) உலகில் அனைத்தையும் மறந்து, உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி, உள்ளத்தில் இறைவனைக் காண்பது பாவ யோகம் ஆகும்.
4) உலகம் வேறு, தான் வேறு என்ற பேதமின்றி உள்ளும் புறமும் தன்னையே காண்பது ஞான யோகம் ஆகும்.
5) சோதியாய், நிர்மலமாய், ஆனந்தமயமாய், பழுதில்லாததாய், ஆதியாய் உறையும் பொருளை அறிவது மகா யோகம் எனப்படும்.
மகாயோகத்தை அடைந்தவர், அஷ்டமா சித்திகள் பெறுவர். யோகத்தில் அமருபவர்கள் முதலில் அயனையும், அரியையும் பக்தியுடன் தியானித்து வணங்கி பின்னரே மகேசுவரனைப் பற்றுதல் நினைக்க வேண்டும். இவ்வாறு தான் பெற்ற உபதேசத்தைச் சனத்குமாரர், வியாசருக்குத் தெரிவிக்க, அதனை அவரிடமிருந்து சூதர் அறிந்து கொண்டார். இவ்வாறாக, நைமிசாரணியத்து முனிவர்கள் உள்ளம் மகிழ ஈசன் மகிமையை எடுத்துக்கூறிய சூதர் சிவபெருமான் மலரடிகளைத் தலை தாழ்த்தி வணங்கினார். முனிவர்களும் மகிழ்ச்சியுடன் சென்னி மேல் கைகூப்பி நான்மறைகளால் துதித்தனர். அவ்வமயம், அங்குப் பேரொளி ஒன்று தோன்றியது. அதனிடையே மலரோன் மலர்ந்த முகத்தோடு முனிவர்களுக்குத் தரிசனம் தந்தார். லிங்க புராணத்தைச் சொன்னவரும், கேட்டவரும் கேட்கச் செய்தவரும் சிவலோகத்தை அடைவர் என அருளினார். இப்புராணத்தைப் படிப்பவரும், கேட்பவரும் கொடும் பாவங்கள் நீங்கப் பெற்றவராய் சிவலோக வாழ்வைப் பெற்றுப் பேரின்பம் எய்துவர்.

30.தேவர் துயர்துடைத்த ஐங்கரன்
ஒருநாள் ஈசன் உமையுடன் இருக்கும் போது தேவர்கள் அவர்களை அடைந்து வணங்கி தானவர்களால் தாம் படும் வேதனைகளைப் பற்றிக்கூறி, அவர்கள் தொடங்கும் எக்காரியமும் நிறைவேறாமல் இருக்க ஓர் உத்தம புருஷனைத் தோற்றுவிக்கப் பிரார்த்தித்தனர். ஈசன் அவர்களை அனுக்கிரகிப்பதாகக் கூறி அருள் செய்தார். தேவியுடன் அருகில் இருந்த உத்தியானவனத்திற்குச் சென்று ஐங்கரனைத் தோற்றுவிப்போம் என்றார். இருவரும் யானைகளாக மாறி ஓடியாடி மகிழ, அங்கே அப்போதே வேழ முகத்தோன் தோன்றினான். குமாரனைக் கண்டு உச்சி முகந்து மகிழ்ந்தனர். தேவி குழந்தையை மடியில் வைத்து அன்பு செய்ய வேழமுகத்தோன் கீழே இறங்கிக் கைகொட்டி நடனம் புரியலானார். அப்போது பரமன் அவனை அருகழைத்து, நீ என் கணங்களுக்கு எல்லாம் தலைவனாகி, கணபதி என்ற பெயர் பெறுவாய். நீ மகிழ்ச்சியுடன் நடனம் புரிவதால் நர்த்தன கணபதி என்று பெயர் பெறுவாய். அனைவரும் உனக்கே முதல் பூஜை செய்ய வேண்டும். உன் அருள் பெற்ற காரியம் இனிது நிறைவேறும். உன்னைப் பூசிக்காமல் செய்தால் தடைகள் (அ) விக்கினங்கள் ஏற்படும். அதனால் உனக்கு விக்கினேச்வரன் என்று பெயர். தானவர்கள் கெ அவர்களின் காரியங்களைத் தடை செய்து தேவர்களைக் காத்திடுவாயாக. அதற்கான சக்தியை உனக்கு அளித்தேன் என்று கூறி விநாயகரை ஆசிர்வாதித்தார் பெருமான். ஈசன் ஐங்கரனுக்கு அளித்த கவுரவங்களைத் தேவி அங்கீகரித்தாள். இந்திராதி தேவர்கள் வேழ முகத்தானை வேண்டித் துதித்தனர். அவர்கள் செய்த துதிகளால் அருள்புரிவதாகக் கூறி அபயம் அளித்தார். அதனால் அசுரர்கள் கொட்டம் குறைந்து, அவர்கள் செய்வன தடை செய்யப்பட்டன.

31.சிவபெருமான் காளியுடன் நடனமாடுதல்
தாருகன் என்னும் அசுரன் பிரமனிடம் தனக்குப் பெண்ணாலேயே மரணம் என்ற வரம் பெற்றான். அவன் தேவர்களைப் பல அல்லல்களுக்கு உள்ளாக்கினான். ஆனால், பெண்கள் இருக்குமிடம் செல்வதில்லை. அவனால் நேரிடும் துன்பங்களைத் துன்பங்களைத் தாங்க முடியாத தேவர்கள் பரமனிடம் முறையிட்டனர். அப்போது ஈசன் தாருகனுக்கு ஒரு பெண்ணாலேயே மரணம் என்பதால் தேவியைப் பிரார்த்திக்குமாறு அறிவுரை தந்தார். அருகிலிருந்து உமாதேவியைத் தேவர்கள் பலவாறு துதிசெய்து மகிழ்வித்தனர். அதனால் தேவி தன் அம்சத்தை ஈசன் உடலில் செலுத்த, அவள் உள்ளம் அறிந்த பரமன், நீலகண்ட விஷத்தில் இருந்து தேவியின் அம்சத்தைக் கொண்டு காலகண்டியைத் தோற்றுவித்தார். தோன்றிய காலகண்டி உமாமகேச்வரரை வணங்கி தனக்கு இடும் பணியாது என்று வினவ, தாருகனைக் கொன்று திரும்புமாறு பணித்தாள் பார்வதிதேவி. உக்கிரமான காலகண்டி ஈசனைத் தியானித்து, பூதப் பிரேத பிசாசுகளை பயங்கர ஆயுதங்களுடன் தோற்றுவித்து அவர்கள் பின் தொடர தாரகன் இருக்கும் இடத்தை அடைந்து அவனுடன் போரிட்டு அவனைக் கொன்றாள். மற்ற அசுரர்களும் அழிக்கப்பட்டனர்.
இந்தப் போரினால் காளி வெறி கொண்டு அலைய, அவளைச் சாந்தப்படுத்துமாறு அனைவரும் ஈசனையே வேண்டினர். ஈசன் ஒரு பாலகனாகி ஓவென அழ, குழந்தையைக் கண்ட காலகண்டி மனம் இரக்கம் கொண்டு புன்சிரிப்புடன் குழந்தையை வாரி எடுத்துக் கொஞ்சி பால் கொடுக்க, அப்பாலகன் பாலுடன் அக்காளியிடம் கோபத்தையும் பருகி விட அவள் சாந்தம் கொண்டாள். ஈசனிடம் வந்த காளியின் கோபம் எட்டு ÷க்ஷத்திர பாலகர்களாக உருவெடுத்தது. காளியை மகிழ்விக்க ஈசன் நடனமாடினார். குழந்தையின் நடனம் கண்ட காளியும், கைகொட்டிக் குழந்தையுடன் நடனமாட, மற்ற பூத பிரேத பிசாசுகளும் ஆடின. அன்று முதல் காளியால் உலகில் எத்தகைய தீமையும் நேராதிருக்க சிவபெருமான் மாலையில் காளியுடன் நடனமாடுகிறார்.

32.பாலுக்கு அழுத பாலகன்
பாலகன் உபமன்யுவுக்குப் பாலுக்காக அவனருகில் பரமன் பாற்கடலையே வரவழைத்தார்.

33.கௌசிகன் செய்த நாம சங்கீர்த்தனம்
கௌசிகன் என்னும் ஓர் அந்தணன் சாமகானம் பண்ணுவதில் சமர்த்தன். அவன் ஊர் ஊராய் சென்று பகவானைத் துதித்து அவன் நாமத்தை இடைவிடாது ஜபித்து வந்தான். ஒரு சமயம் அவன் ஒரு விஷ்ணுத் தலத்தை அடைந்தான். அவன் கானத்தால், உள்ளம் பக்தியால் நிரம்பி வழிந்த பத்மன் என்பவன் கௌசிகனையும், அவனது குடும்பத்தினரையும் தன் கிருகத்திலேயே இருக்கச் செய்து அவனுக்குச் சீடனாகி அனைவருக்கும் அன்னமிட்டு வந்தான். அவன் கானத்தில் பத்மனைப் போல் உள்ளம் பறிகொடுத்த மாலவன் என்ற வைசியன் பஜனைக்குத் தீபம் ஏற்றி கைங்கரியம் செய்து வந்தான். கௌசிகன் புகழ் அருகிலிருந்த ஊர்களிலும் பரவி கலிங்க ராஜனுடைய காதுகளுக்கும் எட்டியது. அவன் கௌசிகனைத் தரிசிக்க வந்தான். அரசனை வரவேற்று உபசரித்தான் கௌசிகன். ஆனால் அரசன் தன்னைப் புகழ்ந்து பாடவேண்டும் என்று கூறியதால் மனவேதனைப்பட்டான் கௌசிகன். இறைவனைத் தவிர வேறு எவரையும் புகழ்ந்து பாடுவதில்லை என்று கூற அரசன் சினம் கொண்டான். மன்னனின் நிர்பந்தம் அதிகமாக வேறுவழியின்றி கௌசிகன் தன் நாக்கைத் துண்டித்துக் கொண்டான். சிறிது காலம் சென்றபின் கௌசிகன், அவனது சிஷ்யர்கள் கலா கதி அடைந்து வைகுந்த வாசம் பெற்றனர். பத்மன் குபேர பதவியைப் பெற்றான். தீப கைங்கரியம் செய்த மாயவன் வைகுந்தத்தில் தீபம் ஏற்றும் பணியைப் பெற்றான். இவ்வாறு கைங்கரியம் புரிபவர்களை மாதவன் தன் இருப்பிடம் அழைத்துக் கொண்டு அருள் செய்கிறார்.

34.நாரதர் கோட்டானிடம் பாடம் கேட்டல்
வைகுந்தத்தில் மாதவன் தும்புருவை அருகில் அமர்த்தி, அவரைப் பாடச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பெருமையைத் தானும் பெற நாரதர் ஈசனைக் குறித்துத் தவம் செய்தார். தவத்தின் இடையில் ஓர் அசரீரி நாரதரிடம், மானசோத்திர பர்வத்தில் உள்ள கானபிந்து என்னும் கோட்டானிடம் பாடம் கேட்டு மனோபீஷ்டம் நிறைவேறப் பெறுவாய் என்றது. பலநாள் திரிந்து கடைசியில் கானபிந்துவைக் கண்டுபிடித்தார் நாரதர். அந்தக் கோட்டான் நாரதரைப் பார்த்து, தாங்கள் யார்? இங்கு வந்த காரணம் யாது? என்று கேட்க, நாரதர் நடந்ததைக் கூறி அருள்புரியுமாறு வேண்டினார். கானவிந்து மகிழ்ச்சியுற்று, அவருக்குச் சிறந்த ஞானத்தை உண்டாகச் செய்வதாகக் கூறியது. அப்போது நாரதர் கானவிந்துவிடம் மகாஞானியான அவர் கூகை உடல் பெற்றிருக்கும் காரணத்தைக் கூற வேண்டினார்.
கூகை கூறிய சுயசரிதை
புவனேசுவரன் என்றொரு அரசன் இருந்தான். அவன் ஆயிரக்கணக்கான வாஜ்பேய யாகம், அசுவமேத யாகம் ஆகியவற்றுடன் அந்தணர்களுக்குப் பொன்னும் பொருளும் தானம் செய்தான். எனினும் அவன் ஒரு தவறான காரியத்தைச் செய்தான். பகவானை அடிபணிந்து பாடிடும் பக்தர்களை அழைத்துத் தன் புகழ்பாடும்படி கட்டாயப்படுத்தி இம்சைகள் பல புரிந்தான். ஒரு நாள் ஆற்றங்கரையில் ஹரிமித்திரர் என்றொரு பக்தர் மாதவனை வழிபட்டு, அவரைக் குறித்து மெய்யுருகிப் பாடிக் கொண்டிருக்கையில், மன்னன் புவனேசுவரனுடைய வீரர்கள் அங்குத் தோன்றி, அவரை மன்னன் புவனேசுவரன் முன் கொண்டு நிறுத்தினர். அவன் அவரை அடித்து, அவன் பொருள்களைப் பிடுங்கிக் கொண்டு நாட்டை விட்டு விரட்டி விட்டான். ஆனால் ஹரிமித்திரர் அனைத்தும் அச்சுதன் செயலென்று நாட்டை விட்டு வெளியேறினார். சில காலத்தில் புவனேசுவரன் வானுலகை அடைய, அவனைத் தருமராஜன் முன்பு கொண்டு நிறுத்தினர். அவனுக்குப் பயங்கர பசி. அத்தகைய துன்பத்திற்கு தான் ஆளான காரணத்தைத் தருமராஜனிடம் கேட்டான்.
ஹரிமித்திரர் என்ற விஷ்ணு பக்தரை இம்சைக்கு ஆளாக்கிய பாபமே இந்தப் பசியைப் போக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டான் புவனேசுவரன். அதற்குத் தருமராஜன், பூலோகத்தில் அரிய கோட்டானாகப் பிறந்து, முன்னர் எடுத்திருந்த அரச உடலையே தின்று, பசி ஆற்றிக் கொள்ள வேண்டும். இந்த மன்வந்தரம் முழுவதும் அவ்வாறே இருந்து முடிவில் மானிடராகப் பிறப்பாய் என்றான் தர்மராஜன். மேலும், தண்டனையை அனுபவித்து வரும்போது ஒருநாள் விண்ணுலகம் செல்லும் ஹரிமித்திரரைக் கண்டு என் நிலையை எடுத்துக்கூறி மன்னிக்குமாறு வேண்டினேன். மற்றும் நான் இழைத்த கொடுமைகளுக்குப் பிராயச்சித்தமாக கானம் செய்து இல்வாழ்க்கையை முடிக்க விரும்புவதாகத் தெரிவித்து எனக்கு சங்கீதத்தைக் கற்பிக்கும்படி மன்றாடினேன். அவரும் இரக்கம் கொண்டு சங்கீதம் போதித்தார். பல ஆண்டுகள் அவரிடம் சங்கீதம் கற்றுத் தேர்ந்தேன். கந்தர்வர்கள் என்னிடம் வந்து சங்கீதம் கற்றுச் சென்றனர். முற்பிறவியில் செய்த தீவினைகளுக்குப் பிராயச்சித்தமாக நான் இப்போது காலம் முழுவதும் இறைவனைக் குறித்து கானம் செய்வதிலேயே கழித்து வருகிறேன் என்றது. நாரதர், கானவிந்துவிடம் சங்கீதம் பயின்றார். முடிவில் குருதக்ஷிணையாக என்ன எதிர்பார்க்கிறாய்? என்று கேட்டார். அப்போது கூகை இந்த மன்வந்தரத்தின் முடிவில் பிரம்மன் பதவிக்காலம் முடிந்து இரவிலே ஓய்வு எடுத்து மீண்டும் சிருஷ்டியைத் தொடங்கும் போது எனக்கு உத்தமப் பிறவி வாய்க்க வேண்டும். இதையே நான் விரும்புகிறேன் என்று கூறியது.
அடுத்த மன்வந்தரத்தில் அவர் கருடனாகப் பிறவி எடுப்பீர்கள் என்று அருள்செய்து புறப்பட்டார் நாரதர். மாதவனை அடைந்து தாள் பணிந்து வணங்கினார். நாரதர் உள்ளத்தை உணர்ந்த மாதவன் நாரதரிடம் நீ இன்னும் சங்கீதத்தில் முழுத்தேர்ச்சி அடையவில்லை. துவாபர யுகத்தில் நான் கிருஷ்ணவதாரம் எடுக்கும்போது என்னை அடைந்து சங்கீதத்தில் முற்றிலும் தேர்ந்தவனாய் தும்புருவுக்குச் சமானமாக விளங்கலாம் என்றார். அவ்வாறே நாரதர் துவாரகைக்கு வர, கிருஷ்ணனும் அவரை வரவேற்று ஜாம்பவதியிடம் ஒரு பருவம் சங்கீதம் கற்றுக் கொள்ளுமாறு சொன்னார். அவ்வாறே பயிற்சி பெற்று கிருஷ்ணனிடம் வந்து யாழினில் இசைத்துக் காட்டினார். கண்ணன் மகிழ்ந்து மற்ற ஏழு மனைவியாரிடமும் அவ்வாறே கானம் கற்குமாறு அனுப்பினார். அவ்வாறே ஒவ்வொருவரிடமும் ஒரு பருவம் கற்றுப் பயிற்சி முடிந்து கிருஷ்ணனிடம் வந்து தன் புலமையைக் காட்டினார். அதுமுதல் நாரதர் தும்புருவுக்குச் சமானமாக கௌரவிக்கப்பட்டார். வைகுந்தத்தில் திருமால் சிவபூஜை செய்யும்போது நாரதரை அழைத்துப் பாடச்சொல்லித் தாம் மகிழ்வதோடு ஈசனையும் மகிழச் செய்தார்.

35.ஸ்ரீமதி, ஸ்ரீவிஷ்ணு திருமணம்
திரிசங்கு என்ற மன்னன், மனைவி தர்மவதியுடன் வாழ்ந்து வந்தான். தர்மவதி தினமும் விஷ்ணு ஆலயம் சென்று அங்குத் தங்கி விரதம் இருந்து வர அவர்களுக்கு ஒரு மைந்தன் பிறந்தான். அவனுக்கு அம்பரீஷன் எனப்பெயரிட்டு கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தான். அம்பரீஷன் வளர்ந்து வருகையில் அச்சுதன் பக்தனாக விளங்கினான். அவனுக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவனை ஸ்ரீமதி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அவள் மணப்பருவம் அடைந்து ஸ்ரீமந் நாராயணனையே திருமணம் செய்துகொள்ள விரும்பினாள். ஆனால், நாரதரும் பர்வதரும் போட்டி போட்டுக்கொண்டு அவளை மணக்க விரும்பி அம்பரீஷனை நாட அவர்களின் முகங்கள் அவர்கள் திருமாலிடம் பெற்ற வரத்தின்படி குரங்காகக் காட்சி அளித்தன. காலையில் மாலையை வைத்துக் கொண்டு வந்த அவர்கள் இருவருக்கும் நடுவே தோன்றிய ஸ்ரீஹரிக்கு மாலையிட்டு மணந்தாள். முனிவர்கள் திருமாலுக்குச் சாபம் கொடுத்தனர். அதன்படி திருமால் இராமவதார காலத்தில் சீதையை இராவணன் தூக்கிச்செல்ல அனுமார், சுக்கிரீவன் ஆகிய குரங்குகளின் உதவியால் சீதையை மீட்டு அயோத்தி திரும்பினார்.

36.ஜேஷ்டாதேவி வரலாறு
தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்துக்காகப் பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விஷத்துடன் ஒரு கன்னிகையும் தோன்றினாள். அவர் பெயர் ஜேஷ்டாதேவி (மூதேவி). அப்போது பாற்கடலில் தோன்றி, பலவற்றையும் பலர் விரும்பி எடுத்துக் கொண்டனர். ஆனால், ஜேஷ்டாதேவியை யாரும் விரும்பவில்லை. ஏற்கவில்லை. அவளைத் துரத்தினர். இந்நிலையில் தேவர்கள் பிரபன் என்ற ஒருவனைப் படைத்து அவனுக்கு ஆசைவார்த்தைகள் கூறி ஜேஷ்டையை மணக்கச் செய்தனர். பிரபன் ஜேஷ்டையை மணந்து அவளை அழைத்துக்கொண்டு நல்லவர்கள் வாழும் ஊர்களுக்குச் சென்றான். ஆனால் ஜேஷ்டாதேவிக்கு அவன் தங்குமிடங்களில் தங்கமுடியாது இருந்தது. எனவே, லக்ஷ்மி, நாராயணன் திருமணத்தால் பொறாமை கொண்ட இவள் கணவனை அவன் செல்லும் இடங்களில் எல்லாம் தங்கச் செய்யாமல் கிளப்பிக் கொண்டு வந்தாள். இதனால் கோபம் கொண்ட பிரபன் அவள் செய்கைக்கான காரணத்தைக் கேட்டான். அப்போது அவள் நல்லவர்கள் இருக்கும் இடங்களிலும், யாகம் முதலிய நல்ல காரியங்கள் நடைபெறும் இடங்களிலும் தான் இருக்க முடியாதென்பதை அவனுக்கு விளக்கினாள். அப்போது தான் அவள் சுயரூபம் அவனுக்குத் தெரிய வந்தது. எனவே அவளிடமிருந்து தன்னைக் கழற்றிக் கொள்ள விரும்பினான். அதற்காக அவன் ஒரு யுக்தி செய்தான். அவளிடம் அவளைப் பற்றி இப்போது தான் நன்கு தெரிந்து கொண்டதாகக் கூறி, அவர்கள் தங்குவதற்கு ஓர் இடத்தைக் கண்டு வருவதாகக் கூறி அவளை ஒரு குளக்கரையில் காத்துக் கிடக்கச் செய்து அவளைத் தனியே விட்டு விட்டுப் புறப்பட்டான். அப்போது அவள் தன் ஆகாரத்துக்கு வழிசெய்யுமாறு கேட்டாள். அவன் பூஜை செய்யாதவர்களுடைய பொருள் எல்லாம் அவளைத் சேர்ந்ததே என்று கூறி விடைபெற்றுச் சென்றான்.
நெடுநேரம் ஆகியும் அவன் திரும்பி வராதது கண்டு கணவரைத் தேடிப் புறப்பட்டாள் ஜேஷ்டாதேவி. வழியில் ஸ்ரீதேவியும், ஸ்ரீவிஷ்ணுவும் ஆனந்தமாக உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு ஓ வென அழுதுகொண்டே மாதவன் கால்களில் விழுந்தாள். நிகழ்ந்ததை எல்லாம் எடுத்துக்கூறி கதறி அழுதாள். அவளுக்குத் திருமால் ஆறுதல் கூறி, அவள் கணவன் திரும்பி வரும் வரை ஓர் நிரந்தர இடத்தைக் காட்டினார். யாரொருவன் அவரைப் பூஜித்து, ஆனால் ஈசனை நிந்தனை செய்வானோ அவன் வீட்டில் அவள் தாரளமாக வாசம் செய்யலாம் என்றும், அவன் பொருள்களைப் புசித்து பசி ஆறி வரலாம் என்றும் கூறி சமாதானப்படுத்தினார். திருமால் கூறிய வண்ணம் தனக்கொரு இடத்தைத் தேடிச் சென்றாள் ஜேஷ்டாதேவி. இன்னமும் தன் கணவனைத் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறாள். அப்போது முனிவர்கள் ஜேஷ்டியை தன்னிடம் நெருங்கவிடாது இருக்க என்ன வழியைக் கடைபிடிக்க வேண்டும் என்று சூதரைக் கேட்டனர். அப்போது சூதர், மாதவனுடைய அரிய திருநாமமான அஷ்டாக்ஷரியை எவன் ஒருவன் பக்தியுடன் ஜபித்து வருகிறானோ அவனிடம் ஜேஷ்டை ஒருபோதும் நெருங்க மாட்டாள். அந்த இடத்தில் லக்ஷ்மிவாசம் செய்கின்றாள் என ஒதுங்கிச் சென்று விடுவாள்.

37.சிவ ஷடாக்ஷரி மகிமை
நமசிவாய என்பது பஞ்சாட்சரம் (அ) திருவைந்தெழுத்து. அத்துடன் ஓம் என்ற பிரணவத்தைச் சேர்த்தால் அது ஷடாக்ஷரி (அ) ஆறெழுத்து ஆகும். அதாவது ஓம் நம சிவாய, ம் ஒற்றெழுத்து கணக்கில் வராது. (ஓம்-1, ந-2, ம-3, சி-4, வா-5, ய-6). வினயன் என்ற அந்தணனுக்கு ஓர் ஆண் மகன் பிறக்க, அவனை ஐதரேயன் என்று பெயர் வைத்து வளர்த்து வந்தான். அவனைக் குருகுல வாசத்துக்குக் கல்வி கற்க அனுப்பி வைத்தான். ஆனால் அவனுக்குக் கல்வியில் சிறிதும் நாட்டம் இல்லை. ஆனால், அவனுக்கு சிவபக்தி ஏற்பட்டு அவன் திருஆறெழுத்தை மனத்துக்குள்ளாலேயே ஜபித்து வந்தான். மகன் கல்வி கற்காமல் மூடனாகத் திரிவது கண்டு பொறாத வினயன், மகன் ஐதரேயனையும், அவனுக்குப் பரிந்து பேசிய தன் மனைவியையும் வீட்டை விட்டுத் துரத்தினான். ஐதரேயன் தாயாருடன் ஊர் ஊராக அலைந்தான். தாயாருக்கு மூடனான மகனுடன் சுற்றுவதில் வெறுப்பு ஏற்பட்டு, ஒருநாள் மகனே! நீ இவ்வாறு சுற்றுவது சரியல்ல. உன்னால் எனக்கு வேதனையே அதிகரிக்கிறது. உன்னை விட்டுச் செல்ல பாசம் இடம் கொடுக்கவில்லை. எங்கேயாவது ஆறு (அ) குளத்தில் விழுந்து இறந்து விடுவதுதான் ஒரே வழி என்று கூறி அழுதாள். தாயின் கண்ணீர் ஐதரேயன் மனத்தில் சலனத்தை உண்டாக்கியது. உடனே அவன், அம்மா உன் விருப்பப்படியே கல்வி கற்றுத் தேர்ச்சி பெற்றவனாக விளங்குவேன் என்று கூறி வேதியர் யாகம் செய்யும் இடத்தை அடைந்தான். அவ்வமயம் வேதங்கள் ஓதி யாகம் செய்து கொண்டிருந்த அவர்களுக்குத் திடீரென்று மேலே சொல்ல நா எழாமல் தவித்தனர். அவர்களைச் சமீபித்த ஐதரேயன் தனக்குத் தெரிந்த ஒரே மந்திரமான சிவஷடாக்ஷரியை அவர்கள் காதுகளில் விழுமாறு ஜபித்தான்.
அம்மந்திரம் அந்தணர்கள் காதினில் விழுந்த உடனே, மாயை அகன்றது. அவர்கள் மேலும் வேதத்தைத் தொடர்ந்து யாகத்தைச் செய்து முடித்தனர். அவன் கூறிய திருமந்திரத்திலேயே, தடைப்பட்ட காரியம் பூர்த்தி அடைந்தது. அவ்வேதியர்கள் அகம் மகிழ்ந்து அவனைத் தொழுது கொண்டாடினர். மேலும் அவன் வாக்கிலிருந்து வெளிப்பட்ட மந்திரத்தால் தான் தடை நீங்கி யாகம் பூர்த்தியாகியது என்று கூறி ஐதரேயனைப் பாராட்டி யாகம் முடிவடையும் வரையில் அவனைத் தங்களுடனேயே நிறுத்திக் கொண்டனர். நல்லவர் சகவாசத்தால் வேத மந்திரங்களுடைய உச்சாடனங்களையும் கேட்கப் பெற்றதால் ஐதரேயனுக்கு சகல சாஸ்திரங்களும் தாமே புரிந்தன. அவன் புலமையைக் கண்டு அனைவரும் அவனைப் பாராட்டி வணங்கினர். மகிழ்ச்சி பெற்ற தாயுடன் பலகாலம் வாழ்ந்திருந்து முடிவில் அவளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு ஐதரேயன் வைகுந்தம் அடைந்தான். எவரொருவர் ஷடாக்ஷரியை ஜபிக்கின்றாரோ அவருக்கு மாதவனுடைய அருள் கிட்டி வைகுந்த வாசமும் கிட்டும்.

38.பஞ்சாக்ஷர ஜபம்
அஷ்டாக்ஷரி, ஷடாக்ஷரி, பஞ்சாக்ஷரி ஆகிய சிவநாமங்களில் பஞ்சாக்ஷரியே மிகச் சிறந்ததாகும். திருஐந்தெழுத்து. பஞ்சாக்ஷரியை ஜபித்தால் அந்தணரைக் கொன்ற பாவம் நீங்கி விடும். அரியும், அயனும் பஞ்சாக்ஷரத்தையே போற்றிக் கொண்டாடுகின்றனர். ஒரு சமயம் மாதவன் மேகமாகி ஈசனைச் சுமக்க அவர் உடல் இளைத்து விட்டது. ஈசனைக் குறித்துத் தவம் செய்ய பரமன் அருளால் திருமால் உடல் அதற்கு முன் இருந்ததைவிட மிகவும் வலுப்பெற்றது. அந்தக் கற்பம் மேகவாகன கற்பம் எனப்பட்டது. அந்தக் கற்பத்தில் துவாபர யுகத்தில் துண்டுமூகன் என்றொரு அந்தணர், மனைவி விசாலையுடன் வாழ்ந்து வந்தான். அத்தம்பதியருக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. அப்போது அவர் இல்லத்திற்கு வந்திருந்த மித்திரர், வருணர் என்ற இருவரும் குழந்தையின் முகத்தைப் பார்த்து அவன் பிறந்த நேரம் தீயமுகூர்த்தம் ஆனதால் கெடுதல் விளையும் என்று கூறிச் சென்றனர். எனவே அவர்கள் மகிழ்ச்சி துயரமாயிற்று.
ஒரு நாள் வசிஷ்ட முனிவர் அங்கு வந்தார். அவர் குழந்தை பிறந்த நேரம் குருபார்வை இருப்பதால், கொடிய கொலையே அவன் செய்தாலும் அப்பாவம் அவனைப் பற்றாது என்றார். புராணப்படல நேரத்தில் துண்டுமூகன் தீதுறு சொற்கள் பேசியதால் அவர்கள் குமாரன் பெற்றோர்க்கு வருத்தம் தரக்கூடிய முகூர்த்தத்தில் பிறந்தான் என்றார். அந்தப் பாலகனுக்கு அத்தம்பதியர் உரிய காலத்தில் உபநயனமும், மற்றும் நற்குலப் பெண் ஒருத்தியைத் திருமணமும் செய்து வைத்தனர். திருமணத்துக்குப்பின் அவன் காமம், கள்ளுண்டல், கொலை என்று தவறான வழிகளில் நடக்கலானான். பெற்றோர்களின் புத்திமதி அவனை மாற்றவில்லை. ஒருநாள் அவன் மதுமயக்கத்தால் மனைவி, பெற்றோர் ஆகியோரை வாள் கொண்டு வெட்டி வீழ்த்தினான். இந்தச் செய்தி மன்னன் காதில் விழ அவன் இவனை பிரஷ்டம் செய்து விட்டான். அவனும் பல இடங்களில் அலைந்து திரிந்து கடைசியில் காசி அடைந்து கங்கையில் நீராடினான். அவன் நீராடி வருகையில் ஆங்கொரு வேதியரின் புராண படலத்தைக் கேட்டான். கங்காஸ்நானமும், புராணம் கேட்டதும் அவனது தீயபுத்தி அகன்றது. அப்பிறவியில் மட்டுமல்ல, முற்பிறவிகளிலும் அவன் செய்து வந்த பாபங்கள் விலகிட அவன் ஈசனைப் பக்தியுடன் ஆராதிக்கலானான். தினமும் காலையில் நீராடி ஈசனை வழிபட்டு தான் செய்த பாபங்களை நீக்குமாறு சிவனிடம் முறையிட்டான். கருணாகரனான எம்பெருமான் அவனுக்குப் பஞ்சாக்ஷரத்தை உபதேசித்து ஜபித்து வருமாறு அருள்புரிய அவனும் தவறாமல் பக்தியுடன் பஞ்சாக்ஷரம் ஜபித்ததுடன் மறைகளையும் குறையின்றிக் கற்றுப் பாசுபத விரதம் இருந்தான். இறுதியில் இவ்வுலக வாழ்வை நீத்துக் கைலாயத்தை அடைந்தான். அவன்பால் அன்பு கொண்ட ஈசன் அவனை கணங்களுக்குத் தலைவனாக இருக்கும் பேற்றினை அளித்தார். அனைத்தும் ஐந்தெழுத்தின் மகிமையே அன்றோ!

39.ஒட்டகமான சனத்குமாரர்
ஒருநாள் சனத்குமாரர் சிவத்தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது ஈசன், உமையோடும் கணங்களோடும், நந்தி முன் செல்ல அவ்வழியே சென்று கொண்டு இருந்தார். இதனால் சனத்குமாரன் யோகநிலை கலைந்தது. மனம் ஐம்புலன்கள் சலனம் பெற்றன. அவர் கண் விழிக்காமல் தியானத்திலிருந்தார். பரமன் அருகில் சென்றும் அவரை வணங்கவில்லை. உமாதேவியார் ஈசனிடம் அவன் அருகிலிருப்பதை விட்டு விட்டு எங்கோ தேடுகிறார் சனத்குமாரர் என்றாள். கோபம் அடைந்த நந்திகேசுவரர் ஒட்டகத்தைப் போல் ஈசனை வணங்காதிருக்கும் இவன் ஒட்டகமாக மாறட்டும் என்று சபித்தார். கண்களைத் திறந்து பார்த்த சனத்குமாரர் தான் ஒட்டகமாயிருப்பதை உணர்ந்து தந்தையாகிய பிரம்மனை அடைந்து முறையிட்டார். பிரம்மன் ஞானதிருஷ்டியால் நடந்ததை அறிந்து, ஈசனைப் பக்தியோடு தியானிக்க அவர் முன் தோன்றிய பரமனிடம் சனத்குமாரர் சிவ தியானத்தில் இருந்தாரே அன்றி தவறிழைக்கவில்லை. அவன் மீண்டும் சுயஉருபெற அருளுமாறு வேண்டினார். அப்போது பரமன் தன் பக்தன் நந்தியின் சாப பலன் இது. எனவே அவரிடமே அருள்பெற உபாசிக்குமாறு கூறினார். அவ்வாறே சனத்குமாரர் நந்தியை உபாசித்து வழிபட அவரும் மனமகிழ்ந்து சனத்குமாரருக்கு சுயஉரு பெற அருளினார். சுயஉருபெற்ற சனத்குமாரர் ஈசனைப் பணிந்து தொழ கயிலைக்குச் சென்றார். அங்கே அவர் ஓர் அற்புதக் காட்சியைக் கண்டார். உலகனைத்தும் பசுவாகி, மாயையாகிய கயிற்றால், பதியாகிய பரமனுடன் பிணைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அதன் பொருளை நந்தி அவருக்கு உரைக்க அவர் வியாசருக்கு அதனை உபதேசித்தார்.

40.சிவசக்தி விபூதி
ஒவ்வோர் ஆணும் பெண்ணும் சிவசக்தி வடிவேயாகும். பரம்பொருள் சிவன்-மாயை பார்வதி; ஆதிபுருஷன்-சிவன்; பிரகிருதி-உமை; பெண்ணே கௌரி, பொருள் இறைவன்; சொல்-அம்மை; பகல்-பரமன், இரவு-தேவி; யஜ்ஞமே-சிவன்; யாகதக்ஷிணை-கௌரி. கடன்-வேணியன், கரை-உமாதேவி, ருத்திரன்-ஈசன், அவன் ஒளி-கௌரி, வாயு-சிவன், அவன் மனைவி-மனோரமா தேவி, வருணன்-கைலாசநாதன், அவர் மனைவி நித்தி-அம்மை, சூரியன்-பரமன், அவன் மனைவி-சுவர்க்கலை உமையாள், இறைவன்-சந்திரன், சதிதேவி-ரோகிணி. இவ்வாறு ஆண் சொரூபம் அனைத்தும் ஈசனே. பெண் பாலர் அனைவரும் தேவியின் திருவுருவம், பிரபஞ்சத்தில் அனைத்தும் இறைவன்-இறைவி சொரூபம். தன் முதலாக விளங்கும் ஈசனே எங்கும் வியாபித்து இருக்கிறார். எனவே உமாமகேசுவரனைப் பார்வதி பரமேச்வரனை சேர்த்தே வழிபட வேண்டும். அதுவும் உய்யும் வகையாகும். எனவே, ஈசனைத் தனியாக வழிபடுவது தக்க பலனைத் தராது. அர்த்தநாரியாக வழிபட வேண்டும்.

41.ஈசன் சான்னியத்தியம்
ஈசன் இல்லாத இடம் ஏது? அவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் என்றான் பிரகலாதன். எனவே அனைத்திலும் ஈசன் சான்னித்தியம் உள்ளது. இருப்பினும் ஆகாயம், வாயு, அக்கினி, நீர், பூமி, சூரியன், சந்திரன், யாகம் செய்பவர் என்னும் எட்டிலும் ஈசன் அஷ்டமூர்த்திகளாய் உறைகின்றார்.
1. வெப்பத்தைக் கொடுத்து ஒளியைப் பரப்பும் சூரியன் சிவசொரூபமே. சூரியனுடைய கதிர்களில் அமுதம் மழையையும் சந்திரன் பனியையும், சுக்கிலம் வெய்யிலையும், சுழுமுனை சந்திரனுக்கு ஒளியையும், அரிகேசம் பிரகாசத்தையும் அளிக்கின்றன.
மேலும், விசுவகர்மா எனும் கதிர்கள் புதனுக்கு ஒளியையும், சத்துவிகம் – செவ்வாய்க்கும், சருவாவசு – வியாழனுக்கும், விச்சு – சுக்கிரனுக்கும் ஒளியைத் தருகின்றன.
2. தேவியின் அமிசமான சந்திரன் தனது கலைகளுடன் விண்ணவரையும், தென் புலத்தாரையும் அமுதத்தால் நிறைவிக்கிறார்.
3. யாகம் செய்யும் வேதியர்கள் இறை அமிசமாய் விளங்கி யாகத்தையும், மற்ற கர்மாக்களையும் செய்து வானவர்க்கும் மற்றோர்க்கும் உணவு அளிக்கின்றனர்.
4. நீர் உடலின் உள்ளும் புறமும் இருந்து வளர்ச்சிக்கு உதவுகிறது. பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் உணவைப் பெற்றுத் தருகிறது.
5. காற்று அதாவது வாயு எங்கும் பரந்திருந்து, உடலில் உள்ளும் புறமும் இருந்து இயங்குகின்றது.
6-7. மேற்படி நீர் நிறைந்த சாகரமும், தீயும், காற்றும், நிறைந்த ஆகாயமும் வெளியில் பூமியும் தங்குகின்றன.
1. பவன் என்பது பூமியின் சொரூபமாய் விளங்கும் ஈசனின் மூர்த்தம் தரும்.
2. சர்வன் என்பது நீருருவாகி உலகெலாம் பரந்து மருவும் ஈசன் மூர்த்தம்.
3. பசுபதி என்பது தீயாகி அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்கும் மூர்த்தம்.
4. ஈசானன் என்பது வாயு சொரூபமான ஈசன் மூர்த்தம்.
5. பீமன் என்பது ஆகாய சொரூபமாக விளங்கும் இறைவன் மூர்த்தம்.
6. ருத்திரன் என்பது சூரியன் சொரூபமாக விளங்கும் மூர்த்தம்.
7. மகாதேவன் என்பது சந்திரனாய் விளங்கும் ஈசுவரமூர்த்தம்.
8. உக்கிரன் என்பது வானவருக்கும் தென்புலத்தார்க்கும் உணவளிக்கும் யாகம் செய்யும் மறைவராக விளங்கும் ஈசுவா மூர்த்தம்.
1. வாயு மனைவி சிவை. அவள் யுரோசவானைப் பெற்றாள்.
2. பீமன் மனைவி திக்கு – அவள் சக்கரனைப் பெற்றாள்.
3. ருத்திரன் (அ) சூரியன் மனைவி சுவர்ச்சலை. அவனது மகன் சனீஸ்வரன்.
4. மகாதேவன் (சந்திரன்) மனைவி ரோகிணி. அவனது மகன் புதன்.
5. அந்தணன் அமிசம் உக்கிரன் மனைவி தீக்ஷõபத்தினி அவள் மகன் சந்திரன்.
6. பவன் (பூமி) உயிர்களுக்குத் திண்மையான தேகத்தைத் தருகின்றார். பவன் மனைவி மகாதேவி சுக்கிரனை ஈன்றாள்.
7. சர்வன் பத்தினி விகோசி – அங்காரகனை ஈன்றாள்.
இவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக இறைவன் விளங்குவதால் அவரது திருஉருவை பக்தியுடன் மனத்திலே தியானித்து வழிபட்டு அவர் அருளைப் பெற பாடுபடவேண்டும் என்று நந்திகேசுவரர் சனத்குமாரருக்கு அஷ்ட மூர்த்திகளின் மகிமையை எடுத்துக் கூறினார்.

42.பஞ்ச பிரும்ம சொரூபம்
நந்திகேசுவரர் அடுத்து பஞ்சபிரும்ம ஸ்வரூபம் பற்றி விளக்கலானார். முத்தொழில் புரிய அருளும் அம்மையை இடமாகக் கொண்ட உமாபதி பஞ்ச பிரும்ம மாய் தோற்றம் கொண்டு இவ்வையகத்தில் நிறைந்திருக்கின்றார்.
1. ஈசான பிரும்மம் : சகல உயிர்களிலும் ஆன்மாவாக இருந்து கர்மாக்களின் பலன்களை அனுபவிப்பவராக விளங்குவது.
2. தத்புருஷ பிரும்மம் : இச்சை கொள்ளும் வகையில் ஆன்மாவை மறைக்கும் பிரகிருதியாகிய ஈசன் சொரூபம் இது.
3. அகோர பிரும்மம் : புத்தி வடிவிலே தேகத்தில் உறையும் ஈசன் சொரூபம் இது.
4. வாமதேவ பிரும்மம் : அகங்கார வடிவமாக இருப்பது.
5. சத்யோஜாத பிரும்மம் : மனம்.
செவி இந்திரியம் – ஈசன் ; த்வக் தோல் இந்திரியம் – தத்புருஷன்; கண் இந்திரியம் – அகோரன்; நாக்கு இந்திரியம் – வாமதேவன்.
வாக்கு – ஈசானன்; கைகள் – தத்புருஷன்; பாதம் – வாமதேவன்; குய்ய இந்திரியம் – சத்தியோ ஜாதர்.
இவ்வாறு நம் தேகத்திலே ஈசன் பரம்பிரம்ம சொரூபியாக ஞானேந்திரியமாக விளங்கும் பஞ்சபிரும்மமான இறைவன் கர்மேந்திரங்கள் ஐந்திலும் அவ்வாறே திகழ்கிறார். அழியாது உரையும் பரப்பிரம்மம் ஆன்மாவே.
சப்த தன் மாத்திரையை ஈசானர் தோற்றுவிக்க அதிலிருந்து ஆகாயம் உண்டாகிறது.
ஸ்பரிச தன் மாத்திரையை தத்புருஷன் உண்டாக்க, அதிலிருந்து காற்று தோன்றுகிறது. ரூப தன் மாத்திரையை அகோரன் ஏற்படுத்த அதிலிருந்து நெருப்பு உண்டாகும். ரச தன் மாத்திரையை வாமதேவன் படைக்க நீர் உண்டாகியது. சத்தியோஜதன் தந்த தன் மாத்திரையைப், படைத்து அதிலிருந்து ஆழிசூழ் உலகை உண்டாக்கினார். ஆகாய ரூபமாய் விளங்கும் ஈசானனே சர்வ வியாபியான பரமாத்மா ஆகும். ஒளி உருவாகி இனிது விளங்கும் தத்புருஷனே ஜீவாத்மா ஆகும். அழலுருவாகி உறையும் அகோரனை உடம்பாக மறைநூல் வல்லுநர் கொள்வர். கடல்நீர் உருவாகும் வாமதேவனை ஜீவாத்மா என்பர். மண்ணின் வடிவாய் விளங்கும் சத்தியோஜதன் விரிந்து நின்ற எதையும் தன்னருளால் தரித்திடுவார்.
இவ்விதமாக இருபத்தைந்து தத்துவங்களிலும் பஞ்ச பிரும்ம சொரூபியாய் விளங்கும் பரம்பொருளைச் சரணடைந்து தியானித்து பக்தியுடன் மலர்கள் முதலியவற்றைக் கொண்டு அர்ச்சித்து வழிபடவேண்டும்.
1. சதசற்பதி : சத்தாகி, அசத்தாகி அவற்றின் பதியாகி உறைபவன் அவன்.
2. அவியக்தன் : வடிவற்று இருப்பவன். அவனை நன்குணர்ந்த முனிவர்கள் அவியக்தர் எனப்படுவர்.
3. இருபத்து நான்கு தத்துவங்கள் ÷க்ஷத்ரம் என்றும் அவற்றை இருப்பிடமாகக் கொண்டு விளங்கும் ஈசனை ÷க்ஷத்திரக்ஞன் என்றும் கூறுவர்.
அறிவாம் உயர்நித வித்தையாய், பிராநிதியாகும்; அவித்யையாய், உறை செய்கின்ற தாதாவாய், விதாதாவாய் அவற்றைக் கடந்து அழியாத முதல்வனாகி உறைபவன் பரமேச்வரனே அன்றிவேறில்லை. இவ்வாறு ஈசன் பெருமையை நந்திகேசுவரர் சனத்குமாரருக்கு எடுத்துக் கூறினார்.

43.சிவசூரியனைக் கண்ட தேவர்கள்
இறைவன் ÷க்ஷத்ரக்ஞன். அவன் பிரகிருதியுடன் சேர்ந்து காணப்படும் ரூபம் வியக்தம். அதுவே காலம். எனவே பரமன் காலரூபி எனப்படுகிறான். ஆகையால், ÷க்ஷத்ரக்ஞன் புருஷன்; பிரகிருதி பிரதானம். புருஷன் அகிலத்தைப் படைக்கும் போது ஹிரண்யகர்ப்பர் எனப்படுவார். பரிபாலிக்கும் போது தத்புருஷர் ஆவார். அண்ட பேரண்டங்களையே உருவாகக் கொள்ளும்போது விராட்புருஷன் ஆவார். ஞானிகள் உள்ளத்து உறையும் இறைவனை அந்தர்யாமி என்பர். எந்தத் தத்துவத்தையும் கடந்து விளங்கும் போது பரன் என்பர். பரமாத்மாவை பரமான்மா என்றும் குறிப்பிடுவர். ஒளிக்கதிர்கள் சூரியனிடமிருந்து தோன்றுகின்றன. அதேபோல் உலகில் எல்லாம் ஈசனிடமிருந்தே தோன்றுகின்றன. பிரம்மன் சோம யாகம் இயற்றினார். அவ்வமயம் சிவனாரை அனைவரும் ருத்திர ஜபத்தால் உள்ளம் உருகித் துதித்தார்கள். அதனால் மகிழ்ச்சி அடைந்த ஈசன், கோடி சூரியப் பிரகாசத்தோடு தோன்றினார். ஆனால் அவர்களால் பரமனை அறிய முடியாமல், அவரை யார் என்று கேட்டனர். அப்போது ஈசன் நகைத்து தானே அழியாப் பரம்பொருள் என்றும், அனைத்தும் தன் சொரூபம் என்றும் கூறி மறைந்துவிட்டார். தங்கள் துரதிருஷ்டத்தை எண்ணி வருத்தமுற்ற அவர்கள் சிவபெருமானை மனமுருகப் பிரார்த்தித்து வணங்கினர். அப்போது அங்கு ஒரு பேரொளி கோடி சூரிய பிரகாசத்தோடு விளங்க, ஒளி மண்டலத்திலே நான்கு முகங்கள் பன்னிரண்டு கரங்கள் கொண்டு தேவியுடன் காட்சி அளிக்கும் சிவ சூரியனைக் கண்டனர். மேற்குத் திசையில் வெண்ணிற சத்வோஜாத முகம். வடக்கில் சிவந்த வாமதேவன் முகம்; கிழக்கில் பொன்னிற தத்புருஷ முகம் என விளங்கிய ஈசனைக் கண்டனர். மேலும், நான்கு முகங்கள் கொண்ட பாஸ்கரன் வலப் புறத்தில் விளங்க, நான்கு முகங்களும் ஒளிதிகழ் பானு பின்புறம், கதிர் ஒளி வீசும் நான்குமுக ஆதித்தன் இடப்புறம் கொண்டு நெடுங்கதிர் விரிக்கும் நான்கு முகங்கள் கொண்ட ரவியைக் கண்டனர்.
மேலும், கிழக்கில் வித்தாரை என்னும் சக்தி, தெற்கில் சுதாரை, மேற்கில் போதினி, வடக்கில் அப்பியாயினி, பீடத்திலே தீøக்ஷ என்ற சக்தி, மின்னென ஒளிரும் சூக்ஷ்மை என்ற சக்தி, தழல் அனைய முகத்தோடு ஒளிரும் சேவை என்ற சக்தி ஆகியோருடன் சிவசூரியன் அமர்ந்திருக்கும் கோலத்தைக் கண்டனர். மேலும் பவளமேனி வீழுதி, பனி மலர் தாமரைமேனி விமலை, கோங்க மலர் மேனி குவளை விழி அமோகை எனும் சக்தி, தவளநகை வித்துதை சக்தி சூழ்ந்திருக்கக் கண்டனர். பொன் மேனியாள் பத்திரையும், பால்வண்ண மேனியாள் நான்கு முக சர்வதோமுகி மற்றும் கிரகங்கள் சூழ தேவியுடன் ஈசனைக் கண்ட தேவர்கள் அவரைப் பலவாறு துதித்து வணங்கினர். அவரை வேதியர், அரசர், வணிகர் ஆகிய மூவர்ணத்தாரும் பூசை செய்யத் தக்கவரே என்று கூறி சிவசூரியன் மறைந்து விட்டார்.

44.குருவை இழந்த தேவர்கள்
குருவில்லா வித்தை பாழ் என்பது ஒரு முதுமொழி. தேவர்களுக்கு குரு வியாழ பகவான் (அ) பிரகஸ்பதி ஆவார். ஒரு சமயம் தேவகுரு பிரகஸ்பதி இந்திரனைக் காணவந்தார். இந்திராணியிடம் அப்போது பேசிக் கொண்டிருந்த இந்திரன் அவரை வரவேற்று, மரியாதை செய்யவில்லை இதனால் கோபம் கொண்ட அவர் மறைந்துவிட்டார். இச்செய்தி அறிந்த அசுரர்கள் தேவர்களைத் தாக்கிட, இந்திரன் பிரமனைச் சரண் அடைந்து உதவிட வேண்ட, பிரமன் குரு சென்ற காரணத்தைக் கூறி உடனடியாக ஒரு குருவைத் தேவர்கள் முதலில் பெற வேண்டும் என்றார். பிரமனின் ஆலோசனைப்படி இந்திரன் சகல கலைகள் கற்றறிந்த துவஷ்டாவின் குமாரன் விசுவரூபனை வேண்டிட அவனும் தேவர்களுக்குக் குருவானான்.
தேவர்களுக்குக் குருவான விசுவரூபனுக்கு அசுரர் மீதும் அன்பு உண்டு. அவன் ஒரு யாகத்தைத் தொடங்கி தேவர்களுக்குச் சமமாக அசுரர்களுக்கும் அவிப்பாகம் ஒதுக்கினான். அதை வெறுத்து, எதிர்த்தான் இந்திரன். ஆனால், விசுவரூபன் தன்னை கட்டுப்படுத்த முடியாதென்று கூறி விட்டான். இதனால் கடும் கோபம் கொண்ட இந்திரன் விசுவரூபனுடைய மூன்று தலைகளையும் துண்டித்து ஓமகுண்டத்தில் தள்ளினான். இதனால் விசுவரூபனின் தந்தை துவஷ்டா இந்திரனைப் பழி வாங்க ஒரு புருஷனைத் தோற்றுவிக்க அபிசார ஹோமம் செய்தான். அதிலிருந்து தோன்றிய விருத்திராசுரன் இந்திரனை அழிக்க எண்ணி அவன் மீது போர் தொடுக்க இருவருக்கும் கடுமையான போர் நடந்தது. போரில் தோற்று ஓடிய இந்திரன் பிரம்மனுடன் முறையிட அவர் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று கைவிரித்துவிட்டார். எனினும், ததீசி முனிவரின் முதுகெலும்பை எடுத்து ஆயுதமாக்கி வஜ்ஜிரமந்திரத்தால் உருவேற்றி அதைக் கொண்டு விருத்திராசுரனைச் சம்ஹரிப்பாயாக என்றார். இந்திரன் பூலோகம் சென்று ததீசி முனிவர் பாதங்களில் பணிந்து வேண்டிட, அவரும் மகிழ்ந்து தன் உயிரை யோகாக்கினியில் தியாகம் செய்திட, அவர் முதுகு எலும்பை எடுத்து ஆயுதமாக்கி அதனைப் பூசித்து, இறைவனைத் தியானித்து விருத்திராசுரனுடன் போர் செய்து அவனைக் கொன்றான்.
அசுரபயம் நீங்கிய இந்திரன் இறைவன் திருவருளைப் போற்றிக் கொண்டாடினான். பிரகஸ்பதி இருக்கும் இடம் அடைந்து அவரை வணங்கி தன் அபசாரத்தை மன்னித்து முன் போல் குருவாக இருந்து அருள் புரிய வேண்டினான். பிரகஸ்பதியும் கோபம் தணிந்து மறுபடியும் தேவர்கள் குருவானார். சூரியன் வச்சிர மந்திரத்தை ஜபித்து, தினமும் தன் பாதையில் குறுக்கிடும் அரக்கர்களை ஒழித்து பொன்னொளி வீசுகின்றான். வஜ்ஜிர மந்திரத்தைப் பக்தியோடு ஜபிப்பவர் பகை யாவும் ஒழிந்து மகிழ்ச்சியுடன் வாழ்வர்.

45.தானங்கள் மூலம் சிவப்ரீதி
தூய உள்ளத்தோடு சிவனை வழிபட்டு தானம் செய்வோர்க்கு அவர் அருள் கிட்டும். பரமனுக்குப் பிரீதியாக மன்னன் அளிக்கவேண்டிய தானங்கள் பதினாறு ஆகும். விவரம் அறியவும்.
1. இரணிய அசுவ தானம் : நூற்றெட்டு (அ) ஆயிரத்தெட்டு கழஞ்சுப் பொன்னால் அழகிய குதிரை செய்து, அதற்கு வெள்ளியால் முகபடாமும், கால்குளம்புகளுக்குப் பட்டயமும் கட்டி மலர் மாலைகளால் அலங்கரித்து ஒரு மண்டபத்தின் நடுவே உள்ள மேடையில் வைத்து முறைப்படி அர்ச்சித்து பூஜை செய்து, ஒழுக்கமான அந்தணனை வருவித்து ஆசனத்தில் இருத்தி சகல உபசாரங்களும் செய்து பூஜித்து வழிபட்டு வணங்கி பொன் குதிரையுடன் ஐந்து கழஞ்சு பொன் தக்ஷணையும் சேர்த்துத் தர வேண்டும்.
2. இரணிய கர்ப்பதானம் : மண்டபம் அமைத்து அதன் நடுவில் ஆயிரம் கழஞ்சுப் பொன்னாலான கலசத்தை அமைத்து, அதன்மீது ஐநூறு கழஞ்சுப் பொன்னாலான மூடியை அமைக்க வேண்டும். உளுந்தைக் கீழே பரப்பி அதன் மீது கலசத்தை வைத்து, அதனை அரி, அயன், அரன், உமையாகவும், இருபத்து நான்கு தத்துவங்களாலும் நினைத்து, இருபத்தாறாவது தத்துவமாக அதன் மூடியை எண்ணி கலசத்தில் பஞ்சகவ்வியம் விட்டு மூடிவிடவேண்டும்.
பின்னர், ஓமகுண்டத்தில் பஞ்சப் பிரம்ம மந்திரத்தால் ஓமம் செய்து தக்காரைக் கொண்டு விருப்புடன் செய்ய வேண்டும். தன்னை இருபத்தைந்தாம் தத்துவமாய் விளங்கும் புருஷனாய் நினைத்து கலசத்தைத் தொட்டு கிழக்கு நோக்கி அமர்ந்து சிவகாயத்திரியை ஜபிக்க வேண்டும். மறுநாள் காலை புனித நீராடி புரோகிதரைக் கொண்டு அக்கலசத்துக்குக் கர்ப்பாதானம், சீமந்தம் செய்வித்து, அதன் வலப்புறம் அத்திப் பழச்சாறைப் பிழிந்திட வேண்டும். அந்தணர்களுக்கு அறுசுவை உண்டி அளிக்கவேண்டும். முப்பது கழஞ்சுப் பொன்னால் செய்யப்பட்ட பாவையையும், நூறு கழஞ்சுப் பொன்னும் புரோகிதருக்கு அளிக்க வேண்டும். மற்றவர்களுக்குப் பத்துக் கழஞ்சு பொன் தக்ஷிணை அளிக்கவேண்டும்.
3. இரணிய கன்னிகா தானம் : அரசன் ஒரு சிறந்த மறைகுலத்தில் பிறந்த பெண்ணைத் தன் பெண்ணாக பாவித்து, மறைகள் கற்றுத் தேர்ந்த உத்தம வேதியர் குல பிரம்மச்சாரிக்கு கன்னிகாதானம் செய்துவிக்க வேண்டும். பெண்ணுக்கும், பிள்ளைக்குமான துணி, மணி, நகை அனைத்தையும் அளித்து அக்கினி சாட்சியாகத் திருமணம் செய்வித்து, அந்த நூதன தம்பதியர் எக்குறையும் இன்றி மனமொத்து நல்லதோர் புதிய வாழ்க்கை தொடங்கி நடத்த வேண்டிய தேவையான பொருள்களைக் கொடுத்திட வேண்டும்.
4. இரணிய ரிஷபதானம் : ஆயிரம் (அ) நூறு கழஞ்சு பொன்னில் ஒரு ரிஷபம் செய்து, கொம்புகளுக்கு வெள்ளிக் கவசம், வாலில் முத்துக்கள், கழுத்தில் பதுமராகம், உடலில் கோமேதகம் ஆகியவற்றை ஒளி சிந்தப் பதித்து மண்டபத்தின் நடுவில் வைத்துப் பூஜை செய்ய வேண்டும். ஈசனைப் பூஜித்து, ரிஷபத்தைத் தக்ஷிணையோடு மறையவருக்குத் தானம் செய்ய வேண்டும்.
5. கணபதி தானம் : நூறு கழஞ்சு பொன்னாலான கணபதியை அழகாகச் செய்து மண்டபத்தின் நடுவில் பீடத்தில் வைத்து உள்ளம் கனிந்து பூஜை செய்ய வேண்டும், ஈசனையும், அஷ்டதிக் பாலர்களையும் அந்தந்த திக்கிலே அமைத்து வணங்கி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். அடியேன் வல்வினைகளை எல்லாம் தீர்த்தருள்வாய் என்று பிரார்த்திக்க வேண்டும்.
எட்டு குண்டங்களில் ஓமம் செய்து. ஏழு மறையவர்களுக்கு அவர்கள் மனைவியருடன் பூஜை செய்து, ஆபரணங்கள் செய்து திருப்திபடுத்த வேண்டும். கணபதி பிரதிமையைத் தக்ஷிணையுடன் புரோகிதருக்கு தானம் செய்ய வேண்டும்.
6. கற்பக விருக்ஷ தானம் : நூறு கழஞ்சு பொன்னால் ஒரு கற்பக தருவைச் செய்து அதன் கிளைகளில் கோமேதகம், நீலம் போன்ற ஒளி மணிகளைப் புதைக்க வேண்டும். தளிர்கள் பவழத்தாலும், முனைகள் மரகதத்தாலும், மலர்கள் புஷ்பராகத்தாலும், கனிகள் பதுமராகத் தாலும் அழகுற அமைத்து, பட்டாடை களால் அலங்கரித்து மண்டபத்தின் நடுவே பிரதிஷ்டை செய்து ஓமம் வளர்த்து முறைப்படி சிவலிங்கத்தைப் பூசை செய்ய வேண்டும்.
அந்தக் கற்பகத் தருவை சிவப்பிரீதியாக ஆலயத்தில் சேர்ப்பிக்கலாம் அல்லது கற்றறிந்த மறையவருக்குத் தானமாக அளிக்கலாம். தானத்துக்குப் பின் சிவலிங்கத்துக்கு ஆயிரம் குடம் பாலாபிஷேகம் செய்து பிராமண போஜனம் செய்விக்க வேண்டும்.
7. சொர்ண கஜதானம் : ஆயிரம் (அ) ஐநூறு கழஞ்சாலான யானை ஒன்றைச் செய்து மண்டபத்தின் நடுவில் வைத்துப் பூசை செய்ய வேண்டும். பின்னர் உமா மகேச்வரனைப் பூஜை செய்து அந்தச் சொர்ண கஜத்தை ஒரு சிவாலயத்திற்கு அளிக்க வேண்டும். இன்றேல் நான்மறை உணர்ந்த வேதியருக்குத் தானம் கொடுக்கலாம். மீண்டும் இறைவனைப் பூஜித்து மறையவர்களுக்கு சமாராதனை நடத்த வேண்டும்.
8. சொர்ண தேனு தானம் : ஆயிரம், ஐநூறு, இருநூற்றைம்பது, நூற்றுஒன்று என (சக்திக்கேற்றவாறு) உபயோகித்து ஒரு பசு பொன்னால் அமைக்க வேண்டும். கொம்புகளில் பதுமராகம், குளம்புகளில் வைரங்கள், புருவ நடுவில் முத்து, காலில் வைடூரியம், பற்களில் புஷ்பராகம் ஆகியவை அலங்காரமாய் பதித்திடல் வேண்டும். அதன் அளவில் பத்தில் ஒரு பங்கு உடைய கன்று ஒன்றும் செய்து அதனருகில் வைக்க வேண்டும்.
பின்னர் மண்டபத்தின் நடுவில் பீடத்தில் தேனுவையும், கன்றையும் வைத்து ஆடை, அணிகலன்களால் அலங்கரித்து, தூபதீப நைவேத்தியங்களுடன் பூஜை ஓமத்துடன் செய்து இறைவனை வணங்கித் தியானித்து அந்தப் பசு, கன்று இரண்டையும் மறைவழி தவறாது நடக்கும் வேதியருக்கு முப்பது கழஞ்சுப் பொன் தக்ஷிணையுடன் அளிக்க வேண்டும்.
9. சொர்ணபூமி தானம் : அரசு, வில்வம், பலாசு, கருங்காலி எனப்படும் மரங்களில் ஒன்றால் மண்டபம் அமைத்து, ஆயிரம் கழஞ்சுப் பொன்னால் ஒரு சதுரம் ஏற்படுத்தி, அதன் நடுவில் மேரு பர்வதம், ஏழுகடல், ஏழு தீவுகள் உள்ள மலைகளையும், கண்டங்களையும் அமைத்து விதிப்படி பூசை செய்ய வேண்டும். பூஜை முடித்து பூமியின் அளவில் ஏழில் ஒரு பங்கு சொர்ணத்துடன் எள்ளையும் தானமாக புரோகிதருக்கு அளிக்கவேண்டும்.
10. திக்குபாலகர் தானம் : எட்டு குண்டங்களுடன் ஒரு மண்டபம் அமைக்கவேண்டும். வேதியர் எட்டுப் பேரை திக்குபாலகர்களாக நினைத்துப் பூஜை செய்ய வேண்டும். அவர்களுக்கு நடுவே ஈசனை லிங்கத்தில் ஆவாகனம் செய்து பூசை புரிய வேண்டும். திக்குப் பாலகர்களுடைய மந்திரத்தால் ஓமம் விதிப்படி செய்யவேண்டும். ஒவ்வொருவருக்கும் பத்துக் கழஞ்சு பொன்னால் ஆன விமானமும், பத்துக் கழஞ்சு தக்ஷிணையும் கொடுத்து மறையவர்களை கவுரவிக்க வேண்டும். தங்கள் வெவ்வினைகள் நீங்கிட பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும். மறுபடியும் சிவ பூஜை செய்து அந்தணர்களுக்கு அமுது அளிக்க வேண்டும்.
11. திலபத்ம தானம் : இதில் எள்ளும் தாமரையும் இருப்பதால் இந்தத் தானம் இப்பெயர் பெற்றது. தூய இடத்தில் பசுஞ்சாணத்தால் மெழுகி, வெள்ளைப் பட்டை விரித்து அதன் மீது மூன்று கல அளவு எள்ளைக் குவிக்க வேண்டும். அதன் நடுவே மூன்று கழஞ்சு பொன்னால் உமையின் பிரதிமையைச் செய்து பிரதிஷ்டிக்க வேண்டும். பிறகு உமாமகேச்வரரை முறைப்படி பூஜை செய்து அந்தணருக்கு எள்ளுடன் பொற்றாமரையையும், உமையவள் பிரதிமையையும், தக்ஷணையுடன் தானம் செய்யவேண்டும்.
12. திலபர்வத தானம் : திலம் – எள்; பர்வதம் – மலை. எள்ளை மலை போல் குவித்து வைத்துப் பூசைக்குப் பின் தானம் செய்வதால் இதற்கு இப்பெயர் வந்தது. பத்து சாண் அளவு தண்டம் மண்டப நடுவில் ஏற்பாடு செய்து அது முற்றிலும் மறையுமாறும், அதற்கு மேலும், அதற்குக் குறைவாகவும் எள்ளைக் குவித்து, அதன் மீது யந்தரம் வரைந்து, புத்தாடையால் மூடி தும்பைப் பூ வைத்து அதன் மீது ஈசன் பள்ளி கொள்வதாக எண்ணி ருத்திரரைப் பிரதிஷ்டை செய்து பக்தியுடன் பூஜை செய்யவேண்டும். பின்னர் மறையோருக்கும், புரோகிதருக்கும் தக்ஷிணை வழங்கி திலபர்வத தானம் தரவேண்டும்.
13. துலாபுருஷ தானம் : பூஜை, ஜபம் ஆகியவை அனைத்தும் பூர்ணகுதியோடு முடிவு பெற்ற பிறகு வேதியர்கள் மறைகள் கொண்டு ஆசீர்வதிக்க, வாத்தியங்கள் முழங்க, சர்வ அலங்காரங்களுடன் கிழக்கு முகமாக ஒரு தட்டிலே மன்னன் அமரவேண்டும். மற்றொரு தட்டில் மன்னன் எடைக்குப் பொன்னை வைத்து அதனை அந்தணர்களுக்குத் தானமாக வழங்க வேண்டும். புரோகிதருக்கு நூறு கழஞ்சு பொன்னும், மறையவர்களுக்குத் தலா பத்துக் கழஞ்சு பொன்னும் கொடுத்து கவுரவிக்க வேண்டும். சிறைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்.
14. லக்ஷ்மி தானம் : ஆயிரம், ஐநூறு (அ) நூற்றி எட்டு கழஞ்சில் லக்ஷ்மியின் திருஉருவம் செய்து மண்டபத்தில் பீடம் மீது அமர்த்தி முறைப்படி பூசனை புரிய வேண்டும். திருமகளுக்குத் தெற்கில் திருமாலை ஆவாகனம் செய்து இருவரையும். பூஜை செய்ய வேண்டும். பின்னர் அப்பிரதிமையை அன்புடன் கையில் தாங்கி, அதில் இருப்பதில் ஒரு பங்கு பொன் சேர்த்து நான்மறைகள் கற்றுணர்ந்து அறவழி பிழையாது நடக்கும் அந்தணருக்குத் தானம் செய்ய வேண்டும்.
15. பசுக்கள் ஆயிரம் தானம் : ஆயிரம் பசுக்களைக் கன்றுடன் கொண்டு வந்து கொம்பு, முகம், கழுத்துக்கு நூற்றொரு கழஞ்சுப் பொன்னால் அணிகள் செய்து அணிவிக்க வேண்டும். கால்களில் குளம்புகளுக்கு வெள்ளியில் பட்டை கட்டி மாலைகளால் அலங்கரித்து, அவற்றை விதிப்படி பூஜை செய்து பசு ஒன்றுக்குப் பத்துக் கழஞ்சு பொன் தக்ஷிணையோடு ஆயிரம் வேதியர்களுக்குத் தானம் செய்யவேண்டும்.
16. விஷ்ணு பிம்ப தானம் : எல்லாத் தானங்களிலும் உயர்ந்தது இதுவாகும். இதில் ஆயிரம் கழஞ்சு பொன்னால் மாதவன் பிம்பம் செய்து, ஈசனைத் தியானித்து மாதவனை அர்ச்சித்து, ஓமம் செய்து மறைகள் உணர்ந்த மறையோனுக்கு அந்தப் பிம்பத்தைத் தக்ஷிணையுடன் தானம் செய்ய வேண்டும்.
லிங்க புராணம் முற்றிற்று.

Related Articles

  • Linga Purana-1
    Linga Purana-1
    தோற்றுவாய்: சூதர், நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு லிங்க புராணத்தை விவரிக்கலானார். லிங்க வழிபாட்டின் மேன்மையைக் கூறும் இந்த லிங்க புராணம் வியாசர் எழுதிய…