Siva Puranas-Vayusamhithai-Purva Bhagham-3

முனிவர்கள், வாயுதேவனை நோக்கி, தேவரே! சிவபெருமானே சர்வலோக நாயகனாகையால் அந்தப் பகவான் விஷயத்திலேயே எங்கள் திரிகரணங்களும் விநியோகிக்கத்தகும். நாங்கள் மன்னர்களின் கதைகளை கேட்க ஆசைப்படவில்லை. தேவதேவனாகிய சங்கரபகவானுடைய சரிதங்களையே நாங்கள் கேட்க விரும்புகிறோம். ஆகையால் தக்ஷன் மகளாகியத் தாக்ஷõயணி என்ற பெயர் சூடிய சர்வலோக மாதாவாகிய பார்வதிதேவி பர்வதராஜகுமாரியாக அவதரித்த வகையும், தக்ஷப்பிரஜாபதி சிவபெருமானை அகந்தை கொண்டு இகழ்ந்த கதையும் சிவபெருமான் அவனைச் சினந்த விதமும் கூற வேண்டும் என்று கேட்க, வாயுதேவன் மகிழ்ந்து சிறிது நேரம் சிவத்தியானத்திலிருந்து கூறத்துவங்கினான்.
முனிவர்களே! காமதேனு, கற்பகத்தரு, சங்கநிதி, பதுமநிதி சிந்தாமணி முதலிய செல்வத்தையும் கற்பகச் சோலையையும் அரமகளிர் சுகத்தையும் அநுபவித்த இந்திரன் முதலிய இமையவர்கள் அனைவரும் சேர்ந்து, நாம் இது வரையில் சுகத்தை அநுபவித்துப் பலவகையான பாவங்களைச் செய்தோம். ஐயகோ! அவை எப்படிக் கழியும்? என்று ஏங்கி, முனிவர்கள் தவஞ்செய்யும் இமயமலையை அடைந்தார்கள். சிவபெருமானையும் சிவசக்தியையும் தரிசித்தார்கள். அவர்களிடம் வரம் பெற்றுத் தங்கள் தேவநகருக்குச் சென்றார்கள். அந்தச் சமயத்தில் தக்ஷன் தன் குமாரியாகிய சதிதேவியையும் தன் மருகனான சங்கரனையும் காண விரும்பி, இமயமலைக்குத் தேவருடன் வந்திருந்தான். பார்வதிதேவி அங்கு வந்த தேவர், முனிவர் முதலியவர்களுடன் தக்ஷனையும் சமமாகக் கருதிப் பேசினாள். தக்ஷன் தன் அஞ்ஞானத்தால் சதி தேவியைச் சர்வலோக மாதாவென்று உணராமல், தன்னைத் தன் மகள் சிறப்பாக வரவேற்று, மரியாதை செய்யவில்லையே என்று துவேஷங் கொண்டு தன் விதிவசத்தால் தன் மருகனாகிய சர்வேசனையும் தன் மகளாகிய சதிதேவியையும் அவமானஞ் செய்யவேண்டும் என்று கருதி, சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் அவிர்ப்பாகம் கொடுக்காமல் ஒரு யாகஞ்செய்யத் தீர்மானித்துத் தன் நகரடைந்து, அவர்களை அழைக்காமல், பிறபுத்திரிகளையும் மருமகர்களையும் ஓலை அனுப்பித்து அழைத்தான். அதனால் சதிதேவியும் சிவபெருமானும் நீக்கிய சகல தேவர்களும் அங்கு வந்திருந்தார்கள். அதையறிந்த நாரத முனிவர் சிவபெருமானையும் சதிதேவியையும் தரிசித்து நடந்தவற்றைச் சொல்ல, சதிதேவி தானும் அந்த யாகத்தை காணவேண்டும் என்று சிவபெருமானிடஞ் சொல்ல சிவபெருமான், நீ அங்கு போனால் அவமானமடைவாய்! என்று கூறி, மீண்டும் தேவியின் விருப்பத்திற்கு இசைந்து விடை கொடுக்க சதிதேவி எல்லாத் திக்குகளிலும் முகங்களும் திவ்விய சோபானங் களுமுடைய புடமிட்ட பொன்னாற் செய்யப்பட்டதும், இரத்தினங்கள் இழைக்கப் பெற்றதும், முத்து விதானமிட்டு, புஷ்பமாலைகள் தொங்கவிட்டு, நூறு சித்திரப்பதுமைகள் கட்டப்பெற்ற நவரத்தின அசிதமான தூண்களையுடையதும் பவளத் தோரணங்கள் கட்டப்பெற்று, மலர் மெத்தை பரப்பியுள்ளதுமான ஒரு விமானத்தில் சித்திர விசித்திர நவரத்தினங்கள் இழைக்கப்பெற்ற சிங்காசனத்தில் அமர்ந்தாள். அந்த விமானத்திற்கு எருதுக்கொடி கட்டப்பெற்றது. பார்வதிதேவி புறப்படும்போது, பரிவாரப் பெண்கள் புடைசூழ்ந்து அந்த விமானத்தில் மெய்க்காப்பாளராக ஏறிக் கொண்டார்கள். அவர்களில் இருவர் வஜ்ரதண்டம் பொருந்திய சாமரைகளை வீச அவை இரண்டு அன்னங்களையும் அந்தச் சாமரைகளுக்கிடையேயுள்ள தேவியின் திருமுகம் ஒரு தாமரை மலரும் போலிருந்தன. சுமாலினி என்ற கன்னிகை பூரணச் சந்திரன் போன்ற குடையைப் பிடித்தாள்.
சுபாவதி, தேவியுடன் கவறாடினாள். தேவியின் பாதுகைகளை ஒரு கன்னி மார்பிலணைத்து நின்றாள். ஒருத்தி கண்ணாடி காட்டி நின்றாள். ஒருத்தி விசிறினாள். ஒருத்தி தம்பலப் படிக்கமேந்தினாள். ஒருத்தி கிளியைக் கரத்தில் ஏந்தி நின்றாள். ஒருத்தி மலர் மாலைகளையும் ஒருத்தி ஆபரணப் பெட்டகத்தையும் ஏந்தியிருந்தார்கள். இப்படிப் பல மங்கையர், தத்தமக்கு விசித்த பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் சதிதேவி, நட்சத்திரங்களின் இடையே விளங்கும் சந்திரனைப் போலிருந்தாள். பிரயாணத்தை விளக்கத்தக்க பேரிகை சங்கம் வேணுமிருதங்கம் முதலிய கருவிகளும் அநேகவாயிரம் கரஹனங்களும் ஒலிக்க, எண்ணாயிரம் கணநாதர் முழக்கமிட்டு முன்செல்ல, குமாரக்கடவுள் கஜாரூடராக வந்தாற்போல, சோமநந்தி என்ற கணநாயகன் எருது வாகனத்தில் முன் செல்லவும் தேவ துந்துபிகள் முழங்கவும் அப்சரமங்கையர் நடனஞ்செய்யவும், முனிவர்களும் சித்தர்களும் யோகீஸ்வரர்களும் மகிழ, மேகங்கள் மலர்மாரி பொழிய, விமானம் புறப்பட்டது. சதிதேவி, தன் தந்தையின் யாகசாலையை அடைந்தாள். அவளது வருகையைக் கண்ட தக்ஷன், சிறிதும் மரியாதை செய்யாமலும் உபசார வார்த்தைகள் சொல்லாமலும் தன் அழிவு காலத்தால் மிகவும் கோபங்கொண்டு, சதிதேவியைவிடத் தாழ்ந்த பிற புத்திரிகளை விசேஷமாகப் போற்றிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட சதிதேவி பெருங்கோபங் கொண்டு, தேவர்கள், நடுவில் வேதவல்லியுடனிருந்த தன் தந்தை தக்ஷனை நோக்கி, பிரமன் முதல் பைசாசம் ஈறாகவுள்ள உலகத்துக்கு நாயகனாகிய சங்கர பகவானைப் பூஜை செய்ய மறந்தாயே ஏன்? அதிருக்கட்டும், உன் புதல்விகளில் மூத்தவளாகிய என்னைப் பிற புத்திரிகளுடன் சமானமாக கருதி மதிக்காமல் என் கணவனைப் போல என்னையும் அவமதித்த காரணம் என்ன? சொல்வாய்! என்று கேட்டாள். அதற்குத் தக்ஷன் கோபத்துடன், ஓ சதி! உனக்கு இளையவர்களாகிய என் குமாரத்திகள் யாவரும் குணத்திலே சிறந்தவர்கள். உன் கணவனாகிய திரியம்பகனைவிட என் மருமகர்கள் யாவரும் சிறந்த அறிஞர்களாகவும் பலவான்களாகவும் இருக்கிறார்கள். ஆகையால் உங்கள் இருவரையும் போலின்றி அவர்கள் யாவரும் என்னால் போற்றுதலுக்கு உரியவர்களே! உன் கணவனோ பித்துபிடித்து, மயானத்தில் பேய் பிசாசுகளுடன் அக்கினி கூத்தாடுகிறவன். உத்தமலக்ஷணம் சிறிதும் இல்லாதவன், எலும்பு மாலையும் கபால மாலையும் அணிந்தவன். அவன் எனக்குப் பகைவன். ஆகையால், அவனும் அவனுக்கு மனைவியாகிய நீயும் இந்த யாகத்திற்கு வருவதற்குரிய யோக்கியதையற்றவர்கள் என்றான். அதைக் கேட்ட சதிதேவி கோபங்கொண்டு, தக்ஷனை நோக்கி யாகசாலையிலிருந்த அனைவரும் கேட்க, கொடியவனே! சிவபெருமனை நிந்தித்த நீ குருத்துரோகியாகையால், மஹாபாவி! உலக நாயகனாகிய மகேசனுடைய கோபத்திற்கு இரையாவாய்! விரைவில் நீ தண்டிக்கப்படுவாய்! என்று சபித்து தன் தக்ஷ சம்பந்தமான உடலை மாயா சம்பந்தமாக ஒழித்தாள்.
நெடுங்காலமாகப் பார்வதிதேவியை மகளாகப் பெற வேண்டும் என்ற கருத்துடன் ஹிமாசல மன்னன் பெருந்தவஞ் செய்து கொண்டிருந்தான். ஆகையால் சதிதேவி தன் மாயா உடலுள் அவனை அடைந்து, அவனுக்கு மகளானாள்.
முனிவர்களே! சதிதேவி தக்ஷனை வெகுண்டு பிரிந்தவுடனேயே மந்திரங்கள் யாவும் மறைந்தன. யாகமும் நிறைவேறாது என்று உணர்ந்த தேவர்களும் முனிவர்களும் நடுங்கினார்கள். இந்தச் செய்தியை சிவபெருமான் உணர்ந்து, அத்தகைய யாகத்தைச் செய்த தக்ஷன்மீது சினங்கொண்டு தக்ஷõ! நீ என்னையும் என் மனைவியையும் அவமதித்துப் பிற புத்திரிகளையும் மருகர்களையும் போற்றினாயாகையால், நீ மானுடனாகப் பிறக்கக் கடவாய்! அப்போது நீ யாகஞ்செய்ய எத்தனிப்பாய். அந்த யாகத்தையும் யாமே அழிப்போம். உன்னால் போற்றப் பெற்ற மருகர்கள் வைவஸ்வத மனுவந்தரத்தில் மானுடராவார்கள். உன் காரியங்கள் யாவும் விக்கினம் அடைக! என்றும் சபித்து, அவ்வாறே அவர்கள் தோன்றிய காலத்தில் சிவபெருமான் அவர்களை அழித்தார்.

17.வீரபத்திர அவதாரம்
முனிவர்களே! சகல லோக மாதாவாகிய உமாதேவியைக் குறித்து நெடுங்காலம் தவஞ்செய்து புத்திரியாகப் பெறக்கருதிய மலை மன்னன் மனங்களிக்கும்படி, அவ்விறைவியே புதல்வியாகி அவனிடம் வளர்ந்து வந்தாள். சிவபெருமான் அந்தப் பர்வதராஜன் மகளான பார்வதியை மணந்து இமயமலைச் சிகரத்தில் நெடுங்காலம் தேவியுடன் கூடி வாழ்ந்திருந்தார். அநேக யுகங்கள் கழிந்தன. தக்ஷன் சிவபெருமானின் சாபப்படி பிரசேதசு என்பவனுக்கு புத்திரனாகி, மோக்ஷ விருப்பத்தால் அஸ்வமேதயாகஞ் செய்ய விரும்பி, இமயமலையில் முனிவர்களும் சித்தர்களும் நிரம்பிய கங்காத்துவாரம் என்ற இடத்தில் யாகாரம்பம் செய்தான். அந்த யாகத்தில் இந்திரன் முதலிய தேவர்களும் ஆதித்தர்களும் வசுக்களும் உருத்திரர்களும் மருத்துக்களும் பிதுர்க்களும் ஆத்தியர்களும் தூமபர்களும் அஸ்வினி தேவர்களும் பல முனிவர்களும் விஷ்ணு மூர்த்தியும் தத்தமது யாக பாகத்தை ஏற்க வந்தார்கள். எண்ணற்ற முனிவர்களுடன் வந்த ததீசி முனிவர், அங்கிருந்த தேவர்களையெல்லாங்கண்டு, சிவபெருமானைக் காணாததால் கோபங்கொண்டு தக்ஷனை நோக்கி தக்ஷõ! பூஜிக்கத்தகாதவர்களைப் பூஜித்ததாலும் பூஜிக்கத் தக்கவர்களைப் பூஜிக்காமல் விட்டதாலும் மனிதன் பெரும்பாவத்தைச் சந்தேகமில்லாமல் அடைவான். அசத்துக்களுடைய ஆதரணையைக் கொண்டு சத்துக்களை அவமதித்தால் சர்வேசன் அப்போதே தண்டிப்பான். சர்வலோக நாயகனாகிய சங்கரனை நீ ஏன் பூஜிக்கவில்லை! என்று கேட்டார். தக்ஷன் அந்த முனிவரை நோக்கி, முனிவனே! எருது மீது சவாரி செய்து ஜடைமுடி தரித்த, சூலமேந்திய பதினொரு ருத்திரர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். இவர்களையன்றி வேறு ஒரு சூத்திரனும் இருக்கிறானோ? என்று கேட்டான். ததீசி முனிவர் கோபங்கொண்டு அடா தக்ஷõ! நீ யாது கூறினை? இந்த யாகத்தே கர்த்தாவாகிய முதல்வனை விடுத்து, பின்னவர்களாகிய பிரம விஷ்ணு முதலியவர்களுக்குப் பூஜை செய்து யாது பயன்? பிரமன் முதலியவர்களைப் படைத்தவனும் பிரகிருதி புருஷர்களுக்குத் தலைவனும் திருமால் முதலிய தேவர்களையெல்லாம் ஏவலாளர்களாகக் கொண்டவனும் தத்துவ ஞானிகளால் உணரத்தக்கவனும் அழிவற்றவனும் அக்ஷர சொரூபனும் பரம் பொருளும் சிருஷ்டியாதித் தொழில்களை நடத்துவோனும் ஆதிமத்தியாந்த ரஹிதனும் மனம், வாக்கு, காயங்களுக்கு எட்டாதவனும், அநாதி புருஷனும், மும்மூர்த்தி சொரூபனுமாகிய சர்வேஸ்வரனே இந்த யாகத்தில் பூஜிக்கத் தக்கவன்.
அந்தப் பகவானையே பூஜிக்க வேண்டும்; அந்தச் சர்வேசன் வராத யாகம் உனக்கு பயனளிக்கமாட்டாது! என்று கூறினார். அதைக் கேட்ட தக்ஷன் முனி சிரேஷ்டரே ! இந்த யாகத்திற்குப் பிரபுவும் சமானரஹிதனுமாகிய விஷ்ணு பகவானுக்குச் சாஸ்திர விதிப்படிப் புனிதமாகிய அவிசைச் சுவர்ண பாத்திரத்தில் மந்திர பூர்வமாகக் கொடுக்கப்போகிறேன் என்று சொன்னான். ததீசி முனிவர், முன்னிலும் அதிக கோபங்கொண்டு, தக்ஷõ! சர்வேசனை ஆராதிக்காத இந்த யாகம் யாகம் ஆகமாட்டாது. இது விரைவில் அழிந்து போகக் கடவது! என்று கூறிச் சிவத்தியானத்துடன் தம் ஆசிரமத்தை அடைந்தார். மஹா புத்திசாலியாகிய ததீசி முனிவர் நிரீசுவர யாகத்தைக் காணக்கூடாது என்று சென்றதைப் பார்த்தும், அங்கிருந்த தேவர்கள் யாக அவிசை உண்ணக் கருதியதாலும், தமக்கு நேரிடும் துன்பத்தை அநுபவிக்க வேண்டிய விதிவசத்தாலும் அங்கிருந்து நீங்காமல் இருந்தார்கள். இந்த விவரங்களை உணர்ந்த சர்வேஸ்வரியான உமாதேவி, தன் கணவனாகிய சங்கர பகவானைப் பணிந்து, நம்மை இகழ்ந்து செய்யும் தக்ஷனுடைய யாகத்தை அழிக்க வேண்டும் என்று கூற சிவபெருமானும் தேவியினுடைய வேண்டு கோளுக்கிரங்கி, மகாபராக்கிரமசாலியும் கணங்களுக்கெல்லாம் தலைவனும் ஆயிரம் தலைகளும் ஆயிரங்கணங்களும் ஆயிரங்கரங்களுமுடையவனும் சூலம், டங்கம், வேல், வாள், வில், சக்கரம், வஜ்ஜிரம் முதலிய ஆயுதங்களை ஏந்தியவனும், சந்திரனைச் சிரத்தில் அணிந்து மின்னல்போல விளங்கும், தலைமயிரும் வக்கிர தந்தங்களும் பெருவாயும் சிவந்த நாவும் தொங்கிய உதடுகளும் சமுத்திர கோஷம் போன்ற த்வனியும், புலிதோலுடையும், பிரம விஷ்ணுக்களின் கபாலமாலையை அணிந்தவனும் வீரக்கழல் வாகுவளையம், இரத்தினாபரணங்களும் சரபசார்த்து சிங்கங்களைப் போன்ற பராக்கிரமமும் மதயானை போன்ற நடையும் சங்க சாமரம் போன்ற வெள்ளிய தேகமும், இமாசலம் நடந்து வந்தாற்போன்று முத்து மாலைகளசைய நடந்து வருகையுமுடைய பிரளய காலாக்கினி போன்ற வீரபத்திரனைப் படைத்தார். அந்த வீரபத்திரர், சிவபெருமானைச் சாஷ்டாங்கமாகப் பணிந்து அவர் சன்னதியில் இருந்தார். அப்போது உமாதேவியும் தன் கோபத்தால் ஆயிரம் சிரங்களும் கரங்களும் கரிய மேனியுமுடைய காளியைச் சிருஷ்டித்தாள். சிவபெருமானும் பார்வதிதேவியும் வீரபத்திரரை நோக்கி, உனக்கு மங்களம் உண்டாகுக! என்று வாழ்த்தினார்.
அப்போது வீரபத்திரர் சிவபெருமானை வணங்கி, எனக்கு என்ன கட்டளை? என்று கேட்க சிவபிரான், வீரா! பிரசேதச புத்திரனான தக்ஷன் கங்காத் துவாரத்தில் யாகஞ் செய்கிறான். நீ இந்தக் காளியுடன் சென்று அந்த யாகத்தை அழிப்பாயாக! நான் பார்வதிதேவியுடன் ரைப்பிய முனிவரின் ஆசிரமத்திலிருந்து பார்த்திருக்கிறேன்! என்று கட்டளையிட்டார். பார்வதிதேவி வீரபத்திரனையும் காளியையும் அணைத்து மூர்த்தர்க்ரஹணஞ் செய்து புன்னகையுடன், குழந்தாய்! வீரபத்திரா! எனக்குப் பிரியமுண்டாக்க, நீ பிறந்தாய். ஆகையால் நீ என் கோபத்தை ஒழிக்க வேண்டும். அது என்னவென்றால், நீ காளியுடன் சென்று, சிவபெருமானைப் பூஜிக்காமல் தக்ஷன் செய்துவரும் யாகத்தை அழித்துத் தக்ஷனையும் அங்குள்ளவர்களையும் கொன்றுவிட்டு வரவேண்டும் என்று கூறினாள். வீரபத்திரர் அவ்விரு முதுகுரவர் சொல்லையும் சிரமேற்கொண்டு காளியுடன் புறப்படும் போது, தனக்குத் துணைவரைப் படைக்க வேண்டும் என்று கருதி, தன் கோபத்தால் தன் உரோமங்களிலிருந்து உரோமஜர்கள் என்ற கணங்களையும் வலது புயத்திலிருந்து நூறு கோடி கணங்களையும் இடது புறத்திலிருந்து மனைவியருடன் கூடிய அநேகம் புத்திர கண்களையும் பாதத்திலிருந்து கடுங்கோபமுடைய அநேக ருத்திரர்களையும் தொடை, பிருஷ்டம், பக்கம், முகம். குய்யம் முதலிய அவயவங்களிலிருந்து எண்ணற்ற கணங்களையும் சிருஷ்டித்தான். அவர்கள் அனைவரும் தன்னைப் போலவே கண்கள், கரங்கள், சிரம் முதலியன ஆயிரங்களாகவுடையவர்களும் அநேக சூலம், வாள், கவு, வேல் முதலிய ஆயுதங்களை ஏந்தியவர்களாகவும் ருத்திரனைப் போன்ற தோள் வலிமையுடையவர்களாகவும் விளங்கினர். அவர்கள் கூத்தாடிக் கொக்கரித்துக் கொண்டிருந்தனர். வீரபத்திரர் அவர்களை உடன் கொண்டு ரிடபவாகனமேறி காளியுடன் புறப்பட்டார். ஆயிரம் வாய்களையுடைய பானகம்பன் தன் ஆயிரம் வாய்களிலும் சங்குகளை முழக்கினான். துந்துபிகள் முழங்கின. பத்திர கணங்களுடனும் காளியுடனும் விளங்கிய வீரபத்திரன் உருத்திர கணங்களிடையே விளங்கும். உமாதேவியுடன் விளங்கும் சிவபெருமானை ஒத்திருந்தான். அந்த க்ஷணமே, அவன் தக்ஷன் யாகஞ்செய்யும் இடம்நோக்கி பிரளய காலத்தில் பிரளய கால ருத்திரன் புனங்களை நோக்கி செல்வதுபோலச் சென்றான்.

18.தக்ஷயாகத்தை அடைந்தது
வாயுதேவன் மேலும் தொடர்ந்தான். முனிவர்களே! விஷ்ணு முதலிய மகிமாதி சுபங்களையுடைய தேவர் கூட்டத்தையும் சித்திரத் துவஜங்கள் கட்டித் தர்ப்ப ஆசனங்கள் விரித்து நல்ல சமிதைகளையடைந்து, மூவகை அக்கினிகளுடன் விளங்கும் யாகசாலையையும் விதி விலக்குகளையறிந்த முனிவர்களும், வேதபாகங்களை அறிந்த அத்வாயு முதலிய பெரியோர்களும், அநேக ஆயிரம் தேவமங்கையரும் அப்சர மங்கையரும் வேணு வீணா கானங்களும் வேத கோஷங்களுமாகியவற்றையுங் கண்டு வீரபத்திரன், சிங்க நாதம் செய்தான். அதைக் கேட்டதும் கணநாதர்கள் ஆகாயம் நிறையப் பெருங் கூச்சலிட்டார்கள். அந்த யாகசாலையிலிருந்த தேவர்கள், முனிவர்கள் ஆகியோரில் பலர் பயமடைந்து தங்கள் தண்டம், கமண்டலம், வஸ்திரம் முதலியவற்றை விட்டு விட்டு ஓடினார்கள். வீரபத்திரரின் வீரமுழக்கத்தால் மலைகள் பிளந்தன! பூமி நடுங்கியது. கடல் கலங்கியது. சூரியனும் கிரகங்களும் நக்ஷத்திரங்களும் அக்கினியும் தத்தமது ஒளியிழந்து மழுங்கின. அந்த நிலையில் வீரபத்திரர் காளியுடனும், தன் சைன்னியங்களுடனும், தக்ஷனுடைய யாகசாலையில் புகுந்தார். தக்ஷன், வீரபத்திரரைக் கண்டு மிகவும் பயந்த போதிலும் மேலுக்குப் பயத்தைக் காட்டாமல் தைரியசாலியைப் போல, நீ யார்? இங்கு ஏன் வந்தாய்? என்று கேட்டான். வீரபத்திரர் துஷ்டனாகிய தக்ஷனைப் பார்த்துச் சிரித்து, தக்ஷனையும் அங்குள்ளவர்களையும் நோக்கி கம்பீரமான தொனியுடன், நாங்கள் மகா மகிமையுடைய சிவபெருமானின் புதல்வர்கள். உன் யாகத்தில் எங்களுக்குச் சேரவேண்டிய பாகத்தைக் கொடுத்துவிடு. ஆனால் இந்த யாகத்தில் எங்களுக்குப் பாகமில்லை என்று சொல்லுவார் களானால் அப்படிச் சொல்லுவார் என்னுடன் போர் புரிய வேண்டும். அல்லது சரியான காரணத்தையாவது சொல்ல வேண்டும்! என்று கூறினார். அப்போது தக்ஷனை முதலாக வைத்து தேவர்கள் வீரபத்திரரை நோக்கி வீரா! உனக்கும் உன் தலைவனான சங்கரனுக்கும் அவிகொடுக்கும்படி ஆதியாகிய வேதங்கள் கூறுமாயின் அவ்வாறே கொடுப்போம்! என்று சொன்னார்கள். அப்போது அங்கிருந்து வேதங்கள் ஐயகோ! இப்படியுஞ் சொல்வதுண்டா! இது அடாது. நாங்களும் இங்கிருக்க மாட்டோம்! என்றும் வேதங்கள் நான்கும் விரைந்து பிரம்மலோகத்தை அடைந்தன.
வேதங்கள் அவ்வாறு மறைந்த பிறகு வீரபத்திரர் தம் கோபாக்கினியால் யாகசாலையில் தீப்பற்றும்படி தீவிழியால் எரி மூட்டினார். அவருடன் இருந்த கணநாதர்கள், தேவர்களைத் தொடர்ந்து அங்கு அமைந்திருந்த யூபஸ்தம்பங்களில் தேவர்களை உடல் பதைக்கக் கட்டினார்கள். வேதிகைகளை இடித்தார்கள். கும்பங்களை உடைத்துப் பொடி செய்தார்கள். சிலர் யாகப் பசுவைத் தீக்கடைக்கோலால் பாசனம் செய்து கங்காசலத்தைப் பருகினார்கள். அன்னக் குவியல்களையெல்லாம் புசித்தார்கள். நெய்யும் பாலும் தயிரும் சமைத்தனவும் சமைக்காதனவுமாகிய பதார்த்த வகைகள் தானிய வகைகள் முதலியவற்றையெல்லாம் சாப்பிட்டார்கள். தேவர்களே! யாகப்பசுவின் தசையைப் புசிக்க விரும்பினீர்களே, அது சுவையுடையதோ! இது சுவையுடையதோ சுவை பார்த்துச் சொல்லுங்கள்! என்று அவர்களில் ஒருவர் தோட்சதையை அரிந்து ஒருவர் வாயில் திணித்துச் சிரித்தார்கள். அண்டங்குலுங்க கை கொட்டினார்கள். அவியுண்ண வந்தவர்களே என்று சிலர் வாயில் தீக் கொள்ளியைச் செருகி சிரித்தார்கள். இதனிடையில் காளியோ தேவமாதர்களுடைய தோளையும் கூந்தலையும் மூக்கையும் மூளையையும் காதுகளையும் வாளால் அரிந்து, காலால் உதைத்துத் தள்ளினாள். அவ்வாறு வருந்தும் அமரமங்கையர் தங்கள் கணவருக்குச் சம்பவித்த துன்பத்தை உணராதவர்களாய் விரைந்து வந்து தங்கள் துன்பத்தை விலக்கும்படிக் கூவியழைத்தார்கள். நிலத்தில் விழுந்து புரண்டார்கள் அழுதார்கள். இப்படியாகத் தக்ஷ யாகத்திற்கு வந்திருந்த தேவமாதர்களில் காளிகா தேவியால் தண்டிக்கப்படாதவர் ஒருவருமிலர். தேவர்களில், பத்திர கணங்களால் துன்புறாதவர் ஒருவருமிலர்.

19.தக்ஷ யாகத்தை அழித்தது
முனிவர்களே! அந்தச் சமயத்தில் வீரபத்திரக் கடவுள், பெருங்கோபத்துடன் சூலம், வேல், வாள், தண்டம், சக்கரம் முதலிய ஆயுதங்களை ஏந்தி கடலைக்கலக்கிய மந்திரகிரியைப் போல தேவர்களைக் கலக்கினார். ஐராவதத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனைத் தண்டாயுதத்தால் அடித்து, அவனது ஆயிரம் கண்களையும் வீழ்த்தி அக்கினிதேவனின் கைகளையும் நாவையும் துண்டித்து, நிலத்தில் வீழ்த்தி சமுத்திரத்திலுள்ள வடவைத்தீயைக் குளிரச்செய்து, இயமனைப் பிடித்து அவனை உள்ளங்கையால் பிழிந்து, உயிர் பருகி திசையின் மேல் எறிந்து, நிருதியின் தோலையறுத்து, வருணனின் உந்தியைத் தோண்டி, அவன் குடலைக் கூளிகள் மாலையாக அணிந்து கூத்தாடச் செய்து, வாயுவைக் கடலில் வீழ்த்தி, அவன் சேனையை வாளுக்கிரையாக்கி, குபேரனைக் கச்சாங்கட்டி குறவன் கையில் அகப்பட்ட குரங்கு போலாட்டினார்கள். உமாதேவி பாகனே பரம்பொருள் என்று கூறும் எண்ணிறந்த நூல்களை வாசித்து உணர்ந்தும் சிவபக்தியில்லாமல் விஷ்ணுவையே பொருள் என மதித்தபுல்லறிவாளர்களே என்று, தேவர்களை ஒருவரோடொருவர் குழையும்படி பூஷா என்னும் பானுவின் பற்களை உதிர்த்த, பகவானுடைய கண்களை அகழ்ந்து, சந்திரனைக் காலடியில் போட்டு மிதித்து அவனுடலில் இருந்த அமிர்த கிரணங்கள் ஒழுகியோடச் செய்தார்கள். தக்ஷன் மனைவி வேதவல்லி தலைவிரித்து வயிற்றில் அடித்துக் கொண்டு அலறினாள். பேய்களும் பூதங்களும் அரம்பை முதலிய மங்கையரை முத்தமிட்டும் தனங்களை வருடியும் அணைத்தும் புணர்ந்தும் காமவெறி தீர்த்தன. இதைக் காணச் சகியாத யக்ஞன் கலையுருவத்தோடு ஓட முயலும்போது, வீரபத்திரர் வில்லை வளைத்து அம்பெய்து அதன் தலையைக் கொய்தார். தக்ஷனின் புத்திரிகள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்.
இந்தச் செயல்களையெல்லாம் கண்டு மனம் பொறாத விஷ்ணுமூர்த்தி கருடவாகனத்தில் அமர்ந்து, இறவாமலிருந்த இந்திரன் முதலியவர்களைத் துணையாகக் கொண்டு போர் செய்ய வந்தார். அப்போது ஆயிரஞ் சூரியனுக்குச் சமமான காந்தியும் உத்தம லக்ஷணம் கொண்ட குதிரைகளும் அநேக அஸ்திர சஸ்திரங்களும் அமைந்த தேர் ஒன்று ஆகாயத்திலிருந்து இறங்க பிரமன் சாரதியாக வந்து அதை வீரபத்திரர் முன்பு நிறுத்தி வணங்கி, இது சிவபெருமானால் அனுப்பப்பட்டது. இந்த இடத்திற்கு அண்மையிலுள்ள ரைப்பிய முனிவருடைய ஆசிரமத்தில் பார்வதி பரமேஸ்வரர், உமது பராக்கிரமத்தை பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொல்லச் சொன்னார் என்று விஞ்ஞாபனம் செய்தார். வீரபத்திரர் அந்தத் தேரில் ஏறி அமர்ந்தார். அதை விஷ்ணு மூர்த்தியும் கண்டார். பாணிகம்பன் சங்கு முழங்கினான். அந்தச் சங்கநாதத்தைக் கேட்ட தேவர்களும் முனிவர்களுக்கும் பயத்தால் குடர்கள் குழம்பின. உடல் நடுங்கின. யக்ஷ வித்தியாதர பன்னக சித்தர்கள் யுத்தஞ் செய்ய விருப்பமில்லாமல் அச்சங்க முழக்கத்திற்கு ஆற்றாதவர்களாய் அகன்றார்கள். வீரபத்திரருடைய தேரைப் பிரமதேவன் விஷ்ணுமூர்த்திக்கு எதிரே கொண்டு நிறுத்தினான். வீரபத்திரர் விஷ்ணுவைக் கண்டு சிங்கமானது நரியைப் பார்த்து அலட்சியமாக நகைப்பதுபோல நீயா இனிப்போர் செய்பவன்? என்று நகைத்தார். அதைக்கேட்ட விஷ்ணு கோபங்கொண்டு சாரங்கமாகிய தம் வில்லைவளைத்து எண்ணற்ற அக்கினிக்கணைகளை விடுத்தார். அம்புகளை எய்த விஷ்ணு மேல் மிகவும் கோபங்கொண்ட வீரபத்திரர், சிவபெருமான் திரிபுர தகனகாலத்தில் ஏந்திய மேருமலையைப் போன்ற வலியவில்லை எடுத்து, வளைந்து நாணேற்றி டங்காரம் செய்து, விஷ்ணுவின் லலாடத்தில் விஷ சர்ப்பம் போன்ற பற்பல பாணங்களைப் பிரயோகித்தார்.
விஷ்ணு மிகவும் கோபங்கொண்டு, இதற்குச் சமமான ஒரு பாணத்தை வீரபத்திரரின் தோள்மீது எய்ய வீரபத்திரர் கோடி சூரியர்களுக்குச் சமமான தீக்ஷண்யமுடைய பாணத்தால் விஷ்ணுவின் தோளிலடித்தார். இவ்வாறு ஒருவரையொருவர் வெல்லவேண்டும் என்று கருதி கடும்போர் செய்தார்கள். அப்போது வீரபத்திரர் ஒரு கணையை விஷ்ணுவின் மார்பில் கடினமாகச் செலுத்தினார். விஷ்ணு பிரஞ்ஞை தவறிப் பூமியில் விழுந்தார். சிறிது நேரத்திற் கெல்லாம் மூர்ச்சை தெளிந்த விஷ்ணு, கருட வாஹனத்தின் மேல் ஆரோகணித்து, தன் பெயர் எழுதிய எண்ணற்ற பாணங்களை படபடவென்று பொழிந்தார். வீரபத்திரரும் தம் பெயர் தீட்டிய பாணங்களை பலவற்றைச் செலுத்தி, அவை ஒவ்வொன்றையும் துண்டித்தார். பிறகு ஒரு கணையை எய்து விஷ்ணுவின் கரத்தில் இருந்த சாரங்கத்தையும் அவரது வாகனமாகிய கருடனின் சிறகுகளையும் வெட்டியெறிந்தார். மஹாவிஷ்ணு தம் மாயாசக்தியால் தேவர்கள் பலரைச் சிருஷ்டித்து, சங்கு சக்கர கதாதரர்களாய் வீரபத்திரர் மீது போர் செய்ய அனுப்பினார். அதைக் கண்ட வீரபத்திரர் முன்பு சிவபெருமான் தமது தீவிழியால் திரிபுரங்களை கணநேரத்தில் சாம்பலாக்கியது போல, அந்த மாயா விஷ்ணுக்களை தம் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். அதைக் கண்ட விஷ்ணு மிகவும் கோபங்கொண்டு இனி எவ்வகையிலாவது வீரபத்திரரை ஜெயிக்க வேண்டும் என்று விஷம் சிந்தும் சக்கராயுதம் ஒன்றை ஏந்தி, வீரபத்திரருக்கு முன்னால் வந்தார். வீரபத்திரர் இடியேறு போலக்கர்ஜனை செய்தார். அதைக் கேட்டதுமே விஷ்ணு சைத்திரீகன் எழுதிய சித்திரப் பதுமை அசையாது நிற்பதுபோல தூக்கியகரத்துடன் ஸ்தம்பித்து நின்றார். அவ்வாறு நிற்கும்போது அவர் என்ன செய்யக் கருதியும், கொம்பில்லாத எருதைப் போலவும் பல்லில்லாத பாம்பைப் போலவும் நகமிழந்த புலியைப் போலவும் எதையுஞ் செய்ய முடியாதவராக நின்றார்.
அதைக் கண்ட இந்திராதி தேவர்கள் விஷ்ணுவுக்குப் பதிலாக வீரபத்திரரை எதிர்க்க முன்வந்தனர். அவர்கள் யாவரும் வீரபத்திரரின் கர்ஜனையில் அங்கேயே அசைவற்று நின்று விஷ்ணுவுக்கு வந்த கதியை இன்னதென்று தெரிந்து கொண்டார்கள். சிலர் புற முதுகுகாட்டி ஓடினார்கள். சிலர் விண்ணிலும், சிலர் கடலிலும், சிலர் மலைக்குகைகளிலும், சிலர் தேவலோகத்திலும் ஓடி ஒளிந்து கொண்டார்கள். வீரபத்திரர் செய்த வீரப்பெரும் போரினால் பூமி நடுங்கியது. கடல் கலங்கியது, இரத்த வெள்ளம் யாகசாலை முழுவதும் அழித்து, கடலிற்சென்று கலந்தது. நடந்த யாகமோ அஸ்வமேத யாகம்! அதை நடத்தியவனோ பிரம புத்திரனான தக்ஷப்பிரஜாபதி, சபையோர்களோ தர்மாதிகள், அந்த யாக ரக்ஷகனோ கருடத்துவஜனான நாராயணன். பாகங்களைப் பெறுவதற்கு நேரில் வந்தவர்களோ இந்திராதி தேவர்கள். இப்படியெல்லாம் இருந்தும் யஜமானனுக்கும் யாகத்துக்கும் அதை நடத்திய ருத்விக்குகளுக்கும் அந்த க்ஷணமே சிரச்சேதனமான பயனுண்டாயிற்று. ஆகையால் வேதத்தில் விலக்கப்பட்டதும், சொல்லப்படாததும் சிவபெருமானுக்கு அவிர்ப்பாகம் கொடாததும் அசத்துக்களால் நல்லது என்று சொல்லப்பட்டதையும் ஒருவரும் ஒருக்காலத்தையும் செய்யக்கூடாது. அவ்வாறு அநேக யாகங்களைச் செய்தாலும் செய்பவன் சிறிது புண்ணியத்தையும் பெறாமல் பெரும் பாவத்தையே அடைவான். பெரும் பாவியேயாயினும் சிவபெருமானைக் குறித்து யாகஞ் செய்தால், அப்பாவங்கள் நீங்கிப் புண்ணியனாவான். புண்ணியவானாயினும் சிவபெருமானைத் தவிர்த்து யாகத்தைச் செய்தவன் ஒரு காலத்திலும் கடைத்தேறமாட்டான். இந்த விஷயத்தில் சந்தேகமே வேண்டாம். ஈஸ்வர பக்தியில்லாதவன் செய்யும் தானம், தவம், ஹோமம் ஆகிய யாவுமே பயனளிக்காது முனிவர்களே, கேட்டீர்களா ஈஸ்வர பக்தியில்லாத நாராயணனும் தக்ஷனும் இந்திரனும் சந்திரனும் வீரபத்திரரால் என்ன கதியை அடைந்தார்கள்?

20.தேவர்களுக்கு அருள் செய்தல்
முனிவர்களே! அந்தச் சமயத்தில் சகல தேவர்கள் மீதும் தங்கள் அதிகாரத்தைச் செலுத்திக் கொண்டிருந்த வீரபத்திரர், தமக்கு அருகேயிருந்த பத்திரகணங்களை நோக்கி, கணநாதர்களே! இங்குள்ள தேவ முனிவர் முதலியவர்களை விலங்கிடுவீர்கள் என்று கட்டளையிட்டார். இந்திரன் முதலிய தேவர்களும் கண்ணில்லாத முனிவர்களும் விலங்கிடப்பட்டனர். மறுத்தவர்கள் வதைக்கப்பட்டனர். நடந்தவற்றை யெல்லாம் கவனித்த வீரபத்திரரின் இரதசாரதியாகிய பிரமதேவர், சிறிதும் மனம் சகியாமல் வீரபத்திரரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, சிறியோர் செய்த பிழையைப் பொருட்படுத்துவது தங்களுக்கு அழகல்ல. இவர்கள் எளியவர்கள். தயை செய்து இவர்கள் செய்த அபராதத்தை மன்னித்து அருள் செய்யவேண்டும் என்று பலவாறு துதிசெய்ய, அவரும் மனமிரங்கினார். அதனால் முன்பு போரில் இறந்தவர்களும் அஞ்சியோடியவர்களும் நீங்க, மற்றவர்கள் வீரபத்திரமூர்த்தியைத் துதித்தார்கள்.
சிவரூபியே! சிவபக்தனே! சூலபாணியே! ஆயிரஞ் சிரங்களையுடையோய் யக்ஞனைச் சங்கரித்தவனே! எண்ணற்ற தேவர்களை அழித்தவனே! தக்ஷனின் தலையை அறுத்தவனே! திரிநேத்திரங்களையுடையவனே! சந்திரனைக் காலால் தேய்த்தவனே பானுவின் பற்களை உடைத்தவனே! சூரியனின் கண்ணைத் தொலைத்தவனே! விஷ்ணு முதலியோரை பிணியூட்டிய கன்யனே! அரமகளிரைத் தண்டித்தவனே! சரணம் சரணம் க்ஷமிக்க வேண்டும்! என்று பலவகையாகத் துதித்து, நாங்கள் அறிவீனர்களாகச் சிவ நிந்தை செய்த தக்ஷனுடன் சேர்ந்த குற்றத்தை பொறுத்தருளவேண்டும் என்று விண்ணப்பம் செய்தார்கள். வீரபத்திரர் தயாள பூதராய்த் தம் கணங்களால் அவர்களைப் பிணைத்த தலைகளை அவிழ்க்கச் செய்து, அவர்களையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானை அடைந்து சேவித்தார். தேவர்களும் பணிந்தார்கள். அப்போது மஹாதேவராகிய சாம்பவமூர்த்தி, மதியீனர்களே! இதுவரை நீங்கள் செய்த குற்றங்களைப் பொறுத்தோம் என்று கூற அவர்கள் மரணமுற்று மகிழ்வு பெற்று, ஆர்ப்பரித்துக் குதித்துக் கூத்தாடினார்கள். சிவபெருமான் மகிழ்ச்சியுடன் விளங்குவதைக் கண்ட கமலாசனன், அவரைப் பணிந்து சர்வலோக சரண்யா! என் தந்தையே! உம் திருவடியில் வந்து நிற்கும் அடியார்கள் செய்த குற்றத்தை மன்னித்து அருள் செய்தீர். இனி வீரபத்திரரால் உயிர் இழந்த தேவ, யட்ச, கின்னரர், கருட, சித்தவித்தியாதர ரிஷிகள், தவசியோர் யாவரும் உயிர் பெற்றெழும்படித் திருவருள் புரியவேண்டும் என்று பிரார்த்திக்க சிவபெருமான் தேவியின் திருமுகத்தைப் பார்த்துப் புன்னகை செய்து அவ்வாறே ஆகுக! எனத் திருவாய் மலர்ந்தருளினார். விஷ்ணு முதலாக ஸ்தம்பித்திருந்தவர்களும் கரஞ்சிரம் முதலியன அறுபட்டு வீழ்ந்து கிடந்தவர்களும் இறந்தவர்களும் சுவாதீனப்பட்டும் தம் தம் அவயவங்கள் வரப் பெற்றும் உயிர்பெற்றும் ஒன்றுகூடி, இந்திரன் முதலிய திக்குபாலகருடன் சிவ சன்னதியை அடைந்து சாஷ்டாங்கமாகப் பணிந்தனர். பிரமன், சிவபெருமானை நோக்கி, எந்தையே! எல்லோரும் உயிர்பெற்று எழுந்து விட்டார்கள். இவர்களுக்கு இத்தகைய வினை விளைவித்த கொடியோனாகிய தக்ஷனையும் எழுப்ப வேண்டும்! என்று வேண்ட சிவபெருமான் மனங்களித்து, தக்ஷனுடைய மதியின்மையை எல்லோருக்கும் விளங்கச் செய்யும் பொருட்டு, அவனுக்கு ஆட்டுத்தலை அளித்து எழுப்பினார். தக்ஷன் சங்கரனைப் பணிந்து தலை வணங்கி நின்றான். சிவபெருமான் அவன் மீது தயை வைத்து, அவனையும் ஒரு கணநாதனாக்கினார்.
விஷ்ணுமூர்த்தி, பிரமனுடன் வந்து பணிந்து, அடியேன் செய்த அபராதத்தை மன்னிக்க வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமான் விஷ்ணுவை முதலாகவுடைய தேவர்களையும் முனிவர்களையும் நோக்கி, நீங்கள் அனைவரும் செய்த குற்றங்கள், உங்கள் அறியாமையால் செய்தவையாகையால் அவற்றை நாம் மனம் பொறுத்தோம். இனி எதற்கும் அஞ்ச வேண்டாம்! என்று அவர்களைத் தேற்றிப் பரிபூரணமான கடாக்ஷம் செய்து விடை கொடுத்து அனுப்ப, அவர்கள் வீரபத்திரரையும் பணிந்து தங்கள் நகரங்களை அடைந்தார்கள். பிறகு உமாதேவி, வீரபத்திரரையும் காளிகாதேவியையும் தம் அருகே அழைத்து, அன்போடு அணைத்து சந்தோஷ வார்த்தைகளைக் கூறிப் பலவரங்கள் அளித்து வீரபத்திரருக்கு ஓர் உலகம் அளித்து விடுத்தாள். சிவபெருமானும் உமாதேவியாரும் தாம் தக்ஷயாகத்துவம்சம் செய்ததைக் காணும்படித் தங்கிய இடத்திலிருந்த ரைப்பிய முனிவருக்கு அனுக்கிரகஞ் செய்து, அந்தர்த்தானமாய்ச் சென்றார்கள்.

21.தேவி கவுர நிறம் பெற்றது
முனிவர்ளே! முன்பு மந்திரமலையானது சிவபெருமான் பார்வதி தேவியாரோடும் கணேசர் முதலிய புதல்வர்களோடும் பரிசனங்களோடும் தன்னிடத்தில் வசிக்க வேண்டும் என்று நெடுங்காலம் பெருந்தவஞ் செய்தமையால், அந்தத் தவத்திற்கு இரங்கிய சிவபெருமான் உமாதேவியாருடனும் பிரமத் கணங்களுடனும் அந்தப் பர்வதத்தை அடைந்தார். அந்த மந்திர மலையினுச்சியில் வெண்ணிலா விளங்கும் தோற்றமானது அது சிவ கடாக்ஷத்தால் பெற்ற தாவள்யமான முத்துக்குடை போன்றிருந்தது. அந்த மலையில் உச்சியிலிருந்து அருவி ஆறுகளிழியுங் காட்சியானது. அதற்கு மலைகளில் தலைமை, சிவ கடாக்ஷத்தால் உண்டாவது பற்றி மங்கல ஸ்நானஞ் செய்தது போலிருந்தது. அந்த மலைச் சாரலில் கவரிமான்கள் தங்கள் வால்களை அசைத்துக் கொண்டிருந்தது, சாமரை வீசுவது போல இருந்தது. அந்தச் சிறப்புடைய மந்திரமலையில் சிவபெருமான் உமாதேவியாரோடும் கூடி, அநேக காலம் வாழ்ந்திருந்தார். அப்படியிருக்கும்போது சும்பன் நிசும்பன் என்ற இரண்டு அசுரர்கள் பிரமனை நோக்கிப் பஞ்சாக்கினியின் நடுவேயிருந்து அநேக காலம் அன்ன பானாதிகளை வெறுத்து, அருந்தவஞ் செய்தார்கள். அவர்களது தவத்தையும் திடபக்தியையும் கண்ட பிரமன் அவர்கள் முன்பு தோன்றி, தவத்தால் இளைத்த அவர்களுடைய உடலைத் தம் கரத்தால் தடவிப் பூரிக்கச் செய்து, நீங்கள் எதைக் கருதி இவ்வாறு தவஞ்செய்தீர்கள்? அதைச் சொல்லுங்கள் என்றார். சும்ப நிசும்பர்கள் பிரமனைச் சாஷ்டாங்கமாக வணங்கி, இருகரங்களையும் விரித்து, கடவுளே! நாங்கள் இருவரும் இறவாமல் இருக்கவேண்டும். அதற்குரிய வரத்தைத் தர வேண்டும் அல்லது சர்வலோக மாதாவாகிய உமாதேவியாரின் தேகத்திலிருந்து ஒரு கன்னிகை தோன்றின் அந்தக் கன்னியால் நாங்கள் இறக்க வேண்டும். அவ்வாறின்றி உலகினரால் ஒருவராலும் நாங்கள் இறவாத வரத்தைக் கொடுத்து அருள் செய்ய வேண்டும் என்று கூறிப் பணிந்து வரங்கேட்டார்கள். பத்மாசனன் அவ்வாறு நிகழும் என்று கூறித் தம்முலகம் சென்றார். அந்த வரத்தால், தருக்கு எய்திய தானவர்கள் இருவரும் தேவர் உலகத்தையடைந்து, இந்திரனை எதிர்த்து, அதனை முறியடித்து, அவனுடைய வளங்களையெல்லாம் கொள்ளையடித்து அமரர்களையும் அரம்பையர்களையும் ஏவலர்களாகித் தேவலோகம் முழுமையும் தங்கள் கட்டளைக்கு உட்பட்டு நடக்கும்படிச் செய்து பெரும் புகழோடு வாழ்ந்தார்கள்.
தேவேந்திரன் முதலிய தேவர்கள் படுகின்ற துன்பங்களைக் கண்ட மலரோன் மனம் வருந்திச் சிவபெருமானிடம் சென்று அவரை வணங்கி, ஜகதீசா! கொடியோராகிய சும்பநிசும்பர்கள் செய்யும் உபத்திரவங்களைத் தாங்க முடியாமல் தேவேந்திரன் முதலியவர்கள் தவிக்கிறார்கள். தேவலோகமும் பூவுலகமும் பெரும்பாடுபடுகின்றன. அமரரும் அரம்பையரும் சிறையிலடைப்பட்டிருக்கிறார்கள். ஆகையால் அந்த அசுரர்களை அழிக்கத் தேவரீர் திருவுள்ளஞ் செய்தருள வேண்டும். அதாவது உமாதேவியாரின் திருமேனியில் ஒரு கன்னிகை தோன்றி அவர்களை அழித்தாலன்றி அவர்கள் ஒருவராலும் இறவாதிருக்கும்படியான வரத்தை நானே கொடுத்தேன். அவர்களை விரைவில் அழிக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்தார். பிறகு பெருமானிடம் விடைபெற்றுச் சென்றார். பகவான் பிரமன் சொல்லியதை கருத்தில் கொண்டு, உமாதேவியரை நோக்கி, ஹே காளீ (கருநிறமுடையவளே) வருக! என்று அழைத்தார். அதற்கு உமாதேவியார் ஸ்வாமீ! நீரும் அடியாளும் சிறு பிள்ளைகளல்ல. இன்று தான் திருமணஞ் செய்துகொண்டு, நூதனமாகவா ஒருவரையொருவர் முகம் பார்த்தோம்? நன்றாக இருக்கிறதே! இப்போது தான் உமக்கு என்னிடத்தில் வெறுப்பு உண்டாயிற்றோ? உலகத்துப் பிராணிகளையெல்லாம் சையோகத்தில் அழுந்தச் செய்யும் மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்து, காவியாடையும் உத்திராக்ஷ மாலையும் பிரம கபாலங்களும் அணிந்து தவவுரு கொண்ட தங்களுக்கும் காம விருப்பம் உண்டாகியிருப்பது விநோதமே! இவ்வளவு காலம் என்னுடன் கூடியிருந்தும், இப்போது நான் அழகற்ற கருநிறமுடையவள் என்றும் இகழ்ந்து விட்டீர்கள்! அங்கக் குறைபாடுகள் ஏதுமின்றி உத்தம லக்ஷணங்கள் எல்லாம் அமைந்திருந்தாலும், சிறந்த ஆடையாபரணங்களை அணிந்திருந்தாலும், அத்தனை அழகுகளையும் கணவன் கண்டு களிக்காத மனைவியானவள், பெண்களில் பதரைப் போன்றவள் என்பதில் ஐயமில்லை. தங்களுக்கு என் கறுமை நிறத்தில் விருப்பமில்லாமல் வெறுப்பு ஏற்பட்டதால் இனி இந்த காருருவை ஒழிக்கும்படித் தங்களைக் குறித்துப் பெருந்தவஞ்செய்து, தங்கள் திருவருளாலேயே பொன்னிற மேனியை அடைந்து தங்களுக்கே மனைவியாகிறேன் என்று கூறிக் கண்களிலிருந்து முத்துக்கள் தெறித்தாற்போல கண்ணீர் உகுத்தாள். தேவியின் துயரைக் கண்ட சிவபெருமான், மனஞ் சகியாமல் தேவியைத் தம் இருகரங்களாலும் அணைத்துக் கொண்டு, பெண்ணே நீ வருந்த வேண்டாம். நான் விளையாட்டாக அழைத்தேனே தவிர, வேறொன்றுமில்லை. இதற்காக நீ கவலைகொள்ளவும் வேண்டாம். தவமும் செய்யவும் வேண்டாம். நாம் இருவரும் கலந்திருந்தாலன்றி உலகம் விருத்தியடையாது. ஆகையால் நீ உன் கோபத்தைத் தணித்துக் கொள்ளவேண்டும் என்றார்.
உமாதேவி தன்னை அணைத்துக்கொண்டிருந்த ஸ்வாமியின் கரங்களை மெல்ல நெகிழ்த்தி, இப்படித்தான் தாங்கள் காலமெல்லாம் என்னை ஏத்தி, ஆசை போலக்காட்டி, உமது காலத்தைக் கழிக்கிறீர் ஒன்றும் வேண்டாம். நான் இனி வேறொரு தேகத்தைப் பொன்னிறமாக அடையவேண்டுகிறேன் என்று கூறி, சிவபெருமானை முறைப்படி வலம் வந்து வணங்கி விடைபெற்றுப் புறப்பட்டு இமயமலையை அடைந்தாள். அங்குள்ள ஓர் ஏரிக்கரையில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து அதை வேதாகம விதிப்படி பூஜை செய்து ஒரே மனதாக நித்திரை, அன்னம், ஆகாரம் முதலானவை நீக்கி அவ்விடத்தில் தவத்தில் அமர்ந்தாள். அம்மை தவஞ் செய்த இடத்தின் அருகே ஒரு பெரிய வேங்கைப் புலி, கைகால்களில் இயக்கமில்லாமல், பசியால் வருந்திக்கொண்டிருப்பதைத் தேவி கடைக்கண் சாத்தியருளினாள். அதனால் அந்தப் புலி தன் ஆணவம் முதலிய மலங்களும் பிணிகளும் நீங்கிப் பேருணர்வு பெற்றுப் பண்டைய ஞானத்துடன் இவள் பரமேஸ்வரி என்றும் தெரிந்து கொண்டு இங்கு நான் வந்ததும் தேவி இங்கு வந்ததும் என் பாக்கியம் தான்! என்று பரம சந்தோஷமடைந்தது.
முனிவர்களே! தேவியின் செயல்கள் இப்படியிருக்க சும்ப நிசும்பர்கள் செய்யும் உபத்திரவங்களைச் சகிக்காத தேவர்கள் பிரமதேவனை நோக்கி, பிதாமகனே! எங்களையும் படைத்து இந்த அசுரர்களுக்குப் பெரும் வரங்களையும் கொடுத்து எங்களைத் துன்புறுத்துவது உமக்கு நன்றோ? இத்துயர் நீங்க அருள்புரிய வேண்டும்! என்று முறையிட்டார்கள். பிரமதேவன் அமரர்களை யெல்லாம் அழைத்துக்கொண்டு இமயமலையை அடைந்தான். இமயத்தின் உச்சியில் ஏறித் தேவி செய்யும் தவத்தின் மகிமையால், அங்கிருந்த மரங்கள் ருதுவேற்றுமையில்லாமல் மொட்டு மலரும் காயும் கனியும் நிரம்பப்பெற்றும், பசும்புற்கள் செழித்து வளர்ந்தும் மிருகங்கள் வேற்றுமையன்றி உறவு கொண்டும் எல்லா வனப்புகளும் பொருந்தி விளங்கியது. அந்தத் தபோவனத்தை அடைந்து, பிரமனும் அவருடன் வந்த அமரர் கூட்டத்தாரும் பணிந்தார்கள். தேவர்களும் வேதங்களும், முனிவர்களும் தவஞ்செய்து தரிசித்தற்கு அரிய சர்வ ஜகன்மாதாவாகிய நீ யாது கருதித் தவஞ் செய்கிறாய்? தாயே! தவச்செயல் என்பது இத்தகையது நியமங்களையுடையது என்று எங்களைப் போன்றோர் உணர்வதற்காக இவ்வாறு தவஞ் செய்து காட்டுகிறாயோ? உன் உள்ளத்திலுள்ள கருத்து என்ன? என்று கேட்டார்கள். உமாதேவி பிரமனை நோக்கி, யான் எனது கரிய உருவத்தை ஒழித்துப் பொன் உருவை அடைய விரும்பித் தவஞ் செய்கிறேன். இது விஷயத்தில் உன் கருத்து என்னவோ? என்று கேட்டாள்.
பிரமதேவன் தேவியைப் பணிந்து, தாயே! இதற்காகவா தவஞ் செய்வது? நீ உன் சரீரத்திலிருந்து நீங்கிப் பொன் உருவையடைந்து, முன்பிருந்த உருவால் ஒரு கன்னிகையைப் படைத்து, இந்தத் தேவர்களை அலைத்துக் கொண்டிருக்கும் சும்ப நிசும்பர்களைத் தொலைத்து, அவர்களால் தேவர்களுக்கு உண்டான துயரை அகற்றி, தேவர்களுக்குச் சுகத்தை உண்டாக்குவாயாக! என்றார். உடனே உமாதேவி தன் காருருவை விட்டுப் பொன்மலை போன்ற பேருருவங் கொண்டாள். அப்போது தேவர்கள் மலர்மாரி பொழிந்தார்கள். ஈஸ்வரி, வீழ்த்திய அந்தக் கரியவுருவம் எட்டுக் கரங்களையும் பாசம், அங்குசம், தண்டம், சூலம், வாள், வேல், வஜ்ஜிரம் முதலிய ஆயுதங்களையும் ஏந்தி, உலகிலுள்ள கொடியவர்களைச் செருக்கும் ஆற்றலுடைய துர்க்கையாகி, ஈஸ்வரியைப் பணிந்து அவள் எதிரில் கை கட்டி நின்றாள். அப்போது பரமேஸ்வரி, அத்துர்க்கையை நோக்கி, அடிப்பெண்ணே! நீ பிரமனுடைய கட்டளையை மீறாது, அவன் சொற்படி நின்று, நன்மை செய்வது என்பதைப் பற்றிச் சிறிதும் அறியாத அசுரர்களை ஹதஞ் செய்து, தேவர்களுக்கு நன்மை செய்வாயாக! என்று உரைத்தாள். அப்போது பிரமன், ஒரு சிங்கத்தைச் சிருஷ்டி செய்து, அவளுக்கு வாகனமாகக் கொடுத்து, ஆகாயமளாவிய விந்திய மலையில் வாசஞ் செய்து, தேவமானவர்களின் மாமிசத்தை யுண்டு, உலகத்தைத் துன்புறுத்தும் அசுரர்களை அழிக்க வேண்டும் என்று கூறினார். துர்க்கை உடனே தன் சிங்க வாகனத்தில் ஏறியமர்ந்து அநேகம் குழைகளையுடைய விந்திய மலையை அடைந்து, அசுரர்களுடன் பலவகையாகப் போர் செய்து, அவர்களை வென்று, தேவர்கள் தினந்தோறும் தன்னைப் பணி செய்து, வாழ்த்தும்படி வசித்திருக்கிறாள்.

22.கவுரி மந்திரமலையை அடைந்தது
முனிவர்களே! உமாதேவியார் பிரமனை நோக்கி, பிரமனே! இதோ இருக்கும் புலியானது யான் தவஞ்செய்ய இந்த இடத்திற்கு வந்தது முதல் என்னை விட்டுப் பிரியாமல் இங்கேயே ஒரு காவல்காரனைப் போல இருந்து வருகிறது. இந்தப் புலி, நோயுற்று கால்களில் வலுவிழந்து, நடக்கவும் சக்தியற்று துன்பத்தால் தவித்தது. அதைக்கண்டு மனஞ்சகியாத நான், அதன் நோயை அகற்றினேன் என்று கூறினாள். பிரமன் தேவியைப் பணிந்து, அன்னையே! இஃது ஒரு ஓர் புலி என்று எண்ணற்க. ஓர் அசுரன் தன் மாயையால் புலியுருவ மேற்று இருக்கிறான். பாம்புக்கும் பால் வார்த்தாற்போல இந்த தீயவனுக்கு அருள் செய்து விட்டாயே! இது தர்மமல்ல. இவனால் யாருக்கு என்ன தீங்கு விளையுமோ? என்றான். அதற்கு ஸ்ரீகவுரி, பிரமனை நோக்கி, அசுரனாக இருந்தால் தான் என்ன? அவனும் தமது படைப்புத்தானே! எந்தப் பிறவியாக இருந்தாலும் அந்தப் பிறவி துயரத்தால் அவதிப்படும் போது, அந்த அவதியைத் தன் வினையே என்று கருதாமல், அந்த வினையையும் என்னால் நீக்கமுடியும் என்று பூரணமாக நம்பி வேண்ட, அந்தப் பிராணியைக் கண்ட நான். மனங்கனிந்து இந்த வேங்கைவரி புலியின் நோயைத் தீர்த்தேன், என்று திருவாய் மலர்ந்தருளினாள். அதைக் கேட்ட பிரமன், தேவியைப் பணிந்து, தேவி! உன் திருவருள் இந்தக் கொடிய பிராணியின் மீது பரிபூரணமாக இருப்பதை அறியாமல் நான் கூறியதை மன்னித்தருள்வாயாக! உனது திருக்கமலத் தாள்களில் பக்தியுடையவர்கள், பெரும் கொடும்பாவிகளேயினும், சிறிதும் துக்கத்திற்கு ஆளாக மாட்டார்கள். உன் திருவடிக்கு அன்பு செய்யாதவர்கள் மகா புண்ணியசாலிகளாயினும், எண்ணற்ற யாக தவங்களைச் செய்தவர்களாயினும், இவற்றால் சிறிதும் பயனடைய மாட்டார்கள்! உன் திருவருள் பிரகாசமுண்டானால் துரும்பு கூட பிரம பட்டத்தை அடையும். உன் திருவருளில்லையென்றால் பிரமனும் தன் பதவியை இழந்து துரும்பாவான். நீயே உலக சிருஷ்டியாதி செயல்களுக்கெல்லாம் ஏகத்தலைவி! ஆகவே, உன் கிருபை இருந்தால், இப்புலியுருவைக் கடையேறச் செய்க! என்றார். பிறகு, தேவியிடம் விடைபெற்று, தம்முடன் வந்த தேவர்களுடன் தன் மனோவதி நகரை அடைந்தார். பிறகு கவுரி தேவி அந்தப் புலியைத் தன்னுடன் வரச் செய்து, தன்னைக் குமாரியாகக் கொண்ட தாய் தந்தையரிடம் விடைபெற்று, அநேகம் மங்கையர்கள் பணி செய்யத் தனது பொன்னிற மேனியுடன் மந்திர மலையை அடைந்தாள்.

23.சோமநந்தியின் சரிதம்
முனிவர்களில் சிறந்தவர்களே! தேவி கவுரி மந்தர மலையை அடைந்த காலத்தில், சிவபெருமான் முதலிய யாவருக்கும் உண்டான மகிழ்ச்சியை என்னால் வர்ணித்துச் சொல்ல இயலாது. கவுரி மந்தரமலையை அடைந்ததுமே, நந்திதேவர் முதலிய சிவகணநாதர்கள் அங்கு சென்றார்கள். பானுகம்பன், சங்குகன்னன், குண்டோதரன் முதலிய கணத்தலைவர்களும் பலகோடி உருத்திரர்களும் தேவியைப் பணிந்து, பற்பல வாத்தியங்களை முழக்கினார்கள். தேவ துந்துபிகள் முழங்கின. அப்சர மங்கையர் நடனமாடினர். நாரதர் வீணாகானஞ் செய்தார். தேவ முனிவர் வாழ்த்தினார்கள். அரம்பையர்கள் மங்களகீதங்களைப் பாடினார்கள். இவ்விதமாக அனைவரும் மகிழ்ந்திருக்க, தேவி கவுரி, சிவசன்னதிக்குள் நுழைந்து சிவபெருமானைப் பணிந்து எழுந்தாள். அப்போது சிவபெருமான் மகிழ்ச்சியடைந்து, தேவி கவுரி! இப்போது தான் உன் கோபம் மாறியதோ? என் சொல்லுக்கும் கோபம் கொள்ளலாகுமோ? நாம் இருவருமே மாறுபட்டோமானால் உலகம் யாவுமே அக்கினியால் அழிந்துவிடும். என்னுடைய உருவமோ அக்கினி! உன் உருவமோ சந்திரன்! நீ என்னுடன் கூடியிருப்பதே உலக விருத்திக்குக் காரணமாகும். அக்கினியும் சோமனும் சம்பந்தப்பட்ட இந்த உலகம், சொல்லும் பொருளுமாகிய இவற்றின் தன்மையேயாகும். அவற்றில் நீ சொல்மயம். நான் பொருள்மயம். நீயே வித்தை! யானோ அந்த வித்தையடையும் ஞானம்! நீயே என் ஆணையாகையால், நீ என் ஆணையைக் கடந்தால் நான் ஈஸ்வரனாக விளங்க முடியுமா? இத்தகைய நியாயமிருக்க, நீ என்னை நீங்கும் வகையாது! தேவர்கள் துயரம் அகன்று, அவர்களுக்குச் சுகமுண்டாகும்படி விநோதார்த்தமாக உன்னைக் காளீ என்று அழைத்தேன். அதற்கு நீ சினந்து கொண்டாய்! அதுவும் உலகத்திற்கு உதவியாயிற்று என்று கூறினார்.
அதைக் கேட்ட கவுரி மனங்களித்து புன்னகை செய்து தான் தவஞ்செய்யும் போது துர்க்கை தோன்றியதும் அவளால் சும்பநிசும்பர்களைக் கொன்று, தேவர்கள் மகிழ்ச்சியடைந்ததும், அவனைப் பிரமனது கட்டளையில் இருத்தியதும் ஆகிய அனைத்தையும் கூறி, பிறகு சிவபெருமானைப் பணிந்து, எம்பெருமானே! நான் தவஞ்செய்து கொண்டிருக்கும் போது, இந்தப் புலி என்னைப் பணிந்து, எனக்குக் காவல்புரிந்து, தான் உஜ்ஜீவிக்கக் கருதி என் அருகிலேயே வசித்திருந்தது. இதை நான் என்னுடன் கொண்டு வந்தேன். ஆகையால் இதுவும் ஒரு கணநாதனது நம் நந்தியோடு வாயிற்படிக் காத்துக் கொண்டிருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்று விண்ணப்பித்தாள். சிவபெருமான் அந்தப் புலியின்மீது மனமிரங்கி அருள்செய்ய, அது கஞ்சுகம் பூண்டு, பொற் பிரம்பேந்தி, வாளும் தரித்து, நந்தி தேவருடன் வசித்து, அதிகாரஞ் செலுத்தும் சோம நந்தி என்ற பெயரைப் பூண்டது. அதைக் கண்ட அமரர்களும் முனிவர்களும் ஆனந்தமடைந்தார்கள். உமாதேவியும் பெரிதும் மகிழ்ந்தாள். சிவபெருமான் தேவி கவுரிக்கு, அநேக ஆபரணங்களும் மலர் மாலைகளும், பீதாம்பரங்களும் அணிவித்து, தேவியுடன் கூடி வாழ்ந்திருந்தார் என்று வாயுதேவன் கூறினார்.

24.உலகம் அக்கினி சோமமயம்
இந்தப் பிரபஞ்சம் அக்கினி சோமாத்மகமாகவும், சப்தார்த்த ஸ்வரூபமாகவும் இருக்கிறது என்றும் சிவாக்ஞையே சிவசக்தி என்றும், சிவபெருமான் உமாதேவிக்குக் கூறியதாகச் சொன்னீர்களே! அந்த விஷயத்தைச் சற்று விரிவாகச் சொல்ல வேண்டும் என்று முனிவர்கள் கேட்க, வாயுதேவன் சொல்லத் துவங்கினார்.
முனிவர்களே! அக்கினி என்பது ஈஸ்வர சம்பந்தமான கோர தேஜோரூபமாகும். சோமம் என்பது சிவசக்தியின் அமிர்தரசஸ்வரூபம். அக்கினியில் அமிர்தம் உண்டாவது அதனால் அந்த அக்கினி விருத்தியடைதலும், அந்த அக்கினியிலேயே அவியைச் சொரிவதால் பயிர் உண்டாக மழை பொழிதலுமாகும். இந்தக் காரணங்களால் உலகம் அக்கினி சோமாத்மகம் ஆகும். அக்கினியானது அமிர்தத்துடன் ஸ்தூலசூஷ்மங்களாகி, நெருங்கிய பூதம் முதலியவற்றுடன் பொருந்திச் சாரமாகவும் ஒளியாகவும் இருக்கும். ஒளி சூரியனும் அக்கினியுமாகும். அமிர்தமோ சந்திரனும் அலைகள் பொருந்திய தண்ணீருமாகும். அவை அவ்வாறே உலகுக்குப் பயன்படும் அக்கினியே சிவமயம். அமிர்தமே சக்திமயம். இந்த அக்கினி சோமாத்மகமாகவே உலகம் விளங்கும். அக்கினிகளிலிருந்து அமிர்தம் தோன்றி, அந்த அக்கினியிலேயே ஒழுகும். ஆகையால், உலகம் சிவசக்திமயமாகும். அந்த அக்கினியால் உலகத்தை (நான் என்ற அகப்பற்றையும் எனது என்ற புறப்பற்றையும்) நீறுப்படுத்திய பஸ்மத்தை அணிந்தவர்கள். பாவம் ஒழிந்து சிவமயம் ஆவார்கள். மூலாதாரத்திலுள்ள அக்கினியால் தேகத்தைக் கொளுத்தி அந்தச் சாம்பலை மேலேயுள்ள அமிர்தத்தால் நனைத்தவர்கள் மரணத்துயரம் ஒழிந்து நித்திய முக்தியை அடைவார்கள். யோகப் பயிற்சியையுடைய பெரியோர்கள் தங்கள் யோக வல்லமையால் சூரியகலை, சந்திரகலை என்னும் இரண்டையும் அக்கினி கலையினால் ஒடுக்கி, அந்த அமிர்தத்தைப் புசித்து, நித்தியானந்த மோக்ஷத்தை அடைவார்கள்.

Related Articles